The Kerala Story: உயர்நீதிமன்றத்தில் ஒப்புக்கொண்ட தி கேரளா ஸ்டோரி தயாரிப்பாளர்... ஆனாலும் தடை இல்லை
திருவனந்தபுரம்: கடும் சர்ச்சைகளுக்கு மத்தியில் தி கேரளா ஸ்டோரி திரைப்படம் இன்று வெளியானது.
சுதிப்தோ சென் இயக்கியுள்ள தி கேரளா ஸ்டோரி படத்தை வெளியிட பல இடங்களிலும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது.
இந்தப் படத்துக்கு தடை விதிக்க வேண்டும் என கேரள உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டிருந்தது.
இதனையடுத்து இன்று கேரள உயர்நீதிமன்றத்தில் நடந்த விசாரணையில் தி கேரளா ஸ்டோரி தயாரிப்பாளர் தரப்பில் விளக்கம் கொடுக்கப்பட்டுள்ளது.

தி கேரளா ஸ்டோரி படத்துக்கு தடை இல்லை:இந்தியில் சுதிப்தோ சென் இயக்கியுள்ள தி கேரளா ஸ்டோரி திரைப்படம் இன்று பல மொழிகளில் வெளியாகியுள்ளது. இந்தப் படத்தின் டீசர், ட்ரெய்லர் வெளியான போதே பல தரப்புகளில் இருந்தும் எதிர்ப்புகள் கிளம்பின. கேரளாவைச் சேர்ந்த 32000 பெண்கள் வெளிநாட்டில் மதமாற்றம் செய்யப்படுவதாகவும், அதன்பின் ஐஎஸ் தீவிரவாத அமைப்பில் இணைந்து சதிவேலைகளில் ஈடுபடுவது போலவும் காட்டப்பட்டு இருந்தது.
இந்த காட்சி தான் தி கேரளா ஸ்டோரி படத்தின் எதிர்ப்புக்கும் காரணமானது. இந்நிலையில், இன்று கேரளா, தமிழ்நாடு உட்பட இந்தியா முழுவதும் தி கேரளா ஸ்டோரி திரைப்படம் வெளியாகியுள்ளது. அதா ஷர்மா, சித்தி இத்னானி உள்ளிட்ட பலர் இந்தப் படத்தில் நடித்துள்ளனர். கர்நாடகாவில் தேர்தல் பிரசாரம் செய்துவரும் பிரதமர் மோடி தி கேரளா ஸ்டோரி திரைப்படத்தை பாராட்டி பேசி வருவதும் குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில், தி கேரளா ஸ்டோரி படத்துக்கு தடை கோரிய வழக்குகள் கேரள உயர்நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தன. நாகரேஷ், சோபி தாமஸ் அடங்கிய அமர்வு இந்த வழக்குகளை விசாரணை செய்தது. அப்போது தி கேரளா ஸ்டோரி டீசரில் இடம்பெற்றுள்ள ‛‛கேரளாவைச் சேர்ந்த 32 ஆயிரம் பெண்கள் மதமாற்றம் செய்யப்பட்டு ஐஎஸ் தீவிரவாத அமைப்பில் இணைக்கப்பட்டதாக" என்ற வசனம் குறித்து ஆட்சேபனை தெரிவிக்கப்பட்டது.
இதனையடுத்து தி கேரளா ஸ்டோரி டீசரில் உள்ள இந்த வசனங்களை நீக்க தயாரிப்பாளர் தரப்பில் இருந்து சம்மதம் சொல்லப்பட்டது. அதேநேரம், இந்தப் படத்துக்கு தடைவிதிக்க முடியாது எனவும் கேரள உயர்நீதிமன்றம் தெரிவித்துள்ளது. அதாவது, தி கேரளா ஸ்டோரி படத்துக்கு சென்சார் சர்டிபிகேட் வழங்கப்பட்டுள்ளது. மேலும் ட்ரெய்லரில் குறிப்பிட்ட சமூகம் குறித்து தவறான வகையில் எதுவும் இல்லை. அதோடு நிகழ்வுகள் அனைத்தும் கற்பனையாக உருவாக்கப்பட்டவை என தயாரிப்பாளர் தெரிவித்துள்ளார்.
அதனால், தி கேரளா ஸ்டோரி திரைப்படத்துக்கு தடை விதிக்க முடியாது. மேலும், இங்கு கருத்துச் சுதந்திரம் இருக்கிறது,. அவர்கள் படைப்புகளை உருவாக்குவதற்கு கலை சுதந்திரமும் உள்ளது. இந்தப் படத்தில் இஸ்லாம் மதத்துக்கு எதிராக ஏதேனும் இல்லை என்றும், மாறாக ஐஎஸ்ஐஎஸ் பயங்கரவாத அமைப்புக்கு எதிராகவே படம் உள்ளதாகவும் கேரள உயர் நீதிமன்றம் கருத்து தெரிவித்துள்ளது.

இதனிடையே கொச்சியில் உள்ள லுலு மால், சென்டர் ஸ்கொயர் மாலில் உள்ள தியேட்டர் உரிமையாளர்கள் இந்தப் படத்தைப் புறக்கணிக்க முடிவு செய்துள்ளனர். இதேபோல், கொல்லம், பத்தனம்திட்டா, கோட்டயம், இடுக்கி, கண்ணூர், வயநாடு ஆகிய மாவட்டங்களில் உள்ள திரையரங்குகளும் படத்தை திரையிடுவதில்லை என முடிவு செய்யப்பட்டுள்ளது. பெரும்பாலான இடங்களில் தி கேரளா ஸ்டோரி திரைப்படம் வெளியாகவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications











