”நீ ஒரு கோடி தாயின் பிள்ளை ” தளபதியின் மெலடி தாலாட்டு.. சின்ன சின்ன கண்கள் ரிலீஸ்..!
சென்னை: நடிகர் விஜய் இன்று தனது 50வது பிறந்த நாளைக் கொண்டாடி வருகின்றார். கள்ளக்குறிச்சி சம்பவம் தொடர்பாக தனது கட்சியான தமிழக வெற்றிக் கழகத்தினர் யாரும் தனது பிறந்த நாளைக் கொண்டாட வேண்டாம் எனவும், கள்ளக்குற்ச்சியில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவி செய்திட உத்தரவிட்டிருந்தார். ஆனால் இந்த உத்தரவு கட்சிக்காரர்களுக்குத்தானே தவிர, அவருடைய ரசிகர்களுக்கு கிடையாது.
ஆமாம், விஜய் தற்போது நடித்து வரும் தி கோட் படக்குழுவினர் விஜய்யின் 50வது பிறந்த நாள் கொண்டாட்டத்தினை நேற்றில் இருந்தே தொடங்கிவிட்டனர். ஏ.ஜி.எஸ். கல்பாத்தி தயாரிப்பில் உருவாகி வரும் தி கோட் படத்தினை வெங்கட் பிரபு இயக்கி வருகின்றார். படத்தின் பெரும்பகுதி படப்பிடிப்பு நடந்து முடிந்து விட்டது. படத்தின் சி.ஜி., வேலைகளும் வேகமாக நடைபெற்று வருகின்றது.

யுவன் சங்கர் ராஜா இசையமைத்துள்ள இந்த படத்தின் முதல் பாடல் ஏற்கனவே வெளியாகி ரசிகர்கள் மத்தியில் கலவையான விமர்சனங்களைப் பெற்றது. இந்நிலையில் படத்தின் இரண்டாவது பாடல் விஜய்யின் 50வது பிறந்த நாளை முன்னிட்டு இன்று அதாவது ஜூன் 22ஆம் தேதி வெளியாகும் என படக்குழு ஏற்கனவே தெரிவித்திருந்தது.
பாடல் ரிலீஸ்: மிகவும் மெலடியாக அமைக்கப்பட்டுள்ள இந்த பாடல் தற்போது ரிலிஸ் செய்யப்பட்டுள்ளது. இதனை யுவன் சங்கர் ராஜா ரிலீஸ் செய்துள்ளார். நடிகர் விஜய் பாடியுள்ளார். மேலும் இந்த பாடலில் மறைந்த பாடகியும் யுவன் சங்கர் ராஜாவின் சகோதரியுமான பவதாரிணியின் குரல் ஏ.ஐ., தொழில்நுட்பத்தின் மூலம் சேர்க்கப்பட்டுள்ளது. அதிரடி ஆக்ஷன் படத்தில் இதுபோன்ற மெலடி பாடலைப் பார்க்கும்போது பாடல் இடைவெளிக்குப் பின்னர் ஆடியன்ஸை செட் செய்வதற்காக எடுக்கப்பட்டதைப் போல் தெரிகின்றது. மேலும் பாடல் விஜய் மற்றும் சினேகாவின் ஃப்ளாஸ் பேக் சீனில் மாண்டேஜ் காட்சிகளுக்காக உருவாக்கப்பட்டதைப் போலும் தெரிகின்றது.

பாட்டு எப்படி இருக்கு? மொத்தம் 4 நிமிடஙகள் 41 நொடிகள் இடம் பெற்றுள்ள இந்த பாடல் பவதாரிணியின் குரலில் தொடங்குவதைப் போல் அமைக்கப்பட்டுள்ளது. அதன் பின்னர் விஜய் பாடுவதைப் போல் பாடல் உருவாக்கப்பட்டுள்ளது. பாடல் கேட்பதற்கு நன்றாக இருப்பதாக ரசிகர்கள் கமெண்ட் செய்து வருகின்றனர். பாடலை கவிஞர் கபிலன் வைரமுத்து எழுதியுள்ளார். இந்த பாடலை வெளியிட்ட இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜா தனது எக்ஸ் தளத்தில் இந்த பாடல் உருவானது தொடர்பாக மிகவும் உருக்கமாக பதிவிட்டுள்ளார்.
மனமுடைந்த யுவன்: அதில், இந்த பாடலை நாங்கள் பெங்களூரில் கம்போஸ் செய்தோம். இந்த பாடலை கட்டாயம் பவதாரிணி பாடவேண்டும் என வெங்கட் பிரபுவும் நானும் நினைத்தோம். பாடலுக்கான மெட்டு உருவாகி முடிந்த ஒரு மணி நேரத்தில் பவதாரிணி இறந்துவிட்டதாக செய்தி வந்தது. பவதாரிணியின் குரலை இப்படி ஏ.ஐ., தொழில் நுட்பத்தின் மூலம் இந்த பாடலில் பயன்படுத்துவேன் என்று ஒருபோதும் நினைத்ததில்லை. இந்த பாடலில் பணியாற்றிய அனைவருக்கும் நன்றி. குறிப்பாக எனது இசைக்குழுவினருக்கும் நன்றி. எனக்கு இது மிகவும் கவலை நிறைந்த தருணமாக இதைப் பார்க்கின்றேன்” என குறிப்பிட்டுள்ளார்.


Click it and Unblock the Notifications











