TVK Vijay: நாகையில் விஜய்யை முருகராக மாற்றி அழகு பார்த்த தவெகவினர்.. சாரே.. கொல மாஸ்!
நாகை: தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவரும் நடிகருமான விஜய், நாகை மற்றும் திருவாரூரில் இன்று பிரச்சாரம் மேற்கொள்கிறார். இதில் முதலில் நாகை மாவட்டத்தில் பிரச்சாரம் செய்தார். திருச்சியைப் போல இங்கும் ஏற்பட்டுவிடக் கூடாது என்பதால் கட்சியினர் இம்முறை கூடுதல் கவனமாக இருந்தனர். ஆனாலும் தவெகவினர் மற்றும் விஜய் ரசிகர்களின் அவருக்கு உற்சாக வரவேற்பு அளித்ததில், கொஞ்சம் கால தாமதம் ஆனது.

விஜயைப் பார்த்ததும் ரசிகர்கள் ஆரவாரம் செய்தனர். வழக்கம்போல் கட்சித் துண்டுகளை தூக்கி அவரை நோக்கி வீசினார்கள், இது மட்டும் இல்லாமல், ரசிகர்கள் அவருக்கு மாலை வாங்கிக் கொண்டுவந்து அவரது வாகனத்தின் மீது வீசினார்கள். மேலும் தமிழ் கடவுள் முருகரின் ஆயுதமான வேலை , சுமார் 6 முதல் 7 அடிக்கு அளவிலான வேல் செய்து கொண்டு வந்திருந்தார்கள். அதில் தமிழக வெற்றிக் கழகத்தின் கொடியைக் கட்டி, விஜய்யிடம் அவர்கள் கொடுக்க, அவரும் அதை வாங்கிக் கொண்டு நின்றார். உடனே அங்கு கூடி இருந்த ரசிகர்கள் அனைவரும் ஆர்ப்பரித்தனர். கையில் வேலுடன் இருந்த விஜய்யை பார்த்து அவரது ரசிகர்கள், தலைவர் முருகர் மாதிரியே இருக்காருப்பா என்று பேசி வருகிறார்கள். இது தொடர்பான புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் இணையத்தில் வேகமாக பரவி வருகிறது.
இந்த பிரச்சாரத்தில் அவர் பேசும்போது, “ நாகப்பட்டினத்தில் நவீன மீன் பதப்படுத்தும் தொழிற்சாலைகள் இல்லாதது, அடிப்படை வசதிகளற்ற வீடுகள், மற்றும் அதிக குடிசைப் பகுதிகள் போன்றவை பல ஆண்டுகளாக நிலவி வரும் முக்கியப் பிரச்சினைகளாக உள்ளது. கடந்த கால ஆட்சியாளர்களின் வாக்குறுதிகள் வெறும் பேச்சுடன் நின்றுவிட்டதாக விமர்சித்தார். அவர்களின் அடுக்கு வசன பேச்சுகளைக் கேட்டு கேட்டு காதில் ரத்தமே வந்துவிட்டது.
தி.மு.க. அரசு கபட நாடக அரசு, பா.ஜ.க அரசு பாசிச அரசு என்றும் விமர்சித்தார். மேலும் வேறு எந்த கட்சிக்கும் இல்லாத நெருக்கடிகள் தமிழக வெற்றிக் கழகத்திற்கு வழங்கப்படுகிறது என்றும் விமர்சித்தார். மீனவர்களுக்காக கடிதம் எழுதி வைத்துவிட்டு நான் சும்மா இருக்க மாட்டேன். 2011ஆம் ஆண்டில் இருந்து மீனவர்களுக்காக குரல் கொடுத்து வருகிறேன் என்றும் பேசினார்.
நாகப்பட்டினத்தில் தனது பிரச்சாரத்தை முடித்துக் கொண்ட விஜய், பிற்பகல் 3 மணி முதல் 5 மணி வரை திருவாரூரில் பிரச்சாரம் மேற்கொள்ளவுள்ளார். நாகை மற்றும் திருவாரூர் என இரண்டு மாவட்டங்களிலும் பிரச்சாரங்களை முடித்துக் கொண்டு, இரவு 10 மணியளவில் தனி விமானம் மூலம் சென்னை திரும்பவுள்ளார் என்று கூறப்படுகிறது. திருவாரூர் மாவட்டம் முதலமைச்சரின் சொந்த மாவட்டம் என்பதால், அங்கு அவர் என்ன பேசப்போகிறார் என்பதும் கூடுதல் கவனமாக உள்ளது.


Click it and Unblock the Notifications











