பேஸ்புக்கில் கலக்கும் ‘தங்கமீன்கள்’ செல்லம்மாவின் ‘குட்டியூண்டு...’ தொடர்கதை!
சென்னை: வெளி வருவதற்கு முன்னமே சில படங்கள் தான் 'தரமான படம், நிச்சயம் பார்க்க வேண்டும்' என்ற தாக்கத்தை ரசிகர்களிடம் ஏற்படுத்தும்.
அந்த வரிசையில் ராம்-ன் 'தங்கமீன்கள்'க்கும் இப்போதே ரசிகர்கள் உருவாகிவிட்டனர். படம் சம்பந்தமான விளம்பரங்களின் தரத்தைப் பார்த்தே இது அக்மார்க் குடும்பப்படம் என யூகிக்க முடிகிறது.
2010ல் ஆரம்பிக்கப்பட்ட இப்பட வேலைகள், தற்போது ரிலீசாக ரெடியாகியும் தியேட்டர் கிடைக்காத காரணத்தால், இன்னும் ரசிகர்களுக்கு விளம்பர தரிசனம் மட்டுமே கிடைத்தவண்ணம் இருக்கிறது. இதனை ஓரளவுக்காவது சரி செய்யும் வகையில் 'தங்கமீன்கள்' பற்றி பல சுவாரஸ்யமான தகவல்களை பேஸ்புக்கிலும், ட்வீட்டரிலும் வெளியிட்டு வருகிறார் ராம்.

செல்லம்மா எழுதும்...
தங்கமீன்கள் படத்தின் குட்டி கதாநாயகியான செல்லம்மா எழுதுவது போல் ‘குட்டியூண்டு தொடர்கதை' என்ற பெயரில் தொடர்கதை ஒன்றை எழுதி வருகிறார் இயக்குநர் ராம். இன்ரோடு 9பாகம் வெளிவந்து விட்ட நிலையில், அந்த ஒரு பக்க கதைகளைப் படிக்கும் போதே செல்லம்மாளின் வெள்ளந்தி மனசு பளிச்சிடுகிறது...

பாகம் 1 : என் பேரு செல்லம்மா...
முதல் பாகத்தில் ‘பெரியவர்கள் ஆவலாதிகள், புரணிகள் பேசுவதைப் போல் தான் குழந்தைகளும் பேசுகிறார்கள். அவர்களின் புரணிகள் ஆவலாதிகள் அசலானதும் அலாதியானுதும் ஆகும்' என்ற ஆரிமுகத்தோடு செல்லம்மாவின் குட்டியூண்டு தொடர்கதை ஆரம்பிக்கிறது.

பாகம் 2 : அப்பாவின் கல்யாணம்...
இரண்டாம் பாகத்தில், எல்லாக் குழந்தைகளும் போலவே, தன் பெற்றோர் திருமண போட்டோவில் தன்னைத் தேடும் அப்பாவி குழந்தையை பிரதிபலிக்கிறாள் செல்லம்மா... அதற்கும் ஒரு படி மேலே போய் தன் தந்தையை தானே திருமணம் செய்து கொள்ள விரும்புகிறாளாம் அச்சிறுமி...

பாகம் 3 : மிஸ்டர் பீனோடு டும்...டும்...டும்...
மூன்றாம் பாகத்தில், அப்பாவைக் கல்யாணம் செய்து கொள்ள இயலாவிட்டால் என்ன, தன் ஹீரோ மிஸ்டர் பீனை கற்பனை கல்யாணம் செய்து கொள்கிறாளாம் செல்லம்மா...

பாகம் 4 : பூரி நித்யா...
நான்காம் பாகத்தில் தன் அப்பாவிற்கு அடுத்த படியாக தனக்கு மிகவும் பிடித்த பூரி பற்றியும், தன் தோழிக்கு பூரி நித்யா என புனைப்பெயர் வைத்ததையும் பற்றி பேசுகிறாள் செல்லம்மா...

பாகம் 5 : பூரி நித்யா பெயர்க்காரணம்...
பரீட்சையில் பெயில் ஆன செல்லம்மாவின் தோழி , அன்றிரவு தன் வீட்டில் பூரி செய்யப் போகும் காரணத்தால், தனது தற்கொலை முடிவை மறுநாளுக்கு தள்ளிப் போடுவதே ‘பூரி' நித்யாவின் பெயர்க்காரணம்...

பாகம் 6 : ‘ஸ்டுப்பிட்’ ஸ்கூல்...
பீஸ் கட்ட முடியாமல் தன் பள்ளியில் திட்டு வாங்கும் தன் தந்தையின் கண்ணீரை தன் மழலை மொழியில் விளக்குகிறாள் செல்லம்மா...

பாகம் 7 : பேரண்ட்ஸ் மீட்டிங் பயம்...
பேரண்ட் மீட்டிங் என்ற பெயரில் பெற்றோர்களை பள்ளிகள் எவ்வளவு பயமுறுத்துகின்றன என்பதை மறைமுகமாக கிண்டலடிக்கிறாள் செல்லம்மா...

பாகம் 8 : மீன் மழை வேண்டும் இறைவா...
ஸ்கூல் பீஸ் கட்டுவதற்காக, பணிக்கு வெளியூர் செல்லும் செல்லம்மாவின் அப்பா, ‘தான் மீன் பிடிக்க போவதாகக் கூற.... கடவுளிடம் மீன் மழை வேண்டும் என பிரார்த்திக்கிறாள் செல்லம்மா...

பாகம் 9 : செல்லம்மாவை ‘லவ்’ பண்னும் செண்ட்ரிக்...
மகள் சொல்லும் கதைகளை எல்லாம் அப்பாக்கள் நம்புகிறார்கள் என்ரு சொல்வதை விட அதை மிகவும் ரசிக்கிறார்கள் என்பதை வெளிப்படுத்துகிறது செல்லம்மாவின் ‘செண்ட்ரிக்' கார்ட்டூன் கதாபாத்திரக் காதல்...

தொடரும் குட்டியூண்டு கதைகள்...
ஒவ்வொரு கதைக்கும் பொருத்தமான ஹாசிப்கானின் ஓவியங்களும் கதை சொல்கிறது. தொடர்ந்து வெளிவந்து கொண்டிருக்கும் இந்த செல்லம்மாவின் குட்டியூண்டு கதைகளைத் தொடர்ந்து தனது பேஸ்புக் பக்கத்தில் வெளியிட்டு வருகிறார் இயக்குநர் ராம்.


Click it and Unblock the Notifications











