உலகின் சக்திவாய்ந்த பெண்கள் 2017 பட்டியலில் இடம்பெற்ற ஒரே ஒரு இந்திய நடிகை!
சென்னை : பாலிவுட், ஹாலிவுட் என இரண்டு ஏரியாக்களிலும் ஒரே நேரத்தில் கலக்கி வரும் முன்னணி நடிகை பிரியங்கா சோப்ரா இன்னொரு சிறப்பையும் பெற்றுள்ளார்.
போர்ப்ஸ் பத்திரிக்கை வெளியிட்டுள்ள உலகின் சக்தி வாய்ந்த பெண்கள் பட்டியலில் பிரியங்கா சோப்ராவுக்கு 97-வது இடம் கிடைத்துள்ளது. இந்தப் பட்டியலில் இடம்பெற்ற ஒரே இந்திய நடிகை இவர்தான்.
சொத்து மதிப்பு, சமூகத்தில் மதிப்பு, தான் சார்ந்திருக்கும் தொழிலில் செய்த சாதனை ஆகியவற்றின் அடிப்படையில் போர்ப்ஸ் குழு உருவாக்கிய பட்டியல் இது.

போர்ப்ஸ் இதழ் தரவரிசை
நடிகை பிரியங்கா சோப்ராவுடன், ஐசிஐசிஐ தலைமை செயல் அதிகாரி சாந்தா கோச்சார், HCL என்டர்பிரைசஸ் தலைமை செயல் அதிகாரி ரோஷினி நாடார் மல்ஹோத்ரா, பயோகான் லிமிடெட் கிரண் மசும்தார் ஷா, இந்துஸ்தான் டைம்ஸ் எடிட்டர் ஷோபனா பார்டியா ஆகியோரும் இந்தப் பட்டியலில் இடம்பெற்றுள்ளனர்.

உலகின் சக்திவாய்ந்த பெண்
உலகின் சக்திவாய்ந்த பெண்மணியாக ஜெர்மன் பிரதமர் ஏஞ்செலா மார்கல் தொடர்ந்து 12-வது ஆண்டாக தேர்வாகியுள்ளார். அதைத் தொடர்ந்து இங்கிலாந்து பிரதமர் தெரஸா மே 2-வது இடத்திலும், பேஸ்புக் சி.ஓ.ஓ. ஷெர்ல் சான்ட்பெர்க் 4-வது இடத்திலும், ஜி.இ. நிறுவனத்தின் சி.இ.ஓ. மேரி பாரா 5-வது இடத்திலும் உள்ளனர்.

பிரியங்கா சோப்ரா
உலகின் சக்தி வாய்ந்த பெண்கள் பட்டியலில் பிரியங்கா சோப்ராவுக்கு 97-வது இடம். 2000-ல் உலக அழகி பட்டம் வென்ற பிரியங்கா சோப்ரா இந்திய சினிமாவுக்குள் பிடித்த இடம் தவிர்க்கமுடியாதது. 'ஃபேஷன்' படத்திற்காக தேசிய விருது பெற்றிருக்கிறார் பிரியங்கா. 'குவாண்டிகோ' ஆங்கில சீரியலில் நடித்ததன் மூலம் அமெரிக்க தொலைக்காட்சித் தொடரில் இடம்பெற்ற முதல் இந்திய நடிகை எனும் சிறப்பையும் பெற்றார். குழந்தைகள் உரிமைக்கான நல்லெண்ணத் தூதுவராகவும் செயல்பட்டு வருகிறார் பிரியங்கா சோப்ரா.

சாந்தா கோச்சார்
உலகின் சக்தி வாய்ந்த பெண்மணிகள் பட்டியலில் 32-வது இடத்தில் இருக்கிறார் சாந்தா கோச்சார். ஜோத்பூரில் வளர்ந்து மும்பையில் வசிக்கும் 55 வயதான சாந்தா கோச்சார் ஐசிஐசிஐ-யின் தலைமை செயல் அதிகாரியாகப் பணியாற்றுகிறார். இந்தியாவின் பொருளாதாரத் துறையில் தனது நிறுவனத்தை பல வீழ்ச்சிகளில் இருந்து தடுத்து நிறுத்திய சாந்தா கோச்சார் பத்ம பூஷன் விருதும் பெற்றிருக்கிறார்.

ரோஷ்னி நாடார் மல்ஹோத்ரா
பிரபல தொலைக்காட்சியில் செய்தி தயாரிப்பாளராக கேரியரை துவக்கிய ரோஷ்னி நாடார் பின்னர் தனது தந்தை ஷிவ் நாடாரின் HCL நிறுவனத்திற்கே வந்து பணியாற்றத் தொடங்கினார். HCL என்டர்பிரைசஸ் நிறுவனத்தின் தலைமைச் செயல் அதகாரியாகப் பணியாற்றும் ரோஷ்னி நாடார் சக்தி வாய்ந்த பெண்கள் பட்டியலில் 57-வது இடத்தில் இருக்கிறார்.


Click it and Unblock the Notifications











