தளபதி பிறந்த நாள் ஸ்பெஷல்..விஜய்க்கு சங்கீதா மீது எப்படி காதல் வந்தது தெரியுமா?
சென்னை: நடிகர் விஜய் இன்று தனது 49வது பிறந்த நாளை கொண்டாடி வருகிறார். அவருக்கு திரைப்பிரபலங்கள், ரசிகர்கள் என பலரும் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.
இரத்ததானம், அன்னதானம், வழிபாட்டு தலங்களில் சிறப்பு வழிபாடு என விஜய் மக்கள் இயக்கத்தினர் விஜய்யின் பிறந்த நாளை கோலாகலமாக கொண்டாடி வருகின்றனர்.
இந்த ஸ்பெஷலான நாளில் அழகான க்யூட் தம்பதிகளான விஜய் சங்கீதாவின் காதல் கதையை பார்க்கலாம்.
நடிகர் விஜய்: இயக்குநர் எஸ்.ஏ.சந்திரசேகரின் மகனான விஜய் குழந்தை நட்சத்திரமாக ஒரு சில படங்களில் நடித்துள்ளார். இதையடுத்து, தந்தையின் இயக்கத்தில் நாளைய தீர்ப்பு என்ற படத்தில் கதாநாயகனாக அறிமுகமானார். அதன் பிறகு செந்தூரப்பாண்டி,ரசிகன், கோயம்புத்தூர் மாப்பிள்ளை போன்ற படங்களில் நடித்து ஓரளவுக்கு தெரிந்தமுகமாக மாறினார்.

பூவே உனக்காக: விஜய்க்கு சினிமாவில் திருப்பு முனையை ஏற்படுத்திய படமாக அமைந்தது பூவே உனக்காக. இந்த படம் சூப்பர் டூப்பர் ஹிட்டடித்து வசூலை வாரிக்குவித்தது. இந்த படத்தைத் தொடர்ந்து காதலுக்கு மரியாதை, லவ் டுடே என அடுத்தடுத்து காதல் படங்களில் நடித்து ஏராளமான பெண் ரசிகைகளின் கனவு நாயகரான மாறினார் விஜய்.
வாழ்க்கையிலும் மாற்றம்: பூவே உனக்காக திரைப்படம் விஜய்யின் சினிமா பயணத்தில் மட்டும் மாற்றத்தை ஏற்படுத்தவில்லை. அவரது வாழ்க்கையிலும் மிகப்பெரிய மாற்றத்தை ஏற்படுத்தியது. ஆமாம், பூவே உனக்காக படத்தின் வெற்றிக்கு வாழ்த்து தெரிவித்து பின் வாழ்க்கை துணையாக மாறியவர் தான் சங்கீதா. விஜய்யின் தீவிர ரசிகையான சங்கீதா, சென்னை பிலிம் சிட்டியில் ஒரு படத்தின் ஷூட்டிங்கில் விஜய் நடித்துக்கொண்டு இருந்தபோது, ரசிகையாக வந்து வாழ்த்து தெரிவித்தார்.
விஜய்,சங்கீதா காதல் கதை: இப்படி ரசிகையாக அறிமுகமான இலங்கைத் தமிழரான சங்கீதா சொர்ணலிங்கத்தை விஜய் காதலிக்கத் தொடங்கினார். பின்னர் தனது காதலை பெற்றோருக்கு தெரிவித்து இருவீட்டாரின் சம்மதத்துடன் 1999ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 25ந் தேதி திருமணம் செய்து கொண்டார். விஜய் சங்கீதா தம்பதிக்கு ஜோசப் சஞ்சய் என்ற மகனும், திவ்யா சாஷா என்ற மகளும் இருக்கிறார்கள். திருமணமாகி 23ஆண்டுகள் கடந்த போதும்,தற்போது வரை துளியும் குறையாத காதலோடு இருவரும் மகிழ்ச்சியாக வாழ்க்கை நடத்தி வருகிறார்கள்
.


Click it and Unblock the Notifications











