Leo Audio Launch - தலைவா டூ லியோ வரை.. அடக்கப்படுகிறாரா விஜய்?.. யப்பா எவ்வளவு பிரச்னைகள்
சென்னை: Leo Audio Launch (லியோ ஆடியோ லான்ச்) விஜய் படங்கள் கிளப்பும் பரபரப்பைவிட அவரது ஆடியோ லான்ச் ஒரு பரபரப்பை கிளப்புவது வழக்கம். அப்படித்தான் லியோ இசை வெளியீட்டு விழா ரத்து ஆனதும்.
இந்தியாவின் டாப் நடிகர்களில் ஒருவராக இருக்கிறார் விஜய். அவர் நடிக்கும் ஒவ்வொரு படமும் அசால்ட்டாக நூறு கோடி ரூபாயை வசூலிக்கின்றன. இதனால் தமிழ்நாட்டின் வசூல் சக்கரவர்த்திகளில் ஒருவராக திகழ்ந்துகொண்டிருக்கிறார். அதேசமயம் வசூல் சக்கரவர்த்திகளில் ஒருவர் இல்லை ஒரே வசூல் சக்கரவர்த்திதான் அது விஜய்தான் என்று அவரது ரசிகர்கள் தொடர்ந்து கூறிவருகின்றனர்.

சூப்பர் ஸ்டார் பஞ்சாயத்து: இதன் காரணமாக ரஜினி ரசிகர்கள் கொந்தளித்து கோதாவில் குதிக்க அவர்களுக்கு ஈடாக விஜய் ரசிகர்களும் தங்களது கருத்துக்களை தெரிவித்துவந்தனர். இதனையடுத்து சூப்பர் ஸ்டார் பஞ்சாயத்து ஆரம்பித்தது. சூழல் இப்படி இருக்க ஜெயிலர் படத்தின் ஆடியோ லான்ச்சில் ரஜினி குட்டி கதை சொல்ல அது விஜய்க்கு எதிராக கருதப்பட்டது. எனவே லியோ ஆடியோ லான்ச்சில் விஜய் குட்டி கதை சொல்வார் என்று எதிர்பார்க்கப்பட்டது.
ஆனால் லியோவுக்கு இசை வெளியீட்டு விழாவே நடக்காது என்று அறிவித்து இதற்கு அரசியல் அழுத்தமோ இல்லை வேறு எதுவுமோ காரணம் இல்லை என்று கூறினர். இருந்தாலும் இதற்கு பின்னால் ஏதோ ஒரு காரணம் இருக்கிறது என்று ஒருதரப்பினர் அடித்து கூறுகின்றனர். இந்த சூழலில் விஜய் இதுவரை சந்தித்த பிரச்னைகள் குறித்து காணலாம்.
தலைவா: விஜய்க்கு முதல் பிரச்னை ஆரம்பித்தது தலைவா படத்தில். அதில் டைம் டூ லீட் என்ற வாசகம் அப்போதைய முதலமைச்சர் ஜெயலலிதாவை கொதிப்படைய செய்ய படத்துக்கு தடை விதித்தார். அதனைத் தொடர்ந்து கொடநாடுக்கு சென்று ஜெயலலிதாவை சந்திக்க அப்பாயிண்ட்மெண்ட் கேட்டார்கள் விஜய்யும், எஸ்.ஏ.சியும். ஆனால் அவர்களை சந்திக்கவில்லை ஜெ. இதனையடுத்து விஜய் ஒரு வீடியோவை வெளியிட்டிருந்தார். பிறகு சாந்தமானார் ஜெயலலிதா; தமிழ்நாட்டில் ரிலீஸானது படம்.

