நா.முத்துக்குமார் குடும்பத்துக்கு வீடு.. விலை மட்டும் எவ்வளவு தெரியுமா?.. எக்ஸ்க்ளூசிவ் தகவல் இதோ
சென்னை: நா.முத்துக்குமாரின் 50ஆவது பிறந்தநாளை முன்னிட்டு கடந்த 19ஆம் தேதி சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கத்தில் ஆனந்த யாழை என்ற பெயரில் இசை கச்சேரி நடந்தது. இதில் இயக்குநர்கள், நடிகர்கள், இசையமைப்பாளர்கள், பாடகர்கள், பாடலாசிரியர்கள் என பலர் கலந்துகொண்டு அவரையும், அவரது குடும்பத்தையும் கௌரவப்படுத்தினார்கள். அதுமட்டுமின்றி அவரது குடும்பத்துக்கு போரூரில் ஒரு ஃப்ளாட்டும் வழங்கப்பட்டது.
பாலுமகேந்திராவிடம் உதவி இயக்குநராக இருந்து பிறகு பாடலாசிரியராக மாறியவர் நா. முத்துக்குமார். சீமான் இயக்கிய வீரநடை திரைப்படத்தில்தான் முதன்முறையாக பாடலை எழுதினார் அவர். முதல் பாடலிலேயே எளிமையான வரிகள், உவமைகளை வைத்து கவனம் ஈர்த்த அவருக்கு; செல்வராகவன் - யுவன் ஷங்கர் ராஜாவுடன் கூட்டணி அமைக்கும் வாய்ப்பு காதல் கொண்டேன் திரைப்படத்தில் கிடைத்தது.
ஃபேமஸ் ஆன முத்துக்குமார்: அந்தப் படத்தில் இடம்பெற்ற தேவதையை கண்டேன், தொட்டு தொட்டு போகும் தென்றல், உன்னை தோழி என்பதா, நெஞ்சோடு கலந்திடு உறவாலே ஆகிய பாடல்களை எழுதினார் முத்து. அந்தப் பாடல்கள் பட்டித்தொட்டியெங்கும் ஒலித்து ஹிட்டாகின. அப்போதிருந்து பரபரப்பாக இயங்க ஆரம்பித்தார் அவர். அத்தனை இயக்குநர்களும் தங்களது படங்களில் நா. முத்துக்குமாரை ஒரு பாடலாவது எழுத வைத்துவிட்டார்கள்.
எளிமைதான் சொத்து: வாய்ப்புகள் கொட்டி கிடைத்தாலும் எந்த தலைக்கனத்தையும் ஏற்றிக்கொள்ளாமல் தானும் எளிமையாக இருந்து; பாடல் வரிகளையும் எளிமையாக கொடுத்தார். இதன் காரணமாக தொடர்ந்து அதிக பாடல்கள் எழுதிய பாடலாசிரியர் என்ற பெருமையை பத்து வருடங்கள்வரை தக்க வைத்திருந்தார். ரசிகர்களும் முத்துக்குமாரை தங்களது ஆதர்ச கவிஞராக, பாடலாசிரியராக கொண்டாடினார்கள்.

உயிரிழந்த முத்துக்குமார்: சூழல் இப்படி இருக்க கடந்த 2016ஆம் ஆண்டு ஆகஸ்ட் 14ஆம் தேதி உடல்நல குறைவால் உயிரிழந்தார் அவர். அவரது உயிரிழப்பு ஒட்டுமொத்த தமிழ்நாட்டையும் சோகத்தில் ஆழ்த்தியது. தங்களது வீட்டில் ஒருவரை இழந்ததுபோன்றே பலரும் வருத்தப்பட்டார்கள். அவருக்கு ஜீவலட்சுமி என்ற மனைவி, ஆதவன் எனும் மகன், மகாலட்சுமி எனும் மகள் இருக்கிறார்.
