ஜீவாவை எங்களால் அப்படி பார்க்கவே முடியவில்லை.. கண்ணீருடன் தம்பி ராமைய்யா வேதனை
சென்னை: தயாரிப்பாளரும், நடிகர்கள் ஜீவா மற்றும் ரமேஷ் ஆகியோரின் தந்தையுமான ஆர்.பி. சௌத்ரி நேற்று முன்தினம் சாலை விபத்தில் உயிரிழந்தார். அவரது உடல் இன்று தகனம் செய்யப்பட்டது. சௌத்ரியின் மறைவு அனைத்து திரைத்துறையினருக்கும் சோகத்தை ஏற்படுத்தியிருக்கிறது. ஜீவாவோ உடைந்தே போய்விட்டார். இந்நிலையில் இயக்குநரும், நடிகருமான தம்பி இராமைய்யா; சௌத்ரியின் உடலுக்கு அஞ்சலி செலுத்திவிட்டு எமோஷனலாக பேசினார்.
தமிழ் சினிமாவின் முக்கியமான தயாரிப்பு நிறுவனங்களில் ஒன்று சூப்பர் குட் ஃபிலிம்ஸ். முதலில் இந்த நிறுவனத்தை சௌத்ரி சூப்பர் இன்டர்நேஷனல் கம்பெனி என்ற பெயரில் நடத்திவந்தார். அதன் பிறகுதான் குட் நைட் நிறுவனர் மோகனும் உள்ளே வர; சூப்பர் குட் ஃபிலிம்ஸ் என்ற பெயர் மாற்றம் அடைந்தது. முதலில் மலையாளத்தில்தான் அந்த நிறுவனம் ஹிட் படங்களை தயாரித்தது. தொடர்ந்து கோலிவுட்டுக்கு வந்து முதல் படமே தரமாக கொடுத்ததால்; அடுத்தடுத்து தமிழிலேயே முழு கவனத்தையும் சௌத்ரி செலுத்தினார்.

பெரும்பாலும் ஹிட் படங்கள்தான்: இதற்கிடையே மோகன் ஒட்டுமொத்தமாக சௌத்ரியிடம் நிறுவனத்தை கொடுத்துவிட்டு ஒதுங்கிக்கொண்டார். தமிழில் சௌத்ரி தொட்டதெல்லாம் ஹிட்டாகின. சூர்யவம்சம், நாட்டாமை, சேரன் பாண்டியன், தித்திக்குதே, பூவே உனக்காக, துள்ளாத மனமும் துள்ளும் என எக்கச்சக்க ஹிட் படங்கள். இதுவரை 99 படங்களை தயாரித்திருக்கும் அந்த நிறுவனம் 100வது படத்தை தயாரிக்க திட்டமிட்டு; அதற்காக விஜய்யுடன் பேச்சுவார்த்தையும் நடத்தப்பட்டது. ஆனால் விஜய் அதில் நடிக்கவில்லை.
உயிரிழந்த சௌத்ரி: சூழல் இப்படி இருக்க சில நாட்களுக்கு முன்பு திருமணம் ஒன்றில் கலந்துகொள்வதற்காக ராஜஸ்தான் மாநிலத்துக்கு சென்றிருந்தார் அவர். அப்போது சாலை விபத்து ஏற்பட; இவருக்கு அதிர்ச்சி உண்டாகி மாரடைப்பும் வந்துவிட்டது. அதனால் உயிரிழந்துவிட்டார். விபத்து காரணமாக அவர் உடலில் ஒரு அடிகூட இல்லை என்றும் சொல்லப்படுகிறது. அவரது உடல் நேற்று சென்னைக்கு கொண்டு வரப்பட்டது. விஜய், ரஜினிகாந்த் உள்ளிட்டோர் நேரில் அஞ்சலி செலுத்தினார்கள். இன்று அவரது உடல் தகனம் செய்யப்பட்டது.
தம்பி இராமைய்யா எமோஷனல்: இந்நிலையில் இயக்குநரும், நடிகருமான தம்பி ராமைய்யா; ஆர்.பி.சௌத்ரியின் உடலுக்கு அஞ்சலி செலுத்திவிட்டு செய்தியாளர்களிடம் பேசினார். அப்போது பேசிய அவர், "ஜீவாவை நாங்கள் எல்லாம் சிரித்த முகத்தோடு மட்டுமே பார்த்திருக்கிறோம். அவரை அழுகும் சூழ்நிலையில் பார்ப்பதற்கு வேதனையாக இருந்தது. ஜீவா ஒரு பாக்ஸ் ஆஃபிஸ் ஹிட் கொடுக்கவில்லையே என சௌத்ரி சங்கடத்தில் இருந்தார். அப்போதுதான் தலைவர் தம்பி தலைமையில் பெரிய வெற்றி பெற்றது.
நிம்மதியோடு இருந்தார்: எப்படியோ தனது மகன் நீண்ட காலம் கழித்து ஒரு ஹிட்டை கொடுத்துவிட்டார் என்று கொஞ்சம் மன நிம்மதியடைந்தார். சௌத்ரியும் அவரது மனைவியும் அன்றில் பறவை போல இருப்பார்கள். ஜீவாவின் அம்மா எப்படி இதை தாங்கப்போகிறார்கள் என்று தெரியவில்லை. சௌத்ரியின் ஆன்மா மேலிருந்து ஜீவா, ரமேஷை வாழ்த்தும். சினிமா இருக்கும் வரை ஆர்.பி.சௌத்ரி இருப்பார்" என்றார். இதனை பேசும்போது அவர் கலங்கிவிட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications
