’மஞ்சும்மல் பாய்ஸ்’ இயக்குநரின் அடுத்த படம் ‘பாலன் தி பாய்’.. கதை என்ன தெரியுமா?
சென்னை: கொடைக்கானல் குணா குகையை மையமாக வைத்து உருவாக்கப்பட்ட மலையாள படமான மஞ்சும்மல் பாய்ஸ் படம் கடந்த ஆண்டு தியேட்டரில் வெளியானது. இந்த படம் மலையாளத்தில் மட்டுமல்ல, தமிழிலும் அமோக வரவேற்பை பெற்று வசூலை அள்ளியது. இயக்குநர் சிதம்பரத்தின் அடுத்த படம் என்னவாக இருக்கும் என அனைவரும் எதிர்பார்த்து இருந்த நிலையில், அதற்கான அறிவிப்பு வெளியாகி உள்ளது.
மலையாளத் திரைப்படங்கள் ஆண்டு தோறும் ஏதோ ஒரு வித்தியாசமான கதையை கொடுத்து தமிழ் ரசிகர்களுக்கு விருந்து படைத்து விடும். அந்த வகையில், மலையாளத்தில் வெளியாகி சக்கைப்போடு போட்ட படம் தான் மஞ்சும்மல் பாய்ஸ். கொடைக்கானலுக்கு சுற்றுலா வரும் 11 நண்பர்கள், குணா குகையை சுற்றிப்பார்க்க தடுப்பு வேலிகளை கடந்து செல்கிறார்கள். குணா குகையின் அழகை பார்த்து ரசித்துக்கொண்டு இருக்கும் போது, சுபாஷ் குழியில் தவறி விழுந்து விடுகிறார். இதனால் பதறிப்போகும் நண்பர்கள் அவனை மீட்கும் முயற்சியில் ஈடுபட, அங்கு வரும் காவல் துறையினர். இந்த குழியில் விழுந்தவன் யாரும் பிழைச்சது இல்லை என்றார். ஆனால், நண்பர்கள், விடாபிடியாக இருந்து நண்பனுக்கான தனது உயிரையும் பொருட்படுத்தாமல் பல அடி ஆழ குழிக்குள் இறங்கி நண்பனை மீட்பது தான் இந்த படத்தின் கதை.

மஞ்சும்மல் பாய்ஸ்: இந்த படத்தில் இடம் பெற்ற கண்மணி அன்போடு காதலன் பாடல் இந்த படத்தின் மூலம் மீண்டும் டிரெண்டாகி அனைவரையும் வசியம் செய்தது. 20 கோடி பட்ஜெட்டில் எடுக்கப்பட்ட இந்த படம், அதைவிட 12 மடங்கு வசூலை அள்ளிக்குவித்து உலகம் முழுவதும் ரூ.241.56 கோடியை வசூலித்து வரலாறு படைத்தது. இந்த படத்தின் மூலம் உலகம் முழுவதும் பிரபலமான இயக்குநர் சிதம்பரத்தை அனைவரும் பாராட்டினார்கள். நடிகர் கமல்ஹாசன் மஞ்சும்மல் பாய்ஸ் படக்குழுவை நேரில் வரவைத்து அவர்களை மனதார பாராட்டினார். மஞ்சும்மல் பாய்ஸ் பட வெற்றியைத் தொடர்ந்து, இயக்குநர் சிதம்பரத்தின் அடுத்த படம் என்னவாக இருக்கும் என அனைவரும் எதிர்பார்த்து இருந்த நிலையில், அதற்கான அறிவிப்பு வெளியாகி உள்ளது.
அடுத்த படம்: இயக்குநர் சிதம்பரம் தனது அடுத்த படத்திற்கான போஸ்டரை வெளியிட்டு படத்தின் பெயரை அறிவித்துள்ளார். தனது அடுத்த படத்திற்கு மஞ்சுமல் பாய்ஸ் போல 'பாலன் தி பாய்' என பெயர் வைத்துள்ளார். இந்தப் படத்தை முழுக்க முழுக்க புதுமுகங்கள் நடிக்க உள்ளனர். கே.வி.என் நிறுவனம் மற்றும் தேஸ்பியன் பிலிம்ஸ் ஆகிய நிறுவனங்கள் இணைந்து தயாரிக்கும் இப்படத்திற்கு கதை எழுதியவர் ஜீத்து மாதவன். இவர் 'ரோமாஞ்சம்' மற்றும் 'ஆவேசம்' படத்தின் இயக்குநர். இரண்டு வெற்றி இயக்குநர்கள் இணைந்திருக்கும் 'பாலன் தி பாய்' படம் நிச்சயம் அடுத்த ஒரு வெற்றிப்படமாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.


Click it and Unblock the Notifications











