மலையாள சினிமாவில் தலைவிரித்தாடும் பாலியல் சீண்டல்...ஹேமா கமிஷன் அதிர்ச்சித் தகவல்!
திருவனந்தபுரம்: சினிமாவில் நடிகைகளை அட்ஜெஸ்ட்மெண்ட்டுக்கு அழைப்பது குறித்த புகார்கள் அதிகரித்து வரும் நிலையில், ஹேமா கமிஷன் வெளியிட்டுள்ள புதிய அறிக்கையில், மலையாள திரையுலகம் குறித்த அதிர்ச்சி தகவல்கள் வெளியாகி உள்ளது.
233 பக்கங்கள் கொண்ட அறிக்கை இன்று வெளியிடப்பட்டது. அதில், மலையாளத் திரையுலகில் காஸ்டிங் கவுச் ஒரு பெரிய பிரச்சினையாகவே மாறி உள்ளது. இது பெண்கள் மீதான சுரண்டலுக்கு வழவகுக்கிறது என்றும், வேலை வேண்டும் என்றால், அதற்கு ஈடாக பாலியல் ரீதியிலான பிரச்சனைகளை சந்திப்பதாகவும், இது ஆபத்தான ஒரு விஷயமாக மாறி வருவதாகவும் பெண்கள் தெரிவித்துள்ளனர்.

காஸ்டிங் கவுச்: மேலும், காஸ்டிங் கவுச் பிரச்சினை திரையுலகில் பெருமளவில் உள்ளது. பல நடிகர்கள் திரைப்பட வாய்ப்புக்காக சமரசம் செய்து கொள்ளுமாறு கேட்கப்படுவதாகவும். மலையாள சினிமாவில் இது சகஜமாக நடந்து வருவதாகவும், சினிமா கனவோடு வரும் பெண் நடிகர்களை கட்டாயப்படுத்துவது இயக்குனர்களும், தயாரிப்பாளர்களும் தான் என்றும், அவர்களை சமரசம் செய்து கொண்டு சிலர் படவாய்ப்பை பெற்று விடுகின்றனர். சிலர், இதற்கு உடன்படாத போது அவர்கள் பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளாகுகின்றனர்.
பெண்கள் மீதான சீண்டல்: மலையாள திரையுலகில் இதுபோன்ற பாலியல் சீண்டல் அதிக அளவில் காணப்படுகிறது. இதனால், சினிமாவில் இருக்கும் பெண்கள் தனியாக வேலைக்குச் செல்வதை பாதுகாப்பற்றதாக உணர்கிறார்கள். சினிமா என்பது மற்ற தொழில்களில் இருந்து வேறுபட்டதாக உள்ளது. கல்லூரி, மருத்துவம், பொறியியல் போன்ற துறைகளில் பெண் இதுபோன்ற சங்கடத்தை குறைவாகவே சந்திக்கின்றனர். இந்த துறைகளை சேர்ந்தவர்களுக்கு வேலையை பெற, திறமை, மதிப்பெண், நேர்காணலில் தேர்ச்சி பெறுவது போதுமானதாக உள்ளது.
போதையில் ஆண்கள்: ஆனால், சினிமாவில், பிரதானமாக இருப்பது அட்ஜெண்ட்மெண்ட் தான், இதில் எந்த அளவுக்கும் மாற்றுக்கருத்து இல்லை. இதனால், சினிமாவில் இருக்கும் பெண்கள் தங்களுடைய பாதுகாப்பிற்காக பெற்றோரை வேலைக்கு அழைத்து செல்கின்றனர். அதுமட்டுமில்லாமல், சினிமாவைச் சேர்ந்த பல ஆண்கள் குடி போதையில் அடிக்கடி பெண் கலைஞர்கள் தங்கியிருக்கும் ஹோட்டல் கதவுகளை தட்டுவது, ஆண்கள் அறைகளுக்குள் வலுக்கட்டாயமாக நுழைந்து ஆபாசமாக பேசி பெண்களை பணியவைக்க பார்க்கின்றனர்.
புகார் அளிப்பதில்லை: சினிமாவில் பல பெண்கள், இந்த மோசமான சம்பவத்தை சந்தித்த போதும், இதுகுறித்து போலீசில் புகார் செய்ய தயங்குகின்றனர். ஏன் காவல்துறை உதவியை நாடுவதில்லை என்று கேட்டபோது, இதுபோன்ற சம்பவங்களுக்கு புகார் அளித்தால், பல கடுமையான பிரச்சனைகளை சந்திக்க நேரிடும் என்ற அச்சத்தின் காரணமாக இது போன்ற பிரச்சனை குறித்து வாய் திறக்காமல் இருப்பதாக பாதிக்கப்பட்ட பெண்களே கூறுவதாக ஹேமா கமிஷன் அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.


Click it and Unblock the Notifications











