நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் யாருடனும் கூட்டணி இல்லை... தளபதி விஜய் மக்கள் இயக்கம் உறுதி
சென்னை : தமிழகத்தில் வரும் 19ம் தேதி நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் நடைபெறவுள்ளது.
கடந்த ஊரக உள்ளாட்சித் தேர்தலில் போட்டியிட்டு தளபதி விஜய் மக்கள் இயக்கம் சிறப்பான வெற்றியை பெற்றது.
இதேபோல இந்த தேர்தலிலும் இவர்கள் தனது வேட்பாளர்களை நிறுத்தியுள்ளனர். மேலும் பொதுவாக ஆட்டோ சின்னம் வழங்கவும் தேர்தல் ஆணையத்திடம் கோரிக்கை வைத்திருந்தனர்.

சிறப்பான வெற்றி
தமிழகத்தில் கடந்த ஆண்டில் நடைபெற்று முடிந்த ஊரக உள்ளாட்சித் தேர்தலில் தளபதி விஜய் மக்கள் இயக்கம் சார்பில் 9 மாவட்டங்களில் 169 பேர் போட்டியிட்டனர். இதில் 129 பேர் வெற்றிப் பெற்றிருந்தனர். சிறப்பான வெற்றியை பெற்ற நிலையில் தற்போது நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலிலும் சிறப்பாக களமிறங்கியுள்ளனர்.

திரும்பிப் பார்க்க வைத்த சாதனை
கடந்த ஊரக உள்ளாட்சித் தேர்தலில் பாஜக, மக்கள் நீதி மய்யம் உள்ளிட்ட மற்ற கட்சிகளுக்கு மத்தியில் இத்தனை இடங்களில் வென்று தளபதி விஜய் மக்கள் இயக்கம் சாதனை படைத்திருந்தது. மற்ற கட்சிகள் அந்தக் கட்சியை திரும்பி பார்க்கும்வகையில் இந்த வெற்றி காணப்பட்டது.

வெற்றியாளர்களுடன் புகைப்படம்
இந்த வெற்றியை அடுத்து வெற்றி பெற்றவர்களை நேரில் சந்தித்து வாழ்த்து தெரிவித்த விஜய் அவர்களுன் இணைந்து குரூப் போட்டோ எடுத்துக் கொண்டார். இந்த நடவடிக்கைகள் அந்த கட்சியை அனைவரும் தொடர்ந்து கவனிக்கும் வகையில் அமைந்திருந்தது.

நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் போட்டி
இதனிடையே, நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் போட்டியிடுவது குறித்து முன்னதாக ஆலோசனை மேற்கொள்ளப்பட்டு வேட்பு மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இந்த தேர்தலில் விஜய்யின் படம் மற்றும் இயக்கக் கொடியை பயன்படுத்திக் கொள்ளவும் அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

பொதுச் செயலாளர் விளக்கம்
கடந்த ஊரக உள்ளாட்சித் தேர்தல் வெற்றியை அடுத்து தற்போது நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் தளபதி விஜய் மக்கள் இயக்கம் மற்ற முன்னணி கட்சிகளுடன் கூட்டணி அமைக்குமா என்ற எதிர்பார்ப்பும் எழுந்தது. இந்நிலையில் இந்த யூகங்களுக்கு அதன் பொதுச் செயலாளர் புஸ்ஸி ஆனந்து விளக்கம் அளித்துள்ளார்.

தனித்து போட்டி
இந்த ஆண்டு நடைபெறும் நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் விஜய்யின் உத்தரவின்படி தளபதி விஜய் மக்கள் இயக்கம் எந்தக் கட்சியுடனும் கூட்டணி அமைக்காமல் தனித்து போட்டியிடுவதாக அவர் அறிக்கை மூலம் தெரிவித்துள்ளார்.

முழுமூச்சுடன் பிரச்சாரம்
எனவே கட்சி சார்பில் போட்டியிடும் வேட்பாளர்களுக்காக மாவட்ட தலைவர்கள், அணித் தலைவர்கள், தொண்டர்கள் மற்றும் ரசிகர்கள் முழுமூச்சுடன் பிரச்சாரம் செய்து, தளபதி மற்றும் இயக்கத்தின் மூலமாக செய்த நற்பணிகளை மக்களிடம் கொண்டு சேர்க்க வேண்டும் என்றும் இயக்க வேட்பாளர்களை வெற்றி பெற செய்ய வேண்டும் என்றும் அவர் அந்த அறிக்கையில் கேட்டுக் கொண்டுள்ளார்.


Click it and Unblock the Notifications











