மயில்சாமியின் மரணத்திற்கு காரணம் இதுதான்.. மருத்துவர்கள் கூறிய ஷாக் நியூஸ்!
சென்னை : நடிகர் மயில்சாமிக்கு திடீரென மாரடைப்பு ஏற்பட என்ன காரணம் என்பதை மருத்துவர்கள் அலசி ஆராய்ந்து தெரிவித்துள்ளனர்.
தாவணிக்கனவுகள் படத்தில் கூட்டத்தில் ஒருவராக யாருக்கும் தெரியாமல் நின்ற மயில்சாமி, பலருக்கும் அள்ளி அள்ளி உதவி செய்து மக்கள் மனதில் நீங்காத இடத்தை பிடித்துவிட்டார்.
மழை, வெள்ளம் போன்ற பேரிடர் காலங்களில் உதவ முன் வரும், முதல் கை இவருடையதாகத்தான் இருக்கும்.

நடிகர் மயில்சாமி
30 ஆண்டு காலம் சினிமாவில் நகைச்சுவை நடிகராக,குணச்சித்திர கதாபாத்திரத்தில் நடித்து பிரபலமானார் மயில்சாமி. 57 வயதே ஆன மயில்சாமி சாலிகிராமத்தில் மனைவி மற்றும் இரண்டு மகன்களுடன் வசித்து வந்தார். உதவி என்று கேட்டு வந்தவர்களுக்கு இல்லை என்று சொல்லாமல் தன்னிடம் இருந்ததை கொடுத்து உதவிய மயில்சாமி, தமிழ்நாட்டில், சமீபத்தில் நடந்த சட்டமன்ற பொதுத்தேர்தலில் விருகம்பாக்கம் தொகுதியில் சுயேச்சையாக விசில் சின்னத்தில் போட்டியிட்டு 1,435 வாக்குகளை பெற்றார்.

மாரடைப்பால் உயிரிழந்தார்
கடந்த ஞாயிற்றுக்கிழமை மகா சிவராத்திரியை முன்னிட்டு கோவளத்தில் உள்ள பிரசித்தி பெற்ற மேகநாதேஸ்வரர் கோவிலில் தூங்காமல் கண்விழித்து சிவனுக்கு நடந்த மூன்று கால பூஜையையும் பார்த்துவிட்டு காலையில் வீடு திரும்பும்வழியில், நெஞ்சுவலி என கூறிக்கொண்டே சரிந்துள்ளார். இதையடுத்து, போரூர் ராமச்சந்திரா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவரை மருத்துவர்கள் பரிசோதனை செய்துவிட்டு ஏற்கனவே இறந்துவிட்டதாக அறிவித்தனர்.

நேற்று இறுதிச்சடங்கு
அவரது உடல் சாலிகிராமத்தில் பொதுமக்களின் அஞ்சலிக்காக வைக்கப்பட்டு நேற்று பிற்பகல் 12.30 மணி அளவில், வடபழனி மின்மயானத்தில் தகனம் செய்யப்பட்டது. அவரது மரணம் திரைத்துறையில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியது. ரஜினி, நாசர், கார்த்திக், சூரி, ஜெயராம் ரமேஷ், ரேகா, கோவை சரளா என பலரும் கலந்து கொண்டு கண்ணீர் மல்க அவரது உடலுக்கு அஞ்சலி செலுத்தினார்கள்.

அது காரணமாக இருக்கலாம்
மயில்சாமிக்கு திடீரென மாரடைப்பு ஏற்பட்டதற்கான காரணம் குறித்து பல மருத்துவர்கள் அலசி ஆராய்ந்து வருகின்றனர். அதில், ஊடகம் ஒன்றுக்கு பேட்டி அளித்த மருத்துவர் ஒருவர், மயில்சாமிக்கு ஏற்கனவே மூன்று முறை இதய அறுவை சிகிச்சை நடந்துள்ளதால், அவர் கவனமாக இருந்து இருக்க வேண்டும். சாதாரணமாகவே ஒரு மனிதன் 8 மணி நேரம் தூங்கவேண்டும். அதுவும், இதய நோய் உள்ளவர்கள் 8 மணி நேரம் கட்டாயம் தூங்க வேண்டும் என்றார். ஆனால், மயில்சாமி சிவராத்திரிக்கு கண்விழித்து வழிபாடு நடத்தியது, மிகவும் சத்தமான இடத்தில் இருந்ததுக்கூட காரணமாக இருக்கலாம் என மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.


Click it and Unblock the Notifications











