“தலைவி“ ரிலீசாகி 3 நாளாச்சு... சொல்ற அளவுக்கு வசூல் இல்லை... பெரிய ஏமாற்றம் !
சென்னை : கங்கனா ரணாவத் நடித்த தலைவி திரைப்படம் வெளியாகி 3 நாட்கள் ஆன போதும் எதிர்பார்த்த வசூலை பெற்றுத்தரவில்லை.
Recommended Video
விடுமுறை நாளில் அதிகம் வசூலாகும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், வசூல் மிகவும் மோசமடைந்துள்ளது.
வரும் நாட்கள் வேலை நாட்கள் என்பதால் படிப்படியாக வசூல் மேலும் குறையவே வாய்ப்பு உள்ளது என்று சொல்லப்படுகிறது. இதனால் தயாரிப்பாளர் மிகவும் கவலை அடைந்துள்ளதாக கூறப்படுகிறது.

தலைவி
ஏ.எல். விஜய் இயக்கியிருக்கும் தலைவி ஜெயலலிதாவின் வாழ்க்கை வரலாற்றுத் திரைப்படம் தான் தலைவி. இத்திரைப்படத்தில் ஜெயலலிதாவாக கங்கனா ரணாவத்தும், எம்.ஜி.ஆராக அரவிந்த் சாமியும் நடித்துள்ளனர். மேலும், கலைஞர் கதாபாத்திரத்தில் நாசரும் நடித்துள்ளார். கடந்த ஆண்டே வெளியாக வேண்டிய இத்திரைப்படம் கொரோனா பரவல் காரணமாக தள்ளிவைக்கப்பட்டது.

வெள்ளிக்கிழமை வெளியானது
நீண்ட போராட்டத்திற்கு பிறகு தலைவி திரைப்படம் விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு செப்டம்பர் 10ந் தேதி வெள்ளிக்கிழமை திரையில் வெளியானது. வட இந்தியாவில் பிவிஆர், ஐநாக்ஸ் போன்ற மல்டிபிளக்ஸ்கள் தலைவியை திரையிடவில்லை. படம் வெளியாகி நான்கு வாரங்கள் கழித்தே படம் ஓடிடிக்கு தர வேண்டும் என்ற இவர்களின் கோரிக்கையை தயாரிப்பாளர் தரப்பு மறுத்ததே இதற்கு காரணம் என்று கூறப்படுகிறது.

ஏமாற்றம்
இந்த திரைப்படம் வெளியான முதல்நாளில் இந்திப் பதிப்பு 25 லட்சமும், தமிழகத்தில் 80 லட்சமும், பிற மாநிலங்களில் 1.25 கோடியை மட்டுமே படம் வசூலித்துள்ளது. தலைவி திரைப்படம் வெளியாகி 3 நாட்களில் வெறும் 4.86 கோடியை மட்டுமே வசூலித்துள்ளது. வார கடைசியில் அதிக வசூலைத்தரும் என்று எதிர்பார்த்த தயாரிப்பாளருக்கு இந்த தகவல் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. வெள்ளிக்கிழமை விநாயகர் சதுர்த்தி அடுத்த சனிக்கிழமை, ஞாயிற்றுக்கிழமை என தொடர்ந்து விடுமுறை இருந்த போதும் பெரிதாக இப்படம் வசூலை ஈட்டித்தரவில்லை. வரும் நாட்கள் வேலை நாட்கள் என்பதால் வசூல் குறைவே வாய்ப்பு உள்ளது இதனால் தயாரிப்பாளர் விஷ்ணு இந்தோரி கவலை அடைந்துள்ளதாக கூறப்படுகிறது.

பாராட்டிய ரஜினி
தலைவி திரைப்படத்தை பார்த்த அனைவரும் இப்படம் குறித்து நல்ல விதமான கருத்துக்களையே தெரிவித்து வருகிறார்கள். அதாவது படம் நல்ல இருக்கிறது என்றும், பரவாயில்லை பார்க்கலாம் என்றும் கருத்து தெரிவித்து வருகின்றனர். சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்திற்கு இப்படம் தனிப்பட்ட முறையில் பிரத்யேகமாக திரையிட்டுக் காட்டப்பட்டது. இப்படத்தை பார்த்த ரஜினிகாந்த் இயக்குநர் ஏ.எல்.விஜய்யை தொலைபேசியில் அழைத்து பாராட்டியுள்ளார். மேலும் நடிகை கங்கணா ரணாவத், அரவிந்த்சாமி, சமுத்திரக்கனி உள்ளிட்ட படக்குழுவினர் அனைவருக்கும் தனது வாழ்த்தை தெரிவித்து இருந்தார்.


Click it and Unblock the Notifications











