ஒரு பக்கம் ’கோட்’ அப்டேட் கொடுக்கும் விஜய்.. இன்னொரு பக்கம் பர்த்டே கொண்டாட்டம்.. என்ன பாஸ் இது?
சென்னை: நடிகர் விஜய் இன்று அதாவது ஜூன் 22ஆம் தேதி தனது 50வது பிறந்த நாளைக் கொண்டாடுகின்றார். இவர் தற்போது இயக்குநர் வெங்கட் பிரபு இயக்கத்தில் தி கோட் படத்தில் நடித்து வருகின்றார். இது இவருடைய 68வது படம். இதையடுத்து தனது 69வது படத்தில் நடித்து முடித்த பின்னர் முழு நேர அரசியலில் களமிறங்கப்போவதாக ஏற்கனவே அறிவித்திருந்தார். கடந்த பிப்ரவரி 2ஆம் தேதி தமிழக வெற்றிக் கழகம் என்ற கட்சியைத் தொடங்கிய பின்னர் 2026 சட்டமன்ற தேர்தலில் கட்சி தேர்தலைச் சந்திக்கும் எனக் கூறியிருந்தார்.
இந்நிலையில், கடந்த சில தினங்களாக தமிழ்நாட்டை உலுக்கி வரும் சம்பவமாக கள்ளக்குறிச்சி விஷசாராய மரணங்கள் தொடர்பான செய்திகள் மக்களை பீதி அடையச் செய்துள்ளது. இதுவரை 55 பேர் உயிரிழந்துள்ளனர். இதில் பெண்களும் திருநங்கைகளும் அடங்குவர். நேற்று முன்தினம் கள்ளக்குறிச்சி விவகாரம் தொடர்பாக கண்டன அறிக்கை வெளியிட்ட விஜய், அதே நாளில் நேரடியாக களத்திற்குச் சென்று பாதிக்கப்பட்ட மக்களுக்கு ஆறுதல் கூறினார்.

இந்நிலையில், நேற்று, தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய் தனது பிறந்தநாள் கொண்டாட்டங்களில் கட்சியினர் ஈடுபடவேண்டாம் எனவும், கள்ளக்குறிச்சிக்குச் சென்று, பாதிக்கப்பட்ட மக்களுக்கு முடிந்த உதவிகளைச் செய்யும்படியும் உத்தரவிட்டிருந்தார். இதனால் விஜய்யின் பிறந்த நாள் கொண்டாட்டங்கள் எதுவும் இருக்காது என நினைத்துக் கொண்டு இருக்கும்போது, தி கோட் படத்தின் அப்டேட்டுகள் மாறி மாறி வந்து கொண்டு உள்ளது. இது ரசிகர்களுக்கு ஒருபுறம் மகிழ்ச்சியைக் கொடுத்தாலும், விஜய் மீது விமர்சனங்கள் எழ காரணமாக அமைந்துள்ளது.
அப்டேட் மேல் அப்டேட்: தி கோட் படத்தின் அப்டேட்டுகளை படத்தின் தயாரிப்பாளர் அர்ச்னா கல்பாத்தி வெளியிட்டு வந்தார். இந்நிலையில், இன்று, நண்பகல் 12 மணிக்கு விஜய் தனது எக்ஸ் தளத்தில் தி கோட் படத்தின் இரண்டாவது பாடலான சின்ன சின்ன கண்கள் பாடலின் போஸ்டரை வெளியிட்டுள்ளார். இந்த பாடலை விஜய் பாடியுள்ளார். மேலும் மறைந்த பாடகி பவதாரிணியின் குரல் ஏ.ஐ., தொழில்நுட்பத்தினைப் பயன்படுத்தி சேர்க்கப்பட்டுள்ளது.
விஜய் கொடுத்த அப்டேட்: ஏற்கனவே விஜய் தனது பிறந்த நாள் கொண்டாட்டங்களில் யாரும் ஈடுபடவேண்டாம் எனக் கூறியிருந்தார். ஆனால் படத்தின் அப்டேட்டுகள் தொடர்ந்து வந்த வண்ணம் இருந்தது. சரி தயாரிப்பாளர் தரப்பில்தானே வெளியிடுகின்றனர் என நினைத்துக் கொண்டு இருந்தனர். ஆனாலும் படக்குழுவினர் போட்ட பதிவுகளை விஜய் ரீ போஸ்ட் செய்தும் வந்தார். நேற்று கோட் படத்தின் இரண்டாவது பாடல் குறித்தும் ஒரு பதிவு போட்டிருந்தார். இன்றைக்கு எந்த பதிவும் போடமாட்டார் என நினைத்துக் கொண்டு இருந்தபோது நடிகர் விஜய் தனது அதிகாரப்பூர்வ எக்ஸ் பக்கத்தில் தி கோட் படத்தின் இரண்டாவது பாடல் தொடர்பான புதிய போஸ்டரை வெளியிட்டுள்ளார். இது பலரது மத்தியில் கேள்வியை எழுப்பியுள்ளது.
விபத்து: குறிப்பாக பிறந்த நாள் கொண்டாட்டங்கள் வேண்டாம் எனக் கூறிய விஜய் தி கோட் படத்தின் புரோமஷனில் அல்லது அப்டேட் கொடுப்பதில் மட்டும் ஈடுபடுவது ஏன் எனவும், பாடலை இன்றே வெளியிட்டு ரசிகர்களுக்கு தனது பிறந்த நாள் ட்ரீட் கொடுத்தே ஆகவேண்டும் என நினைப்பது ஏன் எனவும் கேள்வி எழுப்பி வருகின்றனர். இது ஒருபுறம் இருக்க, பிறந்த நாள் கொண்டாட்டங்கள் கூடாது எனக் கூறிய பின்னரும், சென்னை நீலாங்கரையில் உள்ள தனியார் மண்டபத்தில் விஜய் ரசிகர்கள் ஏற்பாட்டில் நடைபெற்ற விஜய்யின் 50வது பிறந்தநாள் கொண்டாட்டத்தில் சிறுவன் ஒருவனின் கையில் தீப்பற்றியும் பெரியவர் ஒருவர் மீது தீப்பற்றியும் விபத்து ஏற்பட்டது.
இது தொடர்பான வீடியோக்களும் இணையத்தில் வேகமாக பரவி வருகின்றது. இந்த பிறந்த நாள் கொண்டாட்டத்தினை சென்னை புறநகர் மாவட்ட விஜய் ரசிகர் மன்ற தலைவர் ஈ.சி.ஆர்., சரவணன் ஏற்பாட்டில் அந்த நிகழ்ச்சி நடைபெற்றதாக கூறப்படுகிறது. இந்த சம்பவமும் விஜய்யை நோக்கிய விமர்சனங்களை கூர்மையாக்கியுள்ளது. அதாவது விஜய்யும் தான் கூறியதுபடி நடந்து கொள்ளவில்லை, அவர்களது ரசிர்களும் விஜய்யின் சொல்லை மதிப்பதே இல்லை என பல்வேறு கேள்விகளை எழுப்பியுள்ளது.


Click it and Unblock the Notifications











