பல மணி நேரம் நடந்த நிகழ்ச்சி.. சிரித்த முகத்தோடு இருந்த விஜய்.. மாணவர்கள் ஹேப்பி!
சென்னை: பொதுத்தேர்வில் அதிக மதிப்பெண் எடுத்த மாணவ, மாணவிகளுக்கு கல்வி ஊக்கத்தொகை வழங்கும் விழா பல மணி நேரமாக நடைபெற்ற போதும், கொஞ்சம் கூட முகம் வாடாமல் சிரித்த முகத்துடனே நின்றுகொண்டே இருந்தார்.
அகில இந்திய தளபதி விஜய்மக்கள் இயக்கம் சார்பில் தமிழகத்தில் 234 தொகுதிகளிலும், பத்தாம் மற்றும் பனிரெண்டாம் பொதுத்தேர்வில் முதல் மூன்று இடங்களை பிடித்த மாணவ, மாணவிகளுக்கு நிதியுதவி வழங்கினார்.

அந்த விழா சென்னை நீலாங்கரை ஆர்.கே.கன்வென்ஷன் சென்டரில் நேற்று மிகவும் பிரம்மாண்டமாக நடைபெற்றது.
மாணவர்கள் சந்திப்பு: இந்த விழாவில் சுமார் 1,500 மாணவ, மாணவிகள் மற்றும் அவர்களின் பெற்றோர்கள் கலந்து கொண்டனர். இந்த நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காக நடிகர் விஜய் லைட் சந்தன நிறத்தில் ஷர்ட் அணிந்து கொண்டு வந்திருந்தார். ரசிகர்கள் புடைசூழ வந்த விஜய், மேடையின் கீழ் மாற்றுத் திறனாளி மாணவர்கள் அருகில் அமர்ந்து அவர்களிடம் பேசினார்.
விஜய் பேச்சு: இதையடுத்து, அந்த நிகழ்ச்சியில் பேசிய விஜய், அம்பேத்கர், பெரியார், காமராஜரைப் பற்றி தெரிந்துகொள்ளுங்கள். நீங்கள்தான் நாளைய வாக்காளர்கள். நல்ல தலைவர்களை நீங்கள்தான் தேர்ந்தெடுக்கப் போகிறீர்கள். பணம் வாங்கிக் கொண்டு ஓட்டுப்போடுவது, நமது கையால், நமது கண்களையே குத்திக்கொள்வதைப் போன்றது என்றார்.
வைர நெக்லஸ் பரிசு: இதையடுத்து, பிளஸ்-2 பொதுத்தேர்வில் 600-க்கு 600 மதிப்பெண் பெற்ற திண்டுக்கல் மாணவி நந்தினிக்கு வைர நெக்லசை பரிசாக வழங்கினார். பின் தொகுதி வாரியாக முதல் 3 இடங்களைப் பிடித்த மாணவ, மாணவிகளுக்கு தலா ரூ.25 ஆயிரம், ரூ.15 ஆயிரம், ரூ.10 ஆயிரம் மற்றும் பாராட்டுச் சான்றிதழ்களை வழங்கி அவர்களுடன் புகைப்படமும் எடுத்துக்கொண்டார்.
தாமதமான விழா: காலையில் தொடங்கிய இந்த விழா மாலையில் முடிந்துவிடும் என எதிர்பார்க்கப்பட்டநிலையில், விஜய்யை பார்க்க வந்த மாணவ, மாணவிகள் அவருக்காக கவிதை, பாட்டு என பலவற்றை எழுதி வந்து அவரிடம் படித்து காட்டினர். இதனால் நிகழ்ச்சி மேலும் தாமதமாகிக் கொண்டே சென்றது. காலையில் 11 மணிக்கு தொடங்கிய இந்த நிகழ்ச்சி இரவு 11.45 மணி அளவில் முடிந்தது.
சிரித்த முகத்தோடு இருந்த விஜய்: இந்த விழாவில் கிட்டத்தட்ட 13 மணி நேரத்திற்கும் மேலாக விஜய் மேடையிலேயே இருந்தார். இதில் உணவு இடைவேளை மற்றும் மாலையில் மட்டும் ஒரு பிரேக் எடுத்துக்கொண்டு மீண்டும் மேடைக்கு வந்து பரிசளிக்கத் தொடங்கினார். ஒரு கட்டத்தில் அவருக்கு கால் வலி ஏற்பட்டதால், அங்கிருந்த மேஜையில் சாய்ந்து கொண்டு நின்றார். அவருக்கு கால் வலித்த போதும் சிரித்த முகத்துடன் விழா முடியும் வரை காணப்பட்டார். இதனால், மாணவர்களும் மகிழ்ச்சியோடு இருந்தனர்.


Click it and Unblock the Notifications











