78வது சுதந்திர தினம்.. தங்கலான், ரகு தாத்தா படங்கள் இன்னமும் பேசும் சுதந்திரம் என்ன? ஏன்?
சென்னை: ஆங்கிலேயர்களிடம் இருந்து அடிமைப்பட்டுக் கிடந்த இந்தியா 1947ம் ஆண்டு ஆகஸ்ட் 15ம் தேதி சுதந்திரம் பெற்று இன்றுடன் 78 ஆண்டுகள் ஆன நிலையில், நாடு முழுவதும் கொண்டாட்டங்கள் களைகட்டி வருகின்றன. தமிழ் சினிமா இயக்குநர்கள் இந்த ஆண்டும் இன்னமும் கிடைக்கப்படாத கிடைக்க வேண்டிய சுதந்திரம் பற்றிய படங்களை எடுத்து வருவதற்கு என்ன காரணம் என்று யோசித்துப் பார்த்தால் இத்தனை ஆண்டுகள் சுதந்திரம் அடைந்து என்ன பயன்? என்கிற கேள்வி எழத்தான் செய்கிறது.
இன்னும் எத்தனை ஆண்டுகள் ஆனாலும், இதே போன்ற அரசியலும் சுதந்திர கருத்துக்களை கொண்ட படங்களையும் எடுக்க வேண்டிய தேவை நம் நாட்டில் இருந்துக் கொண்டே தான் இருக்கப் போகிறது என்கிற எண்ணத்தையும் ஆழமாக விதைக்கிறது.

இந்தியன் படம் தொடங்கி இந்தியன் 2 படம் வெளியாகி 28 ஆண்டுகள் ஆன நிலையிலும், ஊழல் இந்தியாவையும் இந்தியர்களையும் விட்டுப் போகவில்லை. கீர்த்தி சுரேஷ் நடித்துள்ள ரகு தாத்தா படம் பெண்களுக்குத் தேவையான சுதந்திரத்தை எடுத்து பேசுகிறது. தங்கலான் திரைப்படம் உண்மையான நிலத்துக்கு சொந்தக்காரனை அந்த நிலத்திலேயே அடிமையாக மாற்றிய அரசியலை பேசுகிறது. இன்று வெளியான இந்த 2 படங்களும் பேசியுள்ள அரசியல் மற்றும் சுதந்திர வேட்கை குறித்து விரிவாக இங்கே பார்க்கலாம் வாங்க..
ரகு தாத்தா பேசும் சுதந்திரம்: இந்தியை தேவையில்லாமல் மக்கள் மத்தியில் திணிக்கக் கூடாது என்றும் ஒரு மொழியை கற்றுக் கொள்ளும் தேவை ஏற்பட்டால் அதை கற்றுக் கொள்ளும் உரிமை அந்த மக்களுக்கு உள்ளது. அதற்கான சுதந்திரத்தை அவர்களே முடிவு செய்வார்கள் என்பதையும் அதையும் தாண்டி காலம் காலமாக கலாச்சாரம் என்கிற பெயரில் பெண்களை அடிமைகளாகவும் ஆண்களை ஆதிக்க சக்தியாகவும் பார்க்கும் மனோபாவம் எப்போது மாறும் என்கிற கேள்வியையும் எழுப்பி இருக்கிறது.

குழந்தை திருமணம் கூடாது, பெண் படித்து வேலைக்குச் செல்ல வேண்டும், பெண்களுக்கும் சம உரிமை மற்றும் சுயமரியாதை வேண்டும் என்கிற கருத்துக்களை ஆழமாகவும் அழுத்தமாகவும் கீர்த்தி சுரேஷ் ரகு தாத்தா படத்தில் பேசி நடித்துள்ளார். பரப்புரை படமாக இருந்து விட்டால் கமர்ஷியலாக ஓடாதோ என்கிற எண்ணத்தில் காமெடி கலந்த பொலிட்டிக்கல் சட்டயர் பீரியட் படமாக ரகு தாத்தா உருவாகியிருக்கிறது. ஆனால், அந்த படத்தில் பேசப்படும் அனைத்து பிரச்சனைகளும் இந்திரா காந்தி பிரதமராக இருந்த போது மட்டுமல்ல, இன்றும் இருக்கத்தான் செய்கிறது. லவ்வர் படத்தில் இடம்பெற்ற வசனம் தான் நினைவுக்கு வருகிறது.
பெண்களுக்கு சுதந்திரம் கொடுக்க ஆண்கள் யார் என்கிற வசனம். ஆனால், 78வது சுதந்திர தினத்திலும் கொல்கத்தாவில் நடத்தப்பட்ட பெண் பயிற்சி டாக்டர் கூட்டு பாலியல் பலாத்காரம் நாட்டையே உலுக்கிக் கொண்டு தான் இருக்கிறது. எத்தனையோ துறையில் சாதித்து வந்தாலும் இன்னமும் பெண்களுக்கான சுதந்திரம் கேள்விக்குறியாகத்தான் உள்ளது.

தங்கலான் பேசும் சுதந்திரம்: பூர்வகுடி மக்களை ஒடுக்கப்பட்ட மக்களாக மாற்றி அவர்கள் வாழவும் முடியாமல், வளரவும் முடியாமல் ஒரு அரசியல் இங்கே காலம் காலமாக நடைபெற்று வருவதை பா. ரஞ்சித் தங்கலான் படத்தில் பேசியுள்ளார். வரி பிரச்சனை, மேலாடை அணியக் கூடாது, சரிக்கு சமம் ஆகிவிடக்கூடாது, பூணூல் போடக் கூடாது, அடிமைகளாகவே வாழவேண்டும் ஜமீந்தார் முதல் வெள்ளைக்காரன் வரை உழைக்கும் மக்களை ஏமாற்றி ராஜ வாழ்க்கை வாழ்ந்த கதையையும் பூர்வகுடி மக்களுக்கு தேவையான சுயமரியாதையும் சுதந்திரத்தையும் தர வேண்டும் என்பதை 78வது சுதந்திர தினத்தை கொண்டாடும் இந்தியாவில் படமாக கொடுத்திருக்கிறார் பா. ரஞ்சித்.

இந்த படமும் பீரியட் படம் தான். நிஜத்திலும், இதை விட மோசமான அரசியல் நடந்துக் கொண்டு தான் இருக்கிறது. ஒடுக்கப்பட்ட மக்கள் என்கிற ஒரு இனம் இருந்துக் கொண்டு தான் இருக்கிறது. அவர்களை நசுக்கும் கூட்டமும் நல்லா வாழ்ந்துக் கொண்டு தான் இருக்கிறது. நேரடியாக நிகழ்கால கதையை எடுத்துச் சொன்னால் படமே வெளிவராது என்கிற அச்சம் படைப்புச் சுதந்திரத்திலும் கை வைக்கப்பட்டு இருக்கும் நிலையில், தான் மக்களுக்கு உணர்த்த இப்படி இயக்குநர்கள் தாங்கள் சமகால மக்களுக்கு சொல்ல வேண்டிய சுதந்திர கதைகளையும் பீரியட் படங்களாகவும் இந்த கதை முழுவதும் கற்பனை கலந்த கதை தான் என்கிற அறிவிப்பு பலகையுடன் வெளியிடக் கூடிய நிலை தான் இன்றும் நிலவுகிறது! சுதந்திர தின வாழ்த்துகள்!


Click it and Unblock the Notifications











