‘போதுமான தியேட்டர்கள் இல்லை’ என்ற வார்த்தையைக் கேட்டாலே... ‘தங்க மீன்கள்’ ராமின் கடிதம்!
சென்னை: சிலபலக் காரணங்களால் அறிவிக்கப்பட்ட தேதியில் ரிலீசாகாமல் தள்ளிப் போனது ஜிகிர்தண்டா படம். இதுதொடர்பாக ஊடகங்களில் பல்வேறு தகவல்கள் கிசுகிசுக்கப் படுகின்றன.
இதே போல், கடந்தாண்டு தனது தங்கமீன்கள் படத்துக்கும் இதே போன்ற பிரச்சினையை சந்தித்தார் இயக்குநர் ராம். போதிய தியேட்டர் கிடைக்காமல் தாமதமாக ரிலீஸ் ஆன தங்கமீன்கள் தேசிய விருதை தட்டிச் சென்றது வேறுகதை.
இந்நிலையில், ஜிகிர்தண்டா இயக்குநர் கார்த்திக் சுப்புராஜூக்கு தனது பேஸ்புக் பக்கத்தில் இது தொடர்பாக கடிதம் ஒன்றை வெளியிட்டுள்ளார் இயக்குநர் ராம். அதில், தான் பட்ட வேதனைகளை முன்னுதாரணமாகக் கூறி, கார்த்திக் சுப்புராஜூக்கு அவர் ஆறுதல் கூறியுள்ளார்.
இது தொடர்பாக மேலும், அக்கடிதத்தில் அவர் கூறியிருப்பதாவது:-

இயக்குநர் கார்த்திக் சுப்புராஜிற்கு...
தங்களின் படம் "ஜிகர்தண்டா" அறிவித்த தேதியில் இருந்து (ஜீலை 25) அடுத்த வாரத்திற்கு தள்ளிப்போவதாக இப்போதுதான் கேள்விபட்டேன்.

தங்கமீன்கள்....
தங்கமீன்கள் வெளிவருவதாக தினசரி இதழ்களில் விளம்பரம் வந்த தேதி ஜீலை 26, போன வருடம். ஆனால் அதுவும் தள்ளிப் போனது. இறுதியில் ஆகஸ்ட் 30ல் திரைக்கு வந்தது.

நானும் அனுபவித்தேன்...
தின செய்தித்தாள்களில் தேதியிட்டு விளம்பரம் வந்தபின் ஊடகங்களுக்கு அளிக்கும் பேட்டிகளில் சொன்ன தேதி சொன்ன நேரம் வந்து சேரும் என்று நாம் சொல்லிய பின் தேதி மாறினால் எத்தனை மனவருத்தம் ஏற்படும் என்பதையும் அது எத்தனை பெரிய சுமையாய் அழுத்தும் என்பதையும் போன வருடம் இதே நாட்களில் நான் உணர்ந்தேன். அனுபவித்தேன்.

எரிச்சல் கதைகள்...
ஏன் தள்ளிப் போனது என்பதற்கு ஒவ்வொருவரும் ஒவ்வொரு கதையை சொல்லச் சொல்ல என்ன எரிச்சல் ஏற்படும் என்பதையும் கண்டுணர்ந்தேன்.

சாதனையாக மாறும்...
இன்றைய உங்களின் இரவு எப்படி இருக்கும் என்பதை என்னால் உணர முடிகிறது. கவலைப்படாதீர்கள், தடைகளை தாண்டி பெருகிற வெற்றி பெரிய வெற்றியாக இருக்கும். சாதனையாக மாறும்.

வாழ்த்துக்கள்...
உங்களின் "பீட்சா" இந்தியில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றதற்கும் என் வாழ்த்துக்கள்.

உங்கள் ஜிகிர்தண்டா...
மதுரைக்கு ஜிகர்தண்டா எப்படியோ அப்படி தமிழ் சினிமாவிற்கு உங்கள் ஜிகர்தண்டா இருக்கும் என நான் நம்புகிறேன்' என இவ்வாறு அக்கடிதத்தில் அவர் தெரிவித்துள்ளார்.

பிரியங்களுடன் ராம்...
தன் கடிதத்தின் கீழே அடைப்பு குறிக்குள் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார் ராம்.
('போதுமான திரையரங்குகள் கிடைக்கவில்லை', என்ற வார்த்தையைக் கேட்டாலே பத்திகிட்டு வருது. எப்பத்தான் மாறுமோ? )


Click it and Unblock the Notifications











