Vijay: தொடங்குதல் எளிது.. தொடர்வது கடினம்.. விஜய்க்கு சீமான் அட்வைஸ்!
சென்னை: நடிகர் விஜய் தனது கட்சிக்கு தமிழக வெற்றிக் கழகம் என பெயர் சூட்டி உள்ளார். இதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு இன்று வெளியான நிலையில்,வரும் நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிடவில்லை என்றும், யாருக்கும் ஆதரவுமில்லை என்றும் அறிவித்துள்ளார். இந்நிலையில் விஜய் அரசியல் கட்சி தொடங்கி இருக்கும் நிலையில் நாம் தமிழகர் கட்சித் தலைவர் சீமான் அவருக்கு சில அறிவுரைகளை கூறியுள்ளார்.
இயக்குநர் எஸ்.ஏ.சந்திரசேகரின் மகனான விஜய், தனது தந்தை இயக்கிய நாளைய தீர்ப்பு படத்தில் ஹீரோவாக அறிமுகமானார். தொடர்ந்து பல வெற்றி தோல்விகளை சந்தித்து தமிழ் சினிமாவின் இன்று தவிர்க்க முடியாது உச்ச நட்சத்திரமாக உள்ளார். நடிகர் விஜய், தனது ரசிகர் மன்றத்தை மக்கள் இயக்கமாக மாற்றி பல்வேறு நலத்திட்ட உதவிகளையும் செய்து வருகிறார்.

நடிகர் விஜய்: அரசியல் களத்தில் அடியெடுத்து வைப்பதற்கான அடுத்தடுத்த நகர்வுகளை கடந்தாண்டு முதலே விஜய் தொடங்கினார். 10 மற்றும் 12ஆம் வகுப்பு பொதுத்தேர்வில் முதல் இரண்டு இடம் பிடித்த 234 தொகுதிகளை சேர்ந்த மாணவர்களை நேரில் வரவழைத்து, அவரது கையால் பரிசு வழங்கினார். இதைடுத்து, புயல் மழையால் கடுமையாக பாதிக்கப்பட்ட தூத்துக்குடி, நெல்லை மாவட்ட மக்களை நேரில் சென்று சந்தித்து அவர்களுக் உதவித்தொகை மற்றும் நிவாரணப் பொருட்களை வழங்கினார். இதன்பின் நடந்த ஆலோசனை கூட்டத்தில் விஜய் அரசியலில் வருவது உறுதியானது.
தமிழக வெற்றி கழகம்: இந்த நிலையில், இன்று புதிய கட்சிக்கான பெயர் அறிவிக்கப்பட உள்ளதாக தகவல்கள் வெளியானது. அதன்படி நடிகர் விஜய் தொடங்கியுள்ள கட்சிக்கு 'தமிழக வெற்றி கழகம்’ என்று பெயர் வைக்கப்பட்டுள்ளது. இக்கட்சியின் தலைவராக நடிகர் விஜய் தேர்வு செய்யப்பட்டுள்ளார். நடிகர் விஜய் கட்சியின் தலைவராக தேர்வு செய்யப்பட்டதற்கு அனைத்து மாவட்ட முக்கிய நிர்வாகிகளிடமும் ஒப்புதல் பெறப்பட்டுள்ளது.
தொடங்குதல் எளிது.. தொடர்வது கடினம்: நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், புதிய கட்சி தொடங்கி உள்ள செய்தியாளர்களிடம் பேசிய அவர், தொடங்குதல் எளிது.. தொடர்வது ரொம்ப கடினம், தொடங்கும் போது இருக்கும் ஆர்வமும் ஈடுபாடும் கடைசி வரை தொடர்ந்து என்றால், யார் வேண்டுமானாலும் வெல்லாம். அதில் தம்பி விஜய் மட்டும் விதி விலக்கு இல்லை. தொடர்ச்சியாக நின்று கொண்டே இருக்கணும். நான் பல முறை தோற்று இருக்கிறேன். இந்த தேர்தல் இல்லை என்றாலும் அடுத்த தேர்தலில் நான் நிற்பேன் என்று போய் கொண்டே இருப்பேன்.
மக்களின் மனதை வெல்ல வேண்டும்: இன்றைக்கு இருக்கும் அரசியல் சூழலில், ஒரு நடிகருடைய ரசிகர்கள் மட்டும் வாக்களித்து வென்று நாட்டை ஆட்சி செய்வது என்பது சரித்திர புரட்சியாகி விடும். ஆனால், வெகுவான மக்களையும் நாம் ஈர்க்க வேண்டும். எம்ஜிஆர் அவர்களுக்கு பொதுவான மக்களின் ஆதரவு இருந்தது. இதனால், மண்ணை வெல்வதற்கு முன் மக்களின் மனதை வெல்ல வேண்டும், மக்களின் இதயத்திற்கு நெருக்கமாக நெருங்கி செல்ல வேண்டும். இது ஒரு நாளில் இரண்டு நாளில் நடந்து விடாது. பத்து ஆண்டுகளுக்கு மேல் பயணம் செய்து கொண்டே இருந்தால் தான் அதை செய்ய முடியும். தம்பி அதை செய்வார் என்று நான் நம்புகிறேன் என்று சீமான் விஜய்க்கு அறிவுரை கூறினார்.


Click it and Unblock the Notifications











