TVK: மன்னராட்சியா? மக்களாட்சியா? ஒரு பக்கம் காமராஜர், அம்பேத்கர்.. இன்னொரு பக்கம் யாருன்னு பாருங்க!
விக்கிரவாண்டி: தமிழ் சினிமாவின் முக்கிய அங்கமாக இருப்பவர் நடிகர் விஜய். மிகப்பெரிய ஓப்பனிங் கொண்ட கதாநாயகன், அதிக சம்பளம் வாங்கும் கதாநாயகன் என விஜய்யின் மார்க்கெட் தமிழ் சினிமாவில் ரொம்பவும் பெருசு. இப்படியான நிலையில் அவர் தொடங்கியுள்ள அரசியல் கட்சியான தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு வரும் 27ஆம் தேதி விக்கிரவாண்டியில் நடைபெறவுள்ளது.
இதற்கான ஏற்பாடுகள் நடைபெற்று வரும் நிலையில், மாநாட்டுத் திடலில் அரசியல் தலைவர்களின் கட் - அவுட்டுகளுக்கும் தமிழ்நாட்டினை ஆட்சி செய்து சுதந்திர போராட்டத்தின்போது வெள்ளையனை எதிர்த்து போரிட்டு வீர மரணம் அடைந்த மன்னர்களின் புகைப்படங்களும் மாநாட்டு முகப்பில் இடம் பெற்றுள்ளது.

மாநாட்டு திடல் மிகவும் வேகமாக அமைக்கப்பட்டு வருகின்றது. இன்னும் ஒரு நாள் மட்டுமே இடையில் உள்ள நிலையில் நூற்றுக்கும் மேற்பட்டோர் வேலை செய்து வருகின்றனர். இந்நிலையில் மாநாட்டுத் திடலில், சட்டமாமேதை அம்பேத்கர், தமிழ்நாட்டு அரசியலின் திசைவழிப்போக்கைத் தீர்மானித்த தந்தை பெரியார், தமிழ்நாடு முன்னாள் முதலமைச்சர் காமராஜர், வீர மங்கை வேலுநாச்சியார் மற்றும் அஞ்சலையம்மாள் ஆகியோருக்கு 70 அடி உயரத்தில் கட்-அவுட் வைக்கப்பட்டுள்ளது. இதில் சட்டமேதை அம்பேத்கருக்கும் தந்தை பெரியாருக்கும் இடையில் விஜய்க்கு கட் -அவுட் அமைக்கப்பட்டுள்ளது. இது தொடர்பான புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் இணையத்தில் வேகமாக பரவி வருகின்றது.

கடிதம்: மேலும் மாநாடு தொடர்பாக விஜய் தனது தொண்டர்களுக்கு எழுதிய கடிதத்தில், "உச்சபட்ச அரசியல் ஒழுங்கோடு. உலகமே உற்று நோக்கிப் போற்றும் விதமாகக் கொண்டாடுவோம் நம் வெற்றிக் கொள்கைத் திருவிழாவை. அத்திருவிழாவைக் கொண்டாடுவதற்காக, பெருந்திரளாக அனைவரும் மாநாட்டுக்கு வரும்போது பாதுகாப்பையும் கட்டுப்பாட்டையும் மனதில் நிறுத்தி, பத்திரமாக வாருங்கள். நம் கழகக் கொடியைக் கைகளிலும் மனங்களிலும் ஏந்தி வாருங்கள். உங்கள் வருகைக்காக வி.சாலை எல்லையில், என் இரு கரங்களையும் விரித்தபடி, இதய வாசலைத் திறந்து வைத்துக் காத்திருப்பேன்" என எழுதியிருந்தார்.

மன்னர்கள்: இந்நிலையில் மாநாடு திடல் முகப்பானது கட்சிக் கொடியில் உள்ளதைப்போல் இரண்டு யானைகள் இருபுறமும் உள்ளதைப்போல் அமைக்கப்பட்டுள்ளது. இதுமட்டும் இல்லாமல், முகப்பில் சுதந்திர போராட்டத்தில் உயிரை விட்ட மன்னர்கள் மற்றும் தமிழ் மன்னை ஆட்சி செய்த மன்னர்களின் உருவப்படங்களும் இடம் பெற்றுள்ளது. குறிப்பாக, " அழகுமுத்துக்கோன், வேலுநாச்சியார், பெரும்பிடுகு முத்தரையர், சுந்தர லிங்கம், வீரபாண்டிய கட்டபொம்மன், ராஜராஜ சோழன், தீரன் சின்னமலை, பூலித்தேவன், மருது சகோதர்கள் மற்றும் ஒண்டி விரன் என 10 மன்னர்களின் உருவப்படங்களை வரிசைப்படுத்தியுள்ளனர். மேலும் தமிழன்னை, சேரர், சோழர், பாண்டியருக்கும் கட் - அவுட் வைக்கப்பட்டுள்ளது.

கேள்வி: இதனைப் பார்த்த பலரும் உள்ளே மக்களாட்சி தத்துவத்தைப் பேசிய பெரியார், அம்பேத்கர் ஆகியோருக்கு கட் - அவுட் வைக்கப்பட்டுள்ளது. வெளியே மன்னராட்சியை நிலைநாட்டிய அதற்காக செயல்பட்ட மன்னர்களின் உருவப்படங்கள் உடம் பெற்றுள்ளது. இதனால் விஜய் மக்களாட்சி கொள்கையை பின்பற்றப்போகின்றாரா? மன்னராட்சி கொள்கைகளை பின்பற்றப்போகின்றாரா? என்ற கேள்வி எழுவதாக பலர் கூறுகின்றனர்.


Click it and Unblock the Notifications











