எங்களை ஸ்டண்ட் யூனியனில் சேர்க்காவிட்டால் தற்கொலை செய்துகொள்வோம்-ஸ்டண்ட் கலைஞர்கள்
Recommended Video
சென்னை: ஸ்டண்ட் யூனியன் தலைவர் சுப்ரீம் சுந்தர், அன்பறிவ் சகோதரர்களுக்கு உதவியாளர்களாக பணியாற்றிய ஸ்டண்ட் கலைஞர்களை சங்கத்தில் இருந்து அதிரடியாக நீக்கினார். பின்பு ஸ்டண்ட் கலைஞர்கள் மன்னிப்பு கடிதம் அளித்து இரண்டு ஆண்டுகள் கடந்தபின்பும், அவர்களை தொடர்ந்து சங்கத்திலிருந்து ஒதுக்கி வைத்திருப்பது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. இதே நிலை தொடர்ந்தால், நாங்கள் குடும்பத்துடன் தற்கொலை செய்து கொள்வதைத் தவிர வேறு வழியில்லையென்று பாதிக்கப்பட்டவர்கள் கூறுகின்றனர்.
அன்பு, அறிவு என்ற இரண்டு ஸ்டன்ட்டு கலைஞர்களுடன், ஸ்டன்ட் யூனியன் தலைவர் சுப்ரீம் சுந்தருக்கு ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக அன்பு, அறிவு ஆகிய இருவரையும் சுப்ரீம் சுந்தர் ஸ்டண்ட்டு சங்கத்திலிருந்து நீக்கினார், அவர்கள் இருவரும் நீதிமன்றத்தில் முறையிட்டனர்

நீதிமன்றம் அன்பு, அறிவு ஆகிய இருவரையும் சங்கத்தில் இணைக்க வேண்டும் என்று தீர்ப்பளித்ததாக கூறப்படுகின்றது. இதனால் அன்பு, அறிவு ஆகிய இருவரும் சினிமா படப்பிடிப்புகளில் ஸ்டண்ட்டு மாஸ்டர்களாக பணியாற்ற தொடங்கினார்கள். மாஸ்டர்களாக உள்ள இவர்களுக்கு உதவியாளர்கள் தேவைப்பட்டனர்.
இதனால் இவர்கள் தங்களுடைய சங்கத்தில் இருந்து கார்த்திக், கணேஷ், கிருஷ்ணமூர்த்தி, வினோத், தினேஷ், திலிப்குமார், பிரபு, சேகர் ஆகியோரை தங்களுக்கு உதவியாளராக பணிக்கு அழைத்துள்ளனர்.

கார்த்திக் என்பவர் இதுகுறித்து சங்க தலைவர் சுப்ரீம் சுந்தரிடம் செல்போன் மூலமாக அனுமதி கேட்டார். சங்கத் தலைவர் சுப்ரீம் சுந்தர் தாராளமாக பணியாற்றுங்கள் என்று கூறினார். அதன் பின்னர் அவர்கள் ஒன்பது பேரும் அன்பு, அறிவு ஆகிய இருவருடனும் உதவியாளராக படபிடிப்பு தளங்களுக்கு சென்று படப்பிடிப்புகளில் கலந்துகொண்டனர்.
இந்நிலையில் இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு திடீரென மேற்குறிப்பிட்ட 9 பேரையும் சங்கத் தலைவர் சுப்ரீம் சுந்தர் சங்கத்திலிருந்து அதிரடியாக நீக்கினார். இதனால் அதிர்ச்சியடைந்த அவர்கள் சுப்ரீம் சுந்தரிடம் சென்று காரணம் கேட்டனர். அதற்கு சுப்ரீம் சுந்தர், சங்கத்தின் விதிமுறைகளை நீங்கள் கடைபிடிக்கவில்லை என்று அவர்களிடம் கூறினார்,
தாங்கள் எந்த தவறும் செய்யாத போதும் பலமுறை அவரிடம் மன்னிப்பு கடிதங்கள் கொடுத்தும் அவர் கண்டு கொள்ளவில்லை. சங்கத்தில் இருந்து நீக்கியதால் அவர்கள் படப்பிடிப்புகளில். கலந்துகொள்ள முடியவில்லை. தொடர்ந்து இரண்டு வருடங்களாக இந்த ஸ்டன்ட்டு கலைஞர்கள் சங்கத்தில் இணைக்கப்படாததால், இந்த தொழிலையே நம்பியிருக்கும் ஒன்பது பேரின் வாழ்வாதாரம் மிகவும் பாதிக்கப்பட்டுள்ளது.
தங்கள் குழந்தைகளுக்கு அன்றாடம் பால், மற்றும் ஒரு வேளை உணவுக்கும் வழியில்லை என்றும், தங்களுக்கு இந்த ஸ்டண்ட் தொழிலை தவிர வேறு வேலைகள் தெரியாது, எனவே சம்மந்தப்பட்ட எங்கள் குடும்பங்களின் நிலைமையை மனதில் வைத்தாவது எங்களை சங்கத்தில் இணைத்துக்கொண்டு நாங்கள் தொடர்ந்து தொழிலில் ஈடுபட உதவ வேண்டும்.
இதே நிலை தொடர்ந்தால், நாங்கள் குடும்பத்துடன் தற்கொலை செய்து கொள்வதைத் தவிர வேறு வழியில்லையென்று பாதிக்கப்பட்டவர்கள் கூறுகின்றனர். தனிப்பட்ட ஒருவரின் காழ்ப்புணர்ச்சி காரணமாக ஒன்பது குடும்பங்கள் வறுமையில் வாடி வருகின்றன.


Click it and Unblock the Notifications











