ஆனந்த யாழை மீட்டுகிறாய்... தேவதை இவளா கேக்குதடி...!
சென்னை: கேட்கும்போதே சிலிர்க்கிறது.. கண்களெல்லாம் கலங்கி மீன் பிடிக்கும் அளவுக்கு தண்ணீர் ததும்பி நிற்கிறது.. தங்க மீன்களின் இந்தப் பாட்டைக் கேட்கும்போது...
ஆண் குழந்தை பெற்ற உள்ளங்களெல்லாம்.. இப்படி ஒரு தேவதை எனக்கு மகளாக இல்லையே என்ற ஏக்கத்தில் வெடித்துத் துடித்து வைக்கும் முத்து வரிகள்.. முத்துக்குமாரின் வார்த்தைகளில்...
என்ன அழகு இசையில், பாடல் வரியில், பாடும் குரலில், காணும் காட்சியில்...யுவன் ஷங்கர் ராஜாவின் இசையில்... மஹா ரம்யம்...!

தங்க மீன்கள்...அழகோவியம்
இயக்குநர் ராம் பார்த்துப் பார்த்து இழைத்த அழகோவியம் தான் தங்க மீன்கள்.

ஒவ்வொரு பிரேமும் உயிரோவியம்
இப்படத்தின் பாட்டு ஏற்கனவே அத்தன பேரையும் பிரமிக்க வைத்துள்ளது. ஒவ்வொரு பிரேமையும் பார்த்துப் பார்த்து இழைத்துள்ளார் ராம்.. அதை விட இந்தப் பாட்டுத்தான் மிரள வைக்கிறது.

ஆனந்த யாழை மீட்டுகிறாய்
நா. முத்துக்குமார் எழுதியுள்ளார்.. அப்படிச் சொன்னால் தப்பு.. வார்த்தைகளால் உருக்கியுள்ளார். ஆனந்த யாழை மீட்டுகிறாய் என்று ஆரம்பித்து போகும் பாட்டைக் கேட்கும்போது அடி மனதில் குரோர் கணக்கில் பட்டாம்பூச்சிகள் வெடித்துக் கிளம்பி வெளி வருகின்றன.

கேட்க கேட்க ஆனந்தம்...
இந்தப் பாட்டுக்கு விலாவாரியாக விளக்கமே தரத் தேவையில்லை.. மகளுக்காக மெனக்கெடும் தந்தை.. தாயுமானவனாக மாறி நிற்கும் தந்தை...காற்றில் அடித்துச் செல்லும் சின்னத் துப்பட்டாவைக் கூட பறந்து ஓடிப் பிடித்துத் தந்து மகள் முகத்தில் சந்தோஷத்தைக் கண்டு ரசிக்கும் தந்தை... மகளின் ஒவ்வொரு நொடி சந்தோஷத்தையும் கொஞ்சம் கூட கேப் விழுந்து விடாமல் பார்த்துப் பார்த்து பாதுகாக்கும் தந்தை... அடடா.. அருமையான காட்சி என்று மனம் கூவுகிறது... சரி முடிஞ்சா மறக்காம இந்தப் பாட்டைக் கேட்டுப் பாருங்க.. இல்லாட்டி படிச்சுப் பாருங்க..

அன்பென்னும் குடையை நீட்டுகிறாய்..
ஆனந்த யாழை மீட்டுகிறாய் - அடி
நெஞ்சில் வண்ணம் தீட்டுகிறாய்
அன்பென்னும் குடையை நீட்டுகிறாய்
அதில் ஆயிரம் மழைத்துளி கூட்டுகிறாய்

சிறு பூவில் உறங்கும் பனியில்
இரு நெஞ்சம் இணைந்து பேசிட உலகில்
பாஷைகள் எதுவும் தேவையில்லை
சிறு பூவில் உறங்கும் பனியில் தெரியும்
மலையின் அழகோ தாங்கவில்லை
உந்தன் கைகள் பிடித்து போகும் வழி
அது போதவில்லை இன்னும் வேண்டுமடி
இந்த மண்ணில் இதுபோல் யாருமிங்கே
என்றும் வாழவில்லை என்று தோன்றுதடி

தேவதை இவளா கேக்குதடி
தூரத்து மரங்கள் பார்க்குதடி
தேவதை இவளா கேக்குதடி
தன்னிலை மறந்து பூக்குதடி
காற்றினில் வாசம் தூக்குதடி
அடி கோவில் எதற்கு? தெய்வங்கள் எதற்கு?
உனது புன்னகை போதுமடி
இந்த மண்ணில் இதுபோல் யாருமிங்கே
என்றும் வாழவில்லை என்று தோன்றுதடி

வீட்டுக்கு அனுப்பு நல்லபடி
உன் முகம் பார்த்தால் தோணுதடி
வானத்து நிலவு சின்னதடி
மேகத்தில் மறைந்தே பார்க்குதடி
உன்னிடம் வெளிச்சம் கேட்குதடி
அதை கையில் பிடித்து ஆறுதல் உரைத்து
வீட்டுக்கு அனுப்பு நல்லபடி
இந்த மண்ணில் இதுபோல் யாருமிங்கே
என்றும் வாழவில்லை என்று தோன்றுதடி

இன்று இரவு ஆடியோ ரிலீஸ்.. சன் மியூசிக்கில்
தங்கமீன்கள் படத்தின் ஆடியோ வெளியீட்டு விழாவை இன்று இரவு சன் மியூசிக்கில் ஒளிபரப்புகிறார்கள்.. மறக்காமல் பார்த்து மெய் சிலிர்க்க தயாராகுங்கள்...
ஆனந்த யாழை மீட்டுகிறாய்...தேவதை இவளா கேக்குதடி...!
ஆனந்த யாழை மீட்டுகிறாய்...தேவதை இவளா கேக்குதடி...!


Click it and Unblock the Notifications











