Pa Ranjith: சமரசம் இல்லாத அம்பேத்கரியவாதி பா. ரஞ்சித் பிறந்த நாள்.. குட்டி ரவுண்டப்!
சென்னை: தமிழ் சினிமா பல இயக்குநர்களை அடையாளப்படுத்தி, அங்கீகரித்துள்ளது. அதில் வெகு சில இயக்குநர்கள் மட்டுமே தமிழ் சினிமாவுக்கு அங்கீகாரங்களைப் பெற்றுக் கொடுத்துள்ளனர். அப்படியான இயக்குநர் தான் பா. ரஞ்சித். தனது முதல் படமான அட்டகத்தி படத்தில் இருந்து கடைசியாக அவரது இயக்கத்தில் வெளியான தங்கலான் படம் வரை, தனது அரசியலை மிகத் தெளிவாக தைரியத்தோடு கதையாக்கி வருகின்றார். முதல் படத்தில் இருந்தே தனது அரசியல் நிலைப்பாட்டினை மிகத் தெளிவாக பேசி வருபவராக உள்ள பா. ரஞ்சித் இன்று அதாவது டிசம்பர் 8ஆம் தேதி தனது, 42வது பிறந்த நாளைக் கொண்டாடுகின்றார். இவருக்கு பலரும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். இப்படியான நிலையில், பா. ரஞ்சித் குறித்து இந்தத் தொகுப்பில் சில சுவாரஸ்யமானவற்றைக் காணலாம்.
இயக்குநர் வெங்கட் பிரபுவிடம் உதவி இயக்குநராக பணியாற்றியவர் பா. ரஞ்சித். அட்டக்கத்தி படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் இயக்குநராக அறிமுகமானார். இவரது முதல் படம் விமர்சன ரீதியாகவும் வசூல் ரீதியாகவும் வெற்றிப் படமாக மாறியது. அதன் பின்னர் கார்த்தியை வைத்து மெட்ராஸ் படத்தினை இயக்கினார். பெரும்பான்மையான தமிழ் சினிமாவில், வட சென்னை மக்கள் என்றாலே ரவுடிகள்தான் என பல படங்கள் வெளியானது. ஆனால், வட சென்னை மக்களின் வாழ்வியலைப் பற்றிப் பேசிய தமிழ் சினிமாக்களில், இப்படம் மிகவும் முக்கியமானது. ’ அடங்கவெல்லாம் முடியாது.. அதெல்லாம் அந்தக் காலம்’, ’அதிகாரம்தான் என் மக்களோட விடுதலை.. அந்த அதிகாரத்தை நான் புடுச்சே தீருவேன்’ என்ற வசனங்கள் ரஞ்சித் தான் ஏற்றுக் கொண்ட பாபாசாகேப் அம்பேத்கர் அரசியலைப் பேசிய படமாக மாறியது.

முற்போக்கு அரசியல்: தலித் மக்களின் வாழ்க்கையை மைய்யப்படுத்திய படங்களை அடுத்தடுத்து எடுத்து வெற்றி பெற்றார் பா. ரஞ்சித். மெட்ராஸ் பெரும் வெற்றிப் படமாக மாறியதால், சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்தை வைத்து அடுத்தடுத்து இரண்டு படங்கள் இயக்கினார். சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்தை தலித்தாக நடிக்க வைத்தது மட்டும் இல்லாமல், படம் முழுவதும் அவருக்கு மிடுக்கான கோட், அதற்கேற்ற மிகப்பெரிய ஷோபா என காட்சியிலேயே ஆதிக்கவாதிகளுக்கு பளார் விட்டிருப்பார். இந்தப் படத்திலும் ஆதிக்கவாதிகளுக்கு பளார் விடும் வசனங்களும், காட்சிகளும் ஏராளாமாகவே இருந்தது. காலா படத்தில் பிரதமர் மோடியை மறைமுகமாக விமர்சித்தார். இவர் இயக்கத்தில் வெளியான அட்டக்கத்தி, மெட்ராஸ், கபாலி, காலா, சார்பட்டா பரம்பரை, நட்சத்திரம் நகர்கின்றது மற்றும் தங்கலான் என அனைத்துப் படங்களும் முற்போக்கு அரசியலை மைய்யமாக கொண்டதுதான்.
களம்: இதுமட்டும் இல்லாமல், தயாரிப்பாளராகவும் , சமூக செயல்பாட்டாளராகவும் பா. ரஞ்சித் தமிழ் சினிமா தளத்தில் மட்டும் இல்லாமலும், அரசியல் தளத்திலும் மிகவும் முக்கியமானவராக உள்ளார். நீலம் பண்பாட்டு மையம், நீலம் மாதம் இதழ், நீலம் புரெடக்ஷன்ஸ், நீலம் சமூக வலைதள மற்றும் சமூக ஊடகங்கள் அம்பேத்கரியத்தை ஓங்கிப் பேசும் கலைஞனாக, செயல்பாட்டாளராக, அரசியல்வாதியாக வளர்ந்து நிற்கின்றார் பா. ரஞ்சித். இதனால் அம்பேத்கர் அரசியலை கலை வடிவில் பேச நினைக்கும் பலருக்கும் பக்கபலமாக இருந்து வருகின்றார்.
சமரசம் இல்லாத: சக இயக்குநர்களுடன் இணைந்து இணக்கமாக செயல்படுவது தொடங்கி, தமிழ் சினிமாவையே புரட்டிப் போட்ட இயக்குநராகவும் உருவாகியுள்ள பா. ரஞ்சித்துக்கு ஃபிலிமி பீட் சார்பாக பிறந்தநாள் வாழ்த்துகள். மேலும் பல வெற்றிப் படங்களைக் கொடுக்கும் இயக்குநராகவும், எப்போதும் சமரசமில்லாத அரசியல் பேசும் சமூக செயல்பாட்டாளராகவும் விளங்க வாழ்த்துகள் பா. ரஞ்சித்.


Click it and Unblock the Notifications











