தலைவர் 173 இயக்குநர் இவரா?.. 11 மணிக்கு வரப்போகும் அறிவிப்பு இதுதானா?.. அவர் லிஸ்ட்லையே இல்லையே ப்பா!
சென்னை: ஜெயிலர் 2 படத்தை முடித்துவிட்டு கமல்ஹாசன் தயாரிப்பில் ரஜினிகாந்த் நடிக்கவிருக்கிறார். இந்தப் படத்தை முதலில் சுந்தர்.சி இயக்குவதாக இருந்தார். ஆனால் சில காரணங்களால் அவர் வெளியேறிவிட்டார். அவர் வெளியேறியதை தொடர்ந்து புதிய இயக்குநரை தேடும் படலம் மும்முரமாக நடந்துவந்தது. இந்நிலையில் தலைவர் 173 படத்தை இயக்கும் இயக்குநர் பற்றிய அறிவிப்பு இன்று காலை 11 மணிக்கு வரும் என அறிவித்திருக்கும் நிலையில்; இயக்குநர் பற்றிய புதிய தகவல் கிடைத்திருக்கிறது.
கூலி படத்தின் தோல்விக்கு பிறகு நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் ஜெயிலர் 2 படத்தில் நடித்துவருகிறார் ரஜினிகாந்த். படத்தின் இறுதிக்கட்ட ஷூட்டிங் மும்முரமாக நடந்துவருகிறது. நாட்டின் பல்வேறு பகுதிகளில் படப்பிடிப்பை நடத்தும் நெல்சன்; முதல் பாகம் போன்றே இதையும் மெகா ஹிட்டாக டெலிவர் செய்துவிட வேண்டும் என்ற வெறியில் உழைத்துவருவதாக படக்குழுவுக்கு நெருக்கமான வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
தலைவர் 173: இந்தப் படத்தை முடித்துவிட்டு கமல்ஹாசன் தயாரிப்பில் தலைவர் 173 படத்தில் நடிக்கவிருக்கிறார் ரஜினி. இரண்டு பேரும் சேர்ந்து ஒரு படத்தில் நடிக்கவிருக்கிறார்கள் என கடந்த வருடத்தில் தகவல்கள் பரவின. இதன் காரணமாக பல வருடங்களுக்கு பிறகு ரஜினியும், கமலும் சேர்ந்து நடிக்கிறார்கள் என்று இரண்டு பேரின் ரசிகர்களும் மகிழ்ச்சியடைந்தார்கள். ஆனால் கமல் நடிக்கவில்லை; தயாரிக்க மட்டும் செய்கிறார் என்ற விஷயம் அவர்களுக்கு கொஞ்சம் ஏமாற்றத்தை கொடுத்தது.

வெளியேறிய சுந்தர்.சி: நடிக்கவிட்டாலும் பரவாயில்லை; இதாவது நடக்கிறதே என்று மனதை தேற்றிக்கொண்டார்கள். இப்படத்தை சுந்தர்.சி இயக்குவதாக இருந்தார். ஏற்கனவே ரஜினியை வைத்து அருணாச்சலம் படத்தை அவர் இயக்கியிருக்கிறார் என்பதால்; அவர் மீது உச்சக்கட்ட நம்பிக்கையை வைத்திருந்தார்கள். ஆனால் திடீரென தலைவர் 173 படத்திலிருந்து வெளியேறுவதாக அறிவிப்பு வெளியிட்டார். இது அனைவருக்குமே ஷாக்கை கொடுத்தது. ரஜினியின் படத்தை இயக்க பலரும் தவம் இருக்கும் சூழலில்; இவர் வேண்டாம் என்று செல்கிறாரே என பலர் பேசினார்கள்.
இன்று வெளியாகிறது அறிவிப்பு: சுந்தர்.சி சொன்ன கதையில் சில மாற்றங்களை ரஜினி, கமல் தரப்பு சொன்னதாகவும்; அதை ஏற்காமல் வெளியேறிவிட்டார் என்றும் கூறப்படுகிறது. அவர் போனதையடுத்து யார் இந்தப் படத்தை இயக்குவார் என்ற கேள்வி எழுந்தது. கண்டிப்பாக இளம் இயக்குநர்தான் படத்தை இயக்க வாய்ப்புகள் அதிகம் என்றும் கருதப்படுகிறது. யார் இயக்குவார் என்ற அதிகாரப்பூர்வ அறிவிப்பு இன்று காலை 11 மணிக்கு வருகிறது. அதை பார்ப்பதற்கு ரசிகர்கள் ஆவலோடு காத்திருக்கிறார்கள்.
சிபி சக்கரவர்த்திதான் இயக்குநரா?: இந்நிலையில் அந்த இயக்குநர் யார் என்பது குறித்த தகவல் வெளியாகியிருக்கிறது. அதன்படி சிவகார்த்திகேயனை வைத்து டான் படத்தை இயக்கிய சிபி சக்கரவர்த்திதான் தலைவர் 173 படத்தை இயக்கவிருக்கிறார் என்று சொல்லப்படுகிறது. ஏற்கனவே டான் படம் ரிலீஸான சமயத்தில் ரஜினியை சந்தித்து சிபி ஒரு கதை சொல்லியிருந்ததாக தகவல் ஓடியது. அது ரஜினிக்கு பிடித்திருந்ததால்; இப்போது அதையே சில மாற்றங்கள் செய்து இயக்கவிருப்பதாக திரைத்துறையினர் கூறுகிறார்கள்.


Click it and Unblock the Notifications











