தளபதிக்கு அடுத்த இடத்தில் இருக்கேன்.. ரஜினிகாந்த் போலவே கார் டிரைவரை எச்சரித்த புஸ்ஸி ஆனந்த்!
விக்கிரவாண்டி: இணையத்திற்குள் நுழைந்தாலே நடிகர் விஜய்யின் அரசியல் கட்சியான தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு குறித்த தகவல்கள்தான் வந்து குவிகின்றது. விஜய் படம் ரிலீஸ் ஆனாலே இணையத்தை அலறவிடும் ரசிகர்கள் அவரது அரசியல் கட்சியின் முதல் மாநில மாநாட்டிற்கு சும்மா இருப்பார்களா? இணையத்திற்குள் நுழைந்தாலே தவெக மாநாடுதான் செம ட்ரெண்டிங்கில் உள்ளது. இந்நிலையில் தமிழக வெற்றிக் கழகத்தின் பொதுச் செயலாளர் புஸ்ஸி என். ஆனந்த் சமீபத்தில் அளித்த பேட்டி இணையத்தில் வேகமாக பரவி வருகின்றது. குறிப்பாக அவர் தனது கார் டிரைவரை மிரட்டுவது வேகமாக பரவி வருகின்றது.
தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு விக்கிரவாண்டியில் வரும் 27ஆம் தேதி நடைபெறவுள்ளது. இதற்கான ஏற்பாட்டுப் பணிகள் இணையத்தில் வேகமாக பரவி வருகின்றது. மாநாட்டு திடல் அமைக்கும் பணிகள் குறித்து நாள்தோறும் பல அப்டேட்கள் வந்தவண்ணம் உள்ளது. நேற்று அதாவது அக்டோபர் 23ஆம் தேதி மாநாட்டுத் திடலில் அம்பேத்கர் , காமராசர் மற்றும் பெரியாருக்கு கட் - அவுட் வைக்கப்பட்டது. இதில் அம்பேத்கருக்கும் பெரியாருக்கும் இடையில் விஜய் இருப்பதைப்போலவும் கட் - அவுட் வைக்கப்பட்டது. இந்தக் கட் அவுட் 70 அடி உயரத்திற்கு அமைக்கப்பட்டுள்ளது.

தொடக்கத்தில் தவெக மாநில மாநாடு மழைக்காலத்தில் திட்டமிடப்பட்டுள்ளதாகவும் தொண்டர்கள் வந்தாலும் அவர்கள் சேற்றிலும் மழையிலும்தான் நனைந்தபடி இருக்கவேண்டும் எனவும் விமர்சிக்கப்பட்டது. ஆனால் சேர்கள் போட ஏதுவாக தரையில் இருந்து மூன்று அடி உயரத்திற்கு உயரப்படுத்தி தளம் அமைக்கப்பட்டுள்ளது. மாநாடு நடைபெறும் தினம், அதற்கு முந்தைய தினம் மற்றும் அதற்கு அடுத்தநாள் மழை பெய்யக்கூடாது என விக்கிரவாண்டி பொதுமக்கள் நேற்று யாகம் நடத்தினர்.

வாக்குவாதம்: இந்நிலையில் நேற்று மாநாட்டு ஏற்பாட்டுப் பணிகள் எவ்வாறு நடைபெறுகின்றது என்பதை செய்தியாக்க பத்திரிகையாளர்கள் சென்றனர். ஆனால் அங்கிருந்த பாதுகாவலர்கள் தவெக நிர்வாகிகளின் உத்தரவினால் செய்தியாளர்களை மாநாட்டுத் திடல் ஏற்பாட்டுப் பணிகளை பார்க்க அனுமதிக்கவில்லை. மேலும் பொது சாலையிலும் நிற்கக் கூடாது எனக் கூறியதால் அது குறித்து செய்தியாளர்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

கோபம்: இன்று செய்தியாளர்கள் இது தொடர்பாகவும் மாநாடு ஏற்பாட்டுப் பணிகள் எவ்வாறு நடைபெறுகின்றது என்பது குறித்தும் கேட்டறிய தவெக பொதுச் செயலாளர் புஸ்ஸி என். ஆனந்திடம் கேள்வி எழுப்பினர். காரில் அமர்ந்தபடி பதில் அளித்த அவர், மாநாட்டுப் பணிகள் சிறப்பாக நடைபெற்று வருகின்றது. மாநாட்டில் கலந்து கொள்வோருக்கான அனைத்து அடிப்படை வசதிகளும் செய்யப்பட்டுள்ளது. நீங்கள் ( செய்தியாளர்கள்) தொடர்ந்து இதுகுறித்து கேட்டுக் கொண்டே இருந்தால் நான் எப்படி வேலை செய்யமுடியும் சொல்லுங்கள். நான் தளபதிக்கு அடுத்த இடத்தில் உள்ளேன். இதற்கெல்லாம் பதில் சொல்லும் அளவிற்கு பெரிய ஆள் இல்லை என பதில் அளித்தார்.

சூப்பர் ஸ்டார்: ஆனந்த் பேசிக்கொண்டு இருக்கும்போது அவரது கார் டிரைவர் காரை எடுக்க, உடனே கார் டிரைவரைக் கடிந்து கொண்டார். இதுமட்டும் இல்லாமல் செய்தியாளருக்கு பதில் அளிக்கும்போது கோபமாகவே பதில் அளித்தார். இது தொடர்பான வீடியோ இணையத்தில் வேகமாக பரவி வருகின்றது. மேலும் இந்த வீடியோவைப் பார்த்த, பலர் புஸ்ஸி ஆனந்த் செய்தியாளர்களுக்கு மதிப்பளித்து பதில் அளிக்க வேண்டும் என டிரைவரிடம் கோபத்தை வெளிப்படுத்தியுள்ளார் என கமெண்ட் செய்து வருகின்றனர். சிலர் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் சில மாதங்களுக்கு முன்னர் இவ்வாறு செய்ததை நினைவு கூர்ந்து வருகின்றனர்.


Click it and Unblock the Notifications











