Thathuvamasi 10: கான கருங்குயிலே கச்சேரிக்கு வரியா பாட்டுல இத்தனை விஷயம் இருக்கா? அடடே பிரமாதம்!
சென்னை: தமிழ் சினிமாவில் இடம் பெறும் குத்துப் பாடல்கள், கிளாமர் பாடல்கள், ஐட்டம் பாடல்கள் என்று வகைப்படுத்தப்படுகிற, துள்ளலிசை பாடல்கள் என பலவற்றிலும் தத்துவங்களை வாரி வழங்கி உள்ளார்கள் தமிழ் சினிமா பாடலாசிரியர்கள். இதில் இம்முறை இயக்குநர் பாலா இயக்கத்தில் வெளியான முதல் படமான சேது படத்தில் இடம் பெற்றுள்ள முதல் பாடலான கான கருங்குயிலே பாடலில் இடம்பெற்றுள்ள தத்துவங்களைக் காணலாம்.
பாடலின் இரண்டாவது சரணத்தில், " பொட்டும் வெச்சு பூவும் வெச்சு
பொண்ணு ஒன்னு போனா, இள வட்டம் எல்லாம் கெட்டு
மனம் சுத்தி வரும் தானா, இளசுகள தடுத்தா
அது கேட்காது, பழசுகள திரும்பி
அது பார்க்காது" இந்த வரிகளில் வாலிப வயது ஆண்கள் வாலிப வயது பெண்களை வசீகரிக்க எடுக்கும் முயற்சிகளை கூறுகிறது. இதில் என்னவென்றால், ஒரு ஆண் ஒரு பெண்ணை வசீகரிக்க எடுக்கும் முயற்சிகளில் தோற்றம் பிரதான காரணம் என்பதை விளக்குகிறது. மனித குணங்களில் ஒன்றான காதல் எனும் உணர்வானது, சாதி பார்த்தோ மதம் பார்த்தோ இனம் பார்த்தோ வருவதில்லை என்பதையும் புரிந்து கொள்ள வேண்டும். மேலும் சாதி, மதம் பார்த்து தான் பழக வேண்டும், காதல் கொள்ள வேண்டும் என யாராவது சொன்னால், அதை இளைஞர்கள் கேட்க மாட்டார்கள், கேட்கக்கூடாது என்றும் கூறுகிறார் பாடலாசிரியர் பொன்னடியான். யாராவது சாதி, மதம், இனம் பார்த்து பழகு என்று சொல்லக்கூடிய பழமைவாதிகளை இந்த இளைஞர்கள் மதிக்க மாட்டார்கள், அவர்களை சீண்டி கூட பார்க்க மாட்டார்கள் என்பதைத்தான் பாடலாசிரியர் கூறுகிறார்.

இதைத் தொடர்ந்து வரும் வரிகளும் மிகவும் முக்கியமானவற்றை பேசுகிறது. அதாவது, " சேட்டை எல்லாம் செய்யுறது, சின்ன சின்ன பருவம், ஆட்சி எல்லாம் உங்களுக்கு
கல்வி என்னும் செல்வம், காலம் இருக்குது வாயா
இந்த மண்ணோட மன்னர்களே". இந்த வரிகள், இளமைப் பருவத்தில் குறும்பு செய்வது இயல்பு தான், ஆனால் கவனம் முழுவதும் கல்வியின் மீது இருக்க வேண்டும். வாழ்வில் சாதித்திட இதுவரை எதுவும் செய்யவில்லை என்றால் என்ன, காலம் இன்னும் இருக்கிறது, இப்போது தொடங்கினால் கூட வெற்றிகளைக் குவித்து விட முடியும்" என்று கூறுகிறார்.
மூன்றாவது சரணத்தில், " அந்தியில பந்தடிச்சு
ஆடி விளையாடு, நீ தந்தி ஒன்ன நீட்டிகிட்டு
முந்தி வந்து பாரு, பொழுதிருக்கும் போதே
புகழ் தேடு, இளமை அது போனா
திரும்பாது, கல்லூரிக்குள் கண்ட கனா
நல்ல கனவாக, கண் முழிச்சு கற்றதெல்லாம்
நல்ல நினைவாக" என்ற வரிகளும் மிகவும் முக்கியமான வரிகள்.

இந்த வரிகளில், " பாரதியார் சொன்ன "மாலை முழுதும் விளையாடு" என்ற கவிதையை உவமையாகக் கொண்டு அந்தியில பந்தடிச்சு ஆடி விளையாடு என்ற வரிகளை உருவாக்கி உள்ளார். காற்றுள்ள போதே தூற்றிக் கொள்ள வேண்டும் என்பதை சுட்டிக் காட்டுகிறார். நேரத்தை வீணாக்காமல், நேரத்தை நல்லபடியாக பயன்படுத்த வேண்டும் என்று கூறுகிறார். கல்லூரியில் படிக்கும் போது நமது எதிர்காலத்தை நல்லபடியாக தீர்மானிக்கும் படிப்பைப் படிக்க வேண்டும். படிப்பது எப்போதும் நினைவில் இருப்பதைப் போல தெளிந்து படிக்க வேண்டும் என்று தெரிவித்துள்ளார். இந்த பாடலில் உள்ள வரிகள் அனைத்துமே வாழ்க்கை தத்துவங்களை உள்ளடக்கிய வரிகளாக உள்ளன.


Click it and Unblock the Notifications











