தங்கலானுக்கு கூடும் மவுசு! ஜி.வி.க்கு அவரது மாமா ரகுமானைப் போல் ஆஸ்கார் கிடைக்கும் - விக்ரம் பேச்சு
சென்னை: நடிகர் விக்ரம், பார்வதி திருவோத்து, மாளவிகா மோகனன் உள்ளிட்டோர் நடிப்பில் நாளை அதாவது ஆகஸ்ட் 15ஆம் தேதி ரிலீஸ் ஆகவுள்ள படம் தங்கலான். இந்தப் படத்தினை இயக்குநர் பா. ரஞ்சித் இயக்கியுள்ளார். படத்திற்கு ஜி.வி. பிரகாஷ்குமார் இசை அமைத்துள்ளார். படத்தினை ஸ்டூடியோ க்ரீன் தயாரித்துள்ளது. இது மட்டும் இல்லாமல் படத்தினை ஆஸ்காருக்கு அனுப்ப திட்டமிட்டுள்ளதாகவும் படக்குழு தரப்பில் இருந்து தெரிவிக்கப்பட்டுள்ளது. நாளை படம் ரிலீஸ் ஆகவுள்ள நிலையில், படக்குழு செய்தியாளர்களைச் சந்தித்தது.
அந்த செய்தியாளர் சந்திப்பில் பேசிய நடிகர் விக்ரம், " இந்தப் படத்தில் அனைவருமே சிறப்பாக நடித்துள்ளனர். பொன்னியின் செல்வன் படத்தில் ஒரு ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்னர் இருந்த ஆடம்பரம்,வெற்றி, தோல்வி, வீரம், செல்வம், போர் போன்ற விஷயங்களைப் பேசியிருந்தோம். ஆனால் ஆதே இந்தியாவில் 200 ஆண்டுகளுக்கு முன்னர் வறுமை இருந்துள்ளனர். அதே மக்கள்தான். ஆனால் வேறொரு உலகமாக மாறிவிட்டது. இதனை மையமாக வைத்து ரஞ்சித் இந்தப் படத்தினை எடுத்துள்ளார். படத்தின் ட்ரைலரைப் பார்க்கும்போதே தெரிந்திருக்கும், இந்தப் படம் எந்த அளவிற்கு ஜனரஞ்சகமாக இருக்கின்றது என்பது.

படத்தினை அறிவுசார் தளத்தில் உள்ளவர்களுக்கு மட்டும் எடுக்காமல், படத்தில் ஒரு கருத்து சொல்லவேண்டும், திரைப்பட விழாக்களில் கலந்து கொண்டு படம் விருதுகள் பெறவேண்டும் என இல்லாமல், படத்தினை நம்பி பணம் செலவழித்துள்ள தயாரிப்பாளருக்காகவும் இந்தப் படத்தை எடுக்க வேண்டும் என்ற எண்ண ஓட்டத்தில் இந்தப் படத்தினை எடுக்க வேண்டும் என்ற எண்ணத்தில் படத்தினை எடுத்ததற்காக நன்றிகள் ரஞ்சித். அதேபோல் படத்தின் இசை அமைப்பாளர் ஜி.வி. பிரகாஷ் குமாரின் இசை எனக்கு ரொம்பவே பிடித்துப்போனது.
ஆஸ்கார்: ஒரு பாடல், படத்தின் ட்ரைலர் என இல்லாமல், படத்தின் ஒவ்வொரு காட்சிக்கும் ஜி.வி. பிரகாஷின் உழைப்பு நன்றாகத் தெரிகின்றது. ஒவ்வொரு இசைத் துணுக்கும் சிறப்பாக உள்ளது. இந்தப் படத்தின் மற்றொரு கதாநாயகன் ஜி.வி. பிரகாஷ்குமார். எனக்கு இந்த விருதுகள் மீது பெரிதாக நம்பிக்கை இல்லை. ஆனாலும் நீங்கள் உங்கள் இசை மூலம் உலக சினிமாவால் கவனம் பெறுவீர்கள். சொல்ல முடியாது, உங்களது மாமாவைப்போல் (ஏ.ஆர். ரகுமான்) ஆஸ்கார் உங்களைத்தேடி வந்தாலும் வரலாம். அதற்காக வாழ்த்துகள்" என பேசினார்.

உழைப்பு: அதேபோல் இந்த செய்தியாளர் சந்திப்பில், இயக்குநர் பா. ரஞ்சித் பேசுகையில், "இந்தப் படத்திற்காக நாங்கள் அனைவரும் மிகவும் கடினமாக உழைத்துள்ளோம். ஒவ்வொரு படத்திலும் அனைவரும் கடினமாக உழைத்துதான் படத்தினை உருவாக்குகின்றனர். ஆனால் ரசிகர்களுக்கு எங்களது உழைப்பு மட்டும் திருப்தியைக் கொடுத்து விடாது. தங்கலான் படத்தில் நாங்கள் ஒரு குழுவாக ரசிகர்களுக்கு ஒரு திருப்திகரமான படத்தினைக் கொடுத்துள்ளோம் என நம்புகின்றேன்.
புரோமோசன்: இந்தப் படத்தின் புரோமோசனுக்காக நடிகர் விக்ரம் காட்டிய ஈடுபாடு என்னை மிகவும் ஆச்சரியப்படுத்துகின்றது. புரோமோசனுக்காக அவர் சென்ற ஒவ்வொரு இடத்திலும் பாட்டுப் பாடி, ஆட்டம் ஆடி ரசிகர்களிடம் இந்தப் படத்தைக் கொண்டு சேர்த்துள்ளார். சக நடிகர்களை ஒருங்கிணைத்து படத்தின் புரோமோசனில் ஈடுபட்டார். இது மிகவும் ஆச்சரியத்தை ஏற்படுத்துகின்றது. ஆந்திராவில் இவர்கள் செய்த புரோமோசனால் தங்கலான் படத்திற்கு அங்கு பெரும் எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது. ஒரு படத்தினை புரோமோட் செய்வதில் நடிகரின் வேலை இல்லை என பலர் யோசிக்கும் காலகட்டத்தில் சின்ன பையன்போல படத்தினை அனைவரது மத்தியிலும் கொண்டு சேர்க்க முக்கிய காரணமாக விக்ரம் இருந்துள்ளார்" என பேசியுள்ளார். இது பலரது கவனத்தைப் பெற்றுள்ளது.


Click it and Unblock the Notifications