ஆனந்த யாழை: முத்துக்குமார் உயிரிழந்து 9 வருடங்கள் ஆகப்போகும் நிலையில்; அவரது 50அவது பிறந்தநாள் கடந்த ஜூலை 12ஆம் தேதி வந்தது. அதனையொட்டி அவர் தமிழ் சினிமாவுக்கு செய்த கலை பணிக்காக அவருக்கு நன்றிக்கடன் செலுத்தும் விதமாகவும், அவரையும் அவரது குடும்பத்தையும் கௌரவிக்கும் விதமாகவும் ஆனந்த யாழை என்ற இசை கச்சேரி சென்னையில் நடைபெற்றது. அந்த நிகழ்ச்சியில் ஏராளமான பிரபலங்கள் கலந்துகொண்டார்கள். 5,000 ரசிகர்கள்வரை நிகழ்ச்சியை நேரில் கண்டு களித்தார்கள்.
சாவி கொடுத்த எஸ்கே: நா.முத்துக்குமாருக்கு செய்யும் நன்றிக்கடனாக இந்த நிகழ்ச்சியில் வைத்து அவரது குடும்பத்துக்கு ஃப்ளாட் ஒன்றை வழங்க முடிவு செய்யப்பட்டிருந்தது. அதன்படி சிவகார்த்திகேயன் அந்த வீட்டின் சாவியை ஜீவலட்சுமி முத்துக்குமார், ஆதவன், மகாலட்சுமி ஆகியோரிடம் வழங்கினார். அது பார்ப்பதற்கு நெகிழ்ச்சி ஏற்படுத்துவதாக இருந்தது. மேலும் இந்த நிகழ்ச்சி இவ்வளவு சிறப்பாக நடந்ததற்கும், முத்துக்குமாரின் குடும்பத்துக்கு வீடு ஒன்றை கொடுப்பதற்கு காரணமாகவும் ஏ.எல்.விஜய், ராம், வசந்தபாலன், லிங்குசாமி, ஆர்.கே.செல்வமணி, சுரேஷ் காமாட்சி உள்ளிட்டோர் இருந்தார்கள்.
தங்களோடு பணியாற்றி மறைந்துபோன ஒரு கலைஞரை மறக்காமல்; அவருக்கு செய்ய வேண்டிய நன்றிக்கடனை அவரது குடும்பத்துக்கு இத்தனை வருடங்கள் கழித்தும் செய்ததை பார்த்து தமிழ் திரையுலகம் பாராட்டிவருகிறது. அதேசமயம் முத்துக்குமாரின் குடும்பத்துக்கு வழங்கப்பட்ட வீட்டின் விலை இரண்டரை கோடி ரூபாய் என்று ஒரு பேச்சு ஓடிக்கொண்டிருக்கிறது.
உண்மையான விலை: ஆனால் அது உண்மையில்லை என்பது ஃபில்மிபீட் தமிழ் செய்த கள ஆய்வில் தெரியவந்திருக்கிறது. அதாவது குடும்பத்துக்கு வழங்கப்பட்ட வீடு போரூரில் அமைந்திருக்கிறது. அதன் உண்மையான விலை 80 லட்சம் ரூபாய்தான் என்று உறுதிப்படுத்தப்பட்டிருக்கிறது. மேலும் இரண்டரை கோடி ரூபாய் என்று தவறான தகவல்களை பரப்ப வேண்டாம் என்றும்; இந்த நிகழ்ச்சி பணத்துக்காகவோ வீடு பெறுவதற்காகவோ நடத்தப்பட்டதில்லை. அவருடன் பணியாற்றியவர்கள் விருப்பப்படிதான் இந்த நிகழ்ச்சி நடந்தது என அந்தக் குடும்பத்துக்கு நெருங்கிய வட்டாரம் ஃபில்மிபீட் தமிழிடம் தெரிவித்தது. இதுதவிர்த்து நடிகர் சிவக்குமாரும் பத்து லட்சம் ரூபாய் காசோலையை அந்த நிகழ்ச்சியில் வழங்கியது குறிப்பிடத்தக்கது. மேலும் நிகழ்ச்சி நடப்பதற்கு முதல் நாளே முத்துக்குமாரின் மனைவி ஜீவலட்சுமி பெயரில் அந்த வீட்டுக்கான பத்திர பதிவு நடந்ததும் பாராட்டுக்குரிய ஒன்று.


Click it and Unblock the Notifications











