தளபதிக்கு 50வது பிறந்தநாள்.. தி கோட் படத்தின் அப்டேட் இல்லாம எப்படி? படக்குழு நச் ட்வீட்!
சென்னை: நடிகர் விஜய் நடிப்பில் அடுத்து வெளியாகவுள்ள படம் தி கோட். வெங்கட் பிரபு இயக்கத்தில் உருவாகியுள்ள இந்த படத்தில் நடிகர் விஜய்யுடன் பிரபுதேவா, பிரசாந்த், மைக் மோகன், சினேகா உள்ளிட்டோர் நடித்துள்ளனர். யுவன் ஷங்கர் ராஜா இசையமைத்து வரும் இந்த படத்தின் முதல் பாடல் ஏற்கனவே வெளியாகி ரசிகர்கள் மத்தியில் கலவையான விமர்சனங்களைப் பெற்றது.
தி கோட் படத்தில் நடிகர் விஜய் இரட்டை வேடங்களில் நடிக்கின்றார். மேலும் படத்தில் ஒரு முக்கியமான காட்சியில் மறைந்த நடிகர் விஜயகாந்த் ஏ.ஐ. மூலம் காட்சிபடுத்தப்பட்டுள்ளார். அதேபோல் மறைந்த பாடகி பவதாரணி குரலில் ஏ.ஐ தொழில்நுட்பம் மூலம் ஒரு பாடல் உருவாக்கப்பட்டுள்ளது என்ற தகவலும் வெளியானது. ஏற்கனவே தி கோட் படத்தின் போஸ்டர்கள் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்ற நிலையில், படத்தின் அடுத்த அப்டேட் எப்போது என ரசிகர்கள் ஆவலுடன் காத்துக் கொண்டு உள்ளனர்.

நாளை அதாவது ஜூன் 22ஆம் தேதி விஜய் தனது 50வது வயதை எட்டவுள்ளார். இதனால் இவரது பிறந்த நாள் கொண்டாட்டத்தின் ஒரு பகுதியாக தி கோட் படத்தின் முக்கிய அப்டேட் வெளியாக அதிக வாய்ப்புகள் இருப்பதாக ரசிகர்கள் எதிர்பார்த்து காத்துக் கொண்டு உள்ளனர்.

இந்நிலையில் படத்தின் தயாரிப்பாளர் அர்ச்சனா கல்பாதி தனது எக்ஸ் பக்கத்தில் தி கோட் படத்தின் அடுத்த அப்டேட் இன்று அதாவது ஜூன் 21ஆம் தேதி மதியம் வெளியிடவுள்ளதாக குறிப்பிட்டுள்ளார். இந்த அறிவிப்பு விஜய் ரசிகர்களுக்கு பெரும் மகிழ்ச்சியைக் கொடுத்துள்ளது.

ஆனால், தமிழ்நாடே தற்போது கள்ளக்குறிச்சி விஷ சாராயம் அருந்தி உயிரிழந்தவர்கள் தொடர்பாக பெரும் கவலையில் இருக்கும் நிலையில், நடிகரும் தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவருமான நடிகர் விஜய் தனது பிறந்தநாள் கொண்டாட்டங்களை அப்படியே நிறுத்தச் சொல்லி தனது கட்சிக்காரர்களுக்கு உத்தரவிட்டுள்ளார்.

இது தொடர்பான அறிவிப்பை தமிழக வெற்றிக் கழகத்தின் பொதுச் செயலாளர் புஸ்ஸி என். ஆனந்த் வெளியிட்டுள்ளார். ஏற்கனவே தி கோட் படத்தின் அப்டேட் இன்று மதியம், வெளியிடப்படும் என அர்ச்னா கல்பாதி தெரிவித்திருந்த நிலையில், புஸ்ஸி ஆனந்தின் பதிவு ரசிகர்களை குழப்பமடையச் செய்துள்ளது. இதனால் அப்டேட் வெளியாகுமா இல்லையா என்பதை பொறுத்திருந்துதான் பார்க்கவேண்டும்.

ஏற்கனவே த.வெ.க., தலைவர் விஜய் கள்ளக்குறிச்சி சம்பவம் தொடர்பாக கண்டன அறிக்கை வெளியிட்டிருந்தார். அந்த அறிக்கையில், " கள்ளக்குறிச்சி மாவட்டம், கருணாபுரம் பகுதியில் கள்ளச் சாராயம் அருந்திய 25க்கும் மேற்பட்டோர் காலமான செய்தி, மிகுந்த அதிர்ச்சியையும் மன வேதனையையும் அளிக்கிறது. உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு எனது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக்கொள்வதோடு, உடல்நலம் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருபவர்கள் விரைவில் முழு உடல்நலம் பெற இறைவனைப் பிரார்த்திக்கின்றேன்.

தமிழ்நாடு அரசின் அலட்சியம்: கடந்த ஆண்டு இதே நிகழ்வு காரணமாகப் பல உயிர்களை இழந்த துயரத்தில் இருந்து இன்னும் முழுமையாக மீளாத நிலையில், மீண்டும் இப்படியொரு சம்பவம் நிகழ்ந்திருப்பது, அரசு நிர்வாகத்தின் அலட்சியத்தையே காட்டுகிறது.

இது போன்ற சம்பவங்கள் நிகழாத வண்ணம், இனிமேலாவது தமிழக அரசு கடுமையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு தடுக்க வேண்டும் என்று வலியுறுத்திக் கேட்டுக்கொள்கிறேன்" என குறிப்பிட்டிருந்தார். அதேபோல் நேரிலும் சென்று பாதிக்கப்பட்ட மக்களை சந்தித்து நலம் விசாரித்ததுடன், உயிரிழந்தவர்களின் குடும்பத்தினரைச் சந்தித்து ஆறுதல் கூறினார். இது தொடர்பான புகைப்படங்களும் இணையத்தில் ட்ரெண்டானது.


Click it and Unblock the Notifications











