தர்மத்தையும் செய்து குடும்பத்தையும் காத்த மயில்சாமி.. சொத்து மதிப்பு எவ்வளவு தெரியுமா?
சென்னை: மறைந்த நகைச்சுவை நடிகர் மயில்சாமியின் சொத்து மதிப்பு குறித்த தகவல் வெளியாகியிருக்கிறது. அதனை கேள்விப்பட்ட ரசிகர்கள் தர்மமும் செய்து குடும்பத்தையும் காத்திருக்கிறார் என புகழ்ந்துவருகின்றனர்.
தமிழ் சினிமாவின் முன்னணி நகைச்சுவை நடிகர்களான வடிவேலு, விவேக் உள்ளிட்டோருடன் இணைந்து நகைச்சுவையில் அதகளம் செய்தவர் மயில்சாமி. நகைச்சுவை நடிகராக மட்டுமின்றி பல குரல் மன்னனாகவும் திகழ்ந்தவர். அதோடு மட்டுமில்லாமல் காமெடி டைம் உள்ளிட்ட நிகழ்ச்சியையும் தொகுத்து வழங்கியவர் மயில்சாமி.

மாரடைப்பால் உயிரிழந்த மயில்சாமி
தீவிர சிவபக்தரான மயில்சாமி கடந்த சனிக்கிழமை இரவு முழுவதும் சிவராத்திரிக்காக விழித்திருக்கிறார். கடந்த ஞாயிற்றுக்கிழமை காலை அவருக்கு மாரடைப்பு ஏற்பட்டு உயிர் பிரிந்தது. அதனையடுத்து அவரது உடலானது வடபழனியில் இருக்கும் மின் மயானத்தில் தகனம் செய்யப்பட்டது. அவரது உயிரிழப்பு திரையுலகினரையும், ரசிகர்களையும் பெரும் சோகத்தில் தள்ளியிருக்கிறது.

உதவி என்றாலே மயில்சாமிதான்
சினிமாவில் நடிப்பவர்களில் சிலர் உதவி செய்யாமலும்; சிலர் உதவி செய்தும் கொண்டிருப்பார்கள். ஆனால் உதவி செய்வதையே தனது இன்னொரு தொழிலாக வைத்திருந்தவர் மயில்சாமி. தன்னிடம் இருக்கும் பணத்தில் பெரும்பாலும் மற்றவர்களுக்காக செலவழிப்பவர் மயில். அப்படி அவர் செய்த உதவிகள் குறித்து ஏராளமானோர் மயில்சாமி இறந்த பிறகு வெளிப்படுத்திவருகின்றனர்.

மயில்சாமி குறித்து விவேக் பேசியது
மறைந்த நகைச்சுவை நடிகர் விவேக் மயில்சாமி குறித்து பேசிய வீடியோ இணையத்தில் ட்ரெண்டானது. அந்த வீடியோவில், "ஒருமுறை தமிழ்நாட்டில் விவேக் ஓபராய் உதவி செய்ததை அறிந்த மயில்சாமி நேராக அவரை சந்தித்து தான் அணிந்திருந்த தங்க சங்கிலியை அணிவித்துவிட்டு வந்தார். அதேபோல், ஆதித்யா ஹோட்டலில் ஒரு புத்தாண்டுக்கு பாடல் பாடிக்கொண்டிருந்தவருக்கு தன்னிடம் இருக்கும் எல்லா பணத்தையும் கொடுத்துவிட்டு என்னிடம் ஆட்டோவுக்கு 50 ரூபாய் வாங்கி சென்றார்" என கூறியிருந்தார்.

உதவி செய்வதற்காக நகைகளை அடகு வைத்த மயில்சாமி
அதேபோல், கொரோனா காலத்தில் பாதிக்கப்பட்ட ஏழைகளுக்காக தன்னிடம் இருக்கும் பணத்தில் அவர்களுக்கு தேவையான பொருள்களை வாங்கி கொடுத்திருக்கிறார். ஒருகட்டத்தில் கையில் இருக்கும் பணம் தீர்ந்துவிட்டது. அதனையடுத்து கடன் வாங்கி உதவி செய்திருக்கிறார். கடனும் ஏறிவிட என்ன செய்வதென்று தெரியாமல் திகைத்த மயில்சாமி வீட்டில் இருந்த நகைகளை அடமானம் வைத்து உதவி செய்த தகவலும் வெளியானது.

பட்டுப்புடவை எடுத்துக்கொடுத்த மயில்சாமி
அம்பாசமுத்திரம் அம்பானி படத்தில் நடித்தபோது மயில்சாமிக்கு ஒருநாள் சம்பளம் 14,000 ரூபாய். அந்த சம்பளத்தை வாங்கிக்கொண்டு தன்னுடன் நடித்த சம்பளம் கம்மியான நடிகர்களுக்கு பட்டுப்புடவை எடுத்துக்கொடுத்தாராம். இதனை நடிகர் சென்ராயன் தற்போது வெளிப்படுத்தி நெகிழ்ந்துபோயிருக்கிறார். இப்படி பலருக்கும் தன்னால் முடிந்த அளவுக்கு உதவிகளை செய்துவந்திருக்கிறார் மயில்சாமி.

மயில்சாமியின் சொத்து மதிப்பு
இந்நிலையில் பல உதவிகளை செய்த மயில்சாமியின் சொத்து மதிப்பு குறித்த தகவல்கள் தற்போது வெளியாகியிருக்கின்றன. அதன்படி மயில்சாமிக்கு சாலிகிராமத்தில் ஒரு வீடும்; சென்னையில் இன்னொரு வீடு இருப்பதாகவும், 5 கார்களும், 7 இருசக்கர வாகனங்களும் என அவரது மொத்த சொத்து மதிப்பு 18 கோடி ரூபாய் இருக்கும் எனவும் கூறப்படுகிறது.
இதனை கேள்விப்பட்ட ரசிகர்கள் உதவி செய்து குடும்பத்தை நட்டாற்றில் விட்டுப்போகும் பலர் இருக்கும் நிலையில் உதவியும் செய்து குடும்பத்தையும் பாதுகாத்த மயில்சாமி உண்மையில் உயர்ந்தவர்தான் என நெகிழ்ச்சியுடன் குறிப்பிட்டுவருகின்றனர்.


Click it and Unblock the Notifications











