விஜய் மகன் நினைத்திருந்தால் அதை செய்திருக்கலாம்.. தம்பி ராமையா ஓபன் டாக்
சென்னை: விஜய்யின் மகனான ஜேசன் சஞ்சய் இயக்குநராக அறிமுகமாகவிருக்கிறார். அவர் இயக்கும் முதல் படத்தில் சந்தீப் கிஷன் ஹீரோவாக நடிக்கவிருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது. அதுகுறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு அண்மையில் வெளியாகி வரவேற்பை பெற்றது. இந்நிலையில் ஜேசன் சஞ்சய் குறித்து நடிகரும், இயக்குநருமான தம்பி ராமையா பேசியிருக்கும் விஷயம் ரசிகர்களிடையே கவனத்தை ஈர்த்திருக்கிறது.
தமிழ்நாட்டின் தளபதி என்று ரசிகர்களால் அழைக்கப்படுபவர் விஜய். அவருக்கு ஜேசன் சஞ்சய் என்ற மகனும், சாஷா என்ற மகளும் இருக்கிறார்கள். இவர்களில் ஜேசன் போக்கிரி படத்தின் பாடலில் சில நொடிகளும், வேட்டைக்காரன் படத்தின் பாடலில் சில நொடிகளும் வந்து சென்றார். அதேபோல் சாஷாவோ தெறி படத்தின் க்ளைமேக்ஸில் தோன்றினார். எனவே ஜேசன் சஞ்சய்யும் கண்டிப்பாக சினிமாவில் ஹீரோவாக நடிக்க வாய்ப்புகள் இருப்பதாக கணிக்கப்பட்டது.

வெளிநாட்டில் படிப்பு: பள்ளி படிப்பை தமிழ்நாட்டில் முடித்த அவர் அடுத்ததாக கனடாவுக்கு சென்று சினிமா இயக்கம் சம்பந்தமான படிப்பை படித்து; தான் இயக்குநராகத்தான் ஆகப்போகிறேன் என்பதை உணர்த்தினர். மேலும் ட்ரிக்கர் என்ற குறும்படத்தையும் அவர் இயக்கினார். சூழல் இப்படி இருக்க லைகா நிறுவனத்தின் பேனரில் ஜேசன் சஞ்சய் இயக்குநராகப்போகிறார் என்கிற அறிவிப்பு வெளியாகி பலரையும் ஆச்சரியத்தில் மூழ்கடித்தது.
சங்கீதாதான் காரணமா?: தனது மகன் இயக்குநராகும் அறிவிப்பு வெளியாகியும் விஜய் இதுவரை வாழ்த்து எதுவும் தெரிவிக்கவில்லை. அதற்கு காரணம் தனது குடும்பத்துடன் அவருக்கு இருந்த பிரச்னைதான் என்று பலரும் பலவாறு பேசினார்கள். ஆனால் அதெல்லாம் ஒன்றும் இல்லை தனது தந்தையின் பெயரை பயன்படுத்தக்கூடவே கூடாது என்பதில் ஜேசன் முனைப்பாக இருந்ததாக சொல்லப்பட்டது. மேலும் லைகாவிடம் ஜேசனுக்காக பேசியதுகூட விஜய்யின் மனைவி சங்கீதாதான் என்றும் ஒரு தகவல் வெளியானது குறிப்பிடத்தக்கது.
சந்தீப் கிஷன் ஹீரோ: இப்படி பல தகவல்கள் ஓடிக்கொண்டிருந்தாலும் ஜேசன் சஞ்சய் இயக்குநராகப்போகிறார் என்று சொல்லப்பட்டு பல மாதங்கள் ஆகியும் படத்தின் ஹீரோ யார் என்று யாருக்குமே தெரியவில்லை. மேலும் இந்தப் படம் அவ்வளவுதான் ட்ராப்பாகிவிட்டது என்றெல்லாம் சொன்னார்கள். ஆனால் அப்படியெல்லாம் எதுவும் இல்லை என்பதை உறுதிப்படுத்துவது போன்று சமீபத்தில்தான் ஹீரோ பற்றிய அறிவிப்பு வெளியானது. அதன்படி ஜேசன் சஞ்சய் இயக்கத்தில் சந்தீப் கிஷன் ஹீரோவாக நடிக்கிறார்.
தம்பி ராமைய்யா பேட்டி: சூழல் இப்படி இருக்க ஜேசன் சஞ்சய் குறித்து தம்பி ராமையா ஒரு பேட்டியில், "சஞ்சய்யின் தோற்றத்துக்கு அவர் நினைத்திருந்தால் நூறு கோடி ரூபாய் பட்ஜெட் படத்தில் ஹீரோவாக நடித்திருக்கலாம். ஏனெனில் அவருக்கு அப்படி ஒரு தோற்றம். ஆனால் அவர் நடிப்பை கையில் எடுக்காமல் இயக்கத்தை கையில் எடுத்திருக்கிறார். அவரிடம் நான், 'தம்பி நீ எடுத்திருக்கும் முடிவு சரியானது. நீ இயக்கும் முதல் படம் உனக்கு பெரிய அனுபவத்தை கொடுக்கும் என்று கூறினேன்" என்றார்.


Click it and Unblock the Notifications