கத்தி: வெளியில் தன்னை அரசியல் அழுத்தங்கள் சுற்றிக்கொண்டிருந்தபோது கத்தி படத்தில் அரசியல் வசனங்களை பேச ஆரம்பித்தார் விஜய். குறிப்பாக அந்தப் படத்தில் காத்துலயே ஊழல் பண்ற ஊருயா இது என்ற வசனம் திமுகவினரையும், காங்கிரஸையும் கொதிப்படைய செய்தது. மேலும் தீர்ப்பே வராதபோது எப்படி அவர் அப்படி ஒரு வசனத்தை பேசலாம் என நேரடியாக பேச ஆரம்பித்தனர். ஆனால் அது படத்தில் வந்த வசனம் என்பதால் பிரச்னை பெரிய பூதாகரமாக மாறவில்லை.
மெர்சல்: மாநில கட்சிகளை மட்டும்தான் விஜய் தனது திரைப்படங்களில் சீண்டுவார் என்று ஒரு பிம்பம் இருந்த சூழலில் மெர்சல் திரைப்படத்தில் ஜிஎஸ்டி உள்ளிட்டவைகளை வைத்து அவர் பேசிய வசனம் தேசிய கட்சியான பாஜகவை எரிச்சல்படுத்தியது. உடன்வே களத்தில் இறங்கிய ஹெச்.ராஜா விஜய்யை ஜோசப் விஜய் என்று பேசி மத ரீதியான வட்டத்துக்குள் அந்தப் பிரச்னையை கொண்டு சென்றார். ஆனால் விஜய்யின் பக்கம் ஆதரவு பலமாக இருந்தது. அன்றிருந்து விஜய் தனது அறிக்கைகளில் ஜோசப் விஜய் என்றே குறிப்பிடுவது வழக்கம்.
சர்கார்: சர்கார் இசை வெளியீட்டு விழாவிலும் சரி படத்திலும் சரி அரசியல் பேசுவதில் ஒருபடி மேலே சென்றார் விஜய். இசை வெளியீட்டு விழாவில் பேசும்போது, இந்தப் படத்தில் நான் முதலமைச்சராக நடிக்கவில்லை. உண்மையிலேயே நான் முதலமைச்சரானால் முதலமைச்சராக நடிக்கமாட்டேன் என ஒரு பஞ்ச்சை வீசினார். அதனை பார்த்த இரு கட்சியினரும் அப்போ இப்போதுவரை முதலமைச்சராக இருந்தவர்கள் நடித்தார்களா என்ற கேள்வியை முன்வைத்தார்கள். மேலும் படத்தில் இலவச பொருட்களை தூக்கி எறியும் காட்சியை பார்த்த திராவிட கட்சியினர் விஜய் கண்டிப்பாக திராவிட கட்சிக்கு எதிராகத்தான் காய் நகர்த்துகிறார் என்பது உறுதியாகியிருப்பதாக அறுதியிட்டு கூறினார்கள்.

சூழல் இப்படி இருக்க கடந்த 2021ஆம் ஆண்டு நடந்த தமிழ்நாடு சட்டப்பேரவைத் தேர்தலில் உச்சக்கட்ட செயலை செய்தார் விஜய். அதாவது நீலாங்கரையில் இருக்கும் தனது வீட்டிலிருந்து சைக்கிளில் வாக்குச்சாவடிக்கு சென்று வாக்களித்தார் விஜய். அது பல்வேறு யூகங்களை கிளப்பியது. விஜய் ஓட்டி சென்ற சைக்கிள் கருப்பு சிவப்பு நிறத்தில் இருந்ததால் அவர் திமுகவுக்கு ஆதரவு தெரிவித்திருக்கிறார்; மேலும் பெட்ரோ, டீசல் விலை உயர்வை சூசகமாக உணர்த்ததான் அவர் சைக்கிளில் சென்றார் என பலர் பேசினர். ஆனால் விஜய் வழக்கம்போலவே அமைதியாகவே இருந்தார்.
அண்மையில்கூட தனது மக்கள் இயக்கம் சார்பில் மாணவ, மாணவிகளுக்கு சால்வை அணிவித்து ஊக்கத்தொகை அளித்து மேடையில் பேசினார். அப்போது பெரியார், காமராஜர், அம்பேத்கர் ஆகியோரை படியுங்கள் என்றார். ஆனால் இதில் ஏன் அவர் அண்ணாவை விட்டுவிட்டார் என்ற சர்ச்சையும் எழுந்தது. இதனையடுத்து அவர் அரசியலில் நுழையப்போவது உறுதி என்ற குரல்கள் பலமாகவே கேட்க ஆரம்பித்திருக்கின்றன.
இப்படி அவரை சுற்றி அரசியல் வளையங்கள் போடப்பட்டுக்கொண்டிருந்தாலும் அவர் எந்த சார்புடையவர் என்பது பலருக்கும் புரியாத புதிராகவே இருக்கிறது. ஏனெனில் அவர் மோடி, அன்னா ஹசாரேவையும் சந்தித்தார் ஜெயலலிதாவுக்கும் ஆதரவு நிலைப்பாட்டை எடுத்தார் திமுகவுக்கும் ஆதரவு நிலைப்பாட்டை எடுத்தார். திடீரென தான் தனிப்பெரும் சக்தி என்பதுபோலவும் அவரது நடவடிககிகள் இருக்கும்.
குறிப்பாக தனது ஆடியோ வெளியீட்டு விழாவில் சமீபகாலமாக விஜய் பேசுவது பெரும்பாலும் அரசியலை மையப்படுத்தியும், தன்னை சுற்றி ஒரு பெருங்கூட்டம் இருக்கிறது என்பதை அரசியல் கட்சியினருக்கு உணர்த்துவதுபோலும்தான் இருப்பதாக ஒரு கருத்து பலமாக எழுந்திருக்கிறது. அதனால்தான் இப்போதும் லியோ ஆடியோ வெளியீட்டுக்கு முட்டுக்கட்டை போட்டிருக்கலாம் என வெகு சிலர் கூறிவருகின்றனர். இதையெல்லாம் கேள்விப்பட்ட விஜய் ரசிகர்கள் எங்கள் தளபதியை பேசவிடாமல் எவ்வளவு அடக்கினாலும் அவருக்கென்று இருக்கும் கூட்டத்தை யாராலும் குறைக்க முடியாது என சமூக வலைதளங்களில் கமெண்ட்ஸ் செய்துவருகின்றனர்.


Click it and Unblock the Notifications











