கமல் தயாரிப்பில் ரஜினி நடிக்கும் தலைவர் 173.. மூத்த மகள் இயக்குகிறாரா?.. 2வது மகள் சொன்னதை கேளுங்க
சென்னை: கமல்ஹாசன் தயாரிப்பில் ரஜினிகாந்த் நடிக்கும் தலைவர் 173 படத்தை முதலில் சுந்தர்.சி இயக்குவார் என்று அறிவிக்கப்பட்டது. ஆனால் சில காரணங்களால் அவர் படத்திலிருந்து வெளியேற அடுத்ததாக யார் இயக்குவார் என்ற எதிர்பார்ப்புதான் அனைவரிடமும் எழுந்திருக்கிறது. இந்நிலையில் ரஜினியின் இரண்டாவது மகள் சௌந்தர்யா இந்தப் படம் குறித்து சில விஷயங்களை ஓபனாக பேசியிருக்கிறார்.
ரஜினிகாந்த்தும், கமல்ஹாசனும் இந்திய சினிமாவின் தூண்களாக திகழ்ந்துகொண்டிருக்கிறார்கள். ஆரம்பகாலத்தில் இரண்டு பேரும் சேர்ந்து ஏகப்பட்ட படங்களில் நடித்தார்கள். ஆனால் தொடர்ந்து சேர்ந்து நடித்தால் இரண்டு பேரின் வளர்ச்சியும் தடை படும் என்ற கமலின் அட்வைஸை கேட்டு இரண்டு பேரும் இனி சேர்ந்து நடிப்பதில்லை என்று முடிவு செய்து தனித்தனியாக நடித்து தங்களுக்கான சாம்ராஜ்ஜியத்தை உருவாக்கினார்கள்
மீண்டும் அமைந்த கூட்டணி: இத்தனை வருடங்களில் அவர்களை சேர்த்து படம் இயக்குவதற்கான முயற்சிகள் அவ்வப்போது நடந்தாலும் அது நிறைவேறவில்லை. இப்படிப்பட்ட சூழலில் சமீபத்தில் ஒரு அறிவிப்பு வெளியானது. அதில் கமல்ஹாசன் தயாரிப்பில் ரஜினிகாந்த்தின் தலைவர் 173 படம் உருவாகும் என்று குறிப்பிடப்பட்டு; சுந்தர்.சி படத்தை இயக்குவார் என்றும் தெரிவிக்கப்பட்டது. இதனால் சூப்பர் ஸ்டார் ரசிகர்கள் உச்சக்கட்ட மகிழ்ச்சி அடைந்தார்கள்.

வெளியேறிய சுந்தர்.சி: அந்தப் படத்தின் முதற்கட்ட வேலைகளை சுந்தர்.சி தொடங்கியிருந்த நிலையில்; சில காரணங்களால் அந்தப் படத்திலிருந்து வெளியேறும் நிலைமை உருவானது. அதற்கு யூகங்களாக பல காரணங்கள் சொல்லப்பட்டாலும்; சுந்தர் சொன்ன கதையில் கமலும், ரஜினியும் கொஞ்சம் மாற்றங்களை சொன்னதாகவும் அதை ஏற்க முடியாமல்தான் அவர் படத்திலிருந்து வெளியேறிவிட்டார் என்றும் ஒரு தகவலை ஆணித்தரமாக சொல்கிறார்கள் சினிமா மூத்த பத்திரிகையாளர்கள்.
யார் அடுத்த இயக்குநர்?: சுந்தரின் வெளியேற்றத்தை தொடர்ந்து இந்தப் படத்தை யார் இயக்குவார் என்பதுதான் மில்லியன் டாலர் கேள்வியாக இருக்கிறது. சில வாரங்களுக்கு முன்பு வெளியான தகவல்படி பார்க்கிங் இயக்குநர் ராம்குமார் பாலகிருஷ்ணன் சொன்ன கதை பிடித்துவிட்டதாகவும்; விரைவில் அதுகுறித்த அறிவிப்பு வெளியாகும் என்று சொல்லப்பட்டது. இந்நிலையில் இப்படம் குறித்து ரஜினியின் இரண்டாவது மகள் சௌந்தர்யா பேசிய விஷயம் ட்ரெண்டாகியிருக்கிறது.
சௌந்தர்யா பேட்டி: செய்தியாளர்களிடம் பேசிய அவர், "படையப்பா ரீ ரிலீஸையொட்டி உருவான ப்ரோமோ வீடியோவை நான் இயக்கினேன். அதுவே எனக்கு பெரிய பாக்கியம். கமல் தயாரிப்பில் ரஜினி நடிக்கும் படம் உறுதிதான். நிறைய கதைகள் கேட்டுக்கொண்டிருக்கிறார்கள். விரைவில் அறிவிப்பு வரும். அந்தப் படத்தை எனது அக்கா ஐஸ்வர்யா இயக்கவில்லை. அவர்தான் ஏற்கனவே அப்பாவை வைத்து லால் சலாம் படத்தை இயக்கிவிட்டாரே" என்றார்.


Click it and Unblock the Notifications











