முதன்முறை ரத்தமும் சதையுமாக ஜல்லிக்கட்டு வரலாறு: வெற்றிமாறனின் பேட்டைக்காளி வெப் சீரிஸ் விமர்சனம்
சென்னை: விடுதலை படத்தை இயக்கி வரும் வெற்றிமாறன், 'பேட்டைக்காளி' என்ற இணையத் தொடரை தயாரித்துள்ளார்.
ஆஹா ஓடிடியில் வெள்ளிக்கிழமைதோறும் ஒவ்வொரு எபிசோடாக வெளியாகவுள்ள 'பேட்டைக்காளி' வெப் சீரிஸ்ஸை ராஜ்குமார் இயக்கியுள்ளார்.
கலையரசன், கிஷோர், ஷீலா, வேல ராமமூர்த்தி உள்ளிட்ட பலர் நடித்துள்ள பேட்டைக்காளி வெப் சீரிஸின் முதல் எபிசோட் தற்போது ஆஹா ஓடிடியில் வெளியாகியுள்ளது.

யதார்த்தமான ஜல்லிக்கட்டு
இயக்குநர் வெற்றிமாறன் தனது 'கிராஸ் ரூட் ஃபிலிம் கம்பெனி' மூலம் 'பேட்டைக்காளி' வெப் சீரிஸை தயாரித்துள்ளார். ல. ராஜ்குமார் இயக்கியுள்ள இந்த பேட்டைக்காளி வெப் சீரிஸ், ஜல்லிக்கட்டை பின்னனியாகக் கொண்டு உருவாகியுள்ளது. ஆனால், வழக்கமாக தமிழ் சினிமாக்களில் காட்டப்படும் ஹீரோயிசமான ஜல்லிக்கட்டு, அதன் கொண்டாட்டங்கல் இல்லாமல் யதார்த்தமான வாழ்வியலோடு இந்த வெப் சீரிஸ் இருக்கும் என்பதை முதல் எபிசோட் உறுதி செய்துள்ளது.

சூடு பிடிக்கும் கதை
சிவகங்கையை கதைக்களமாக கொண்டு உருவாகியுள்ள இந்தத் தொடர், பண்ணையாருக்கும் அவரிடம் நிலம் கேட்டு தங்களது உரிமைக்காக போராடும் எளிய மக்களின் வாழ்வியலையும் பேசுகிறது. அதில், ஜல்லிக்கட்டு எப்படி பிரதானமான வீர விளையாட்டாக மாறுகிறது, அதன் பின்னணியில் இருக்கும் ஜாதிய அடக்குமுறை, வன்மம், ஜல்லிக்கட்டுப் போட்டியில் கிடைக்கும் கெளரவம், அதற்காக எதையும் செய்யத் துணியும் பிடிவாதம் என பல அடுக்குகளாக விரிகிறது. முதல் எபிசோடிலேயே கதையின் போக்கு இதுதான் என அட்டகாசமான ஒன்லைனை கொடுத்துள்ளார் இயக்குநர்.

பண்ணையாரும் பாண்டியும்
நிலம் கொடுக்க மறுத்த பண்ணையாரின் அதிகாரத்தால் சொந்த ஊரைவிட்டு வெளியேறி கிடைமாடு போட்டு பிழைப்பு நடத்துகிறார் முத்தையாவாக நடித்துள்ள கிஷோர். அவரது மருமகனாக பாண்டி என்ற பாத்திரத்தில் கலையரசன். கபடி, ஜல்லிக்கட்டு என கொம்பு சீவிவிட்ட வீரனாக செல்லும் இடமெல்லாம் யாரிடமாவது வம்பிழுத்து வருகிறார். ஜல்லிக்கட்டுப் போட்டியில் பண்ணையாரின் மாட்டைப் பிடிக்கக்கூடாது என கிஷோரின் ஊராருக்கு கட்டளையிடப்படுகிறது. ஆனால், அதையும் மீறி கலையரசன் பண்ணையாரின் மாட்டை அடக்கி அவரை அவமானப்படுத்துகிறார். இது ஏற்கனவே கிடப்பில் கிடந்த குரோதத்தை தூண்டி விடுகிறது.

உள்ளுக்குள் எரியும் நெருப்பு
கலையரசனை காலில் விழுந்து மன்னிப்புக் கேட்க வைக்க வேண்டும் என கங்கனம் கட்டிக்கொண்டு நிற்கிறார் பண்ணையார் வேல ராமமூர்த்தி. அதற்கு வாய்ப்பே இல்லை என முறைத்துக்கொண்டு நெஞ்சை நிமிர்த்துகிறார் கலையரசன். கலையரசனை காப்பாற்ற கிஷோரின் போராட்டம் ஒருபக்கம் இருக்க, இன்னொருபுறம் பண்ணையாரின் அதிகாரத்தை கைப்பற்ற அவர் மகனுக்கு ஆசை துளிர்விடுகிறது. ஆனால், சாகும்வரை தன் இடத்தை மகனுக்கு விட்டுக்கொடுக்க தயாராக இல்லை என்கிறார் பண்ணையார் வேல ராமமூர்த்தி. அதேவீட்டில் இன்னொரு பகையும் பண்ணையாரை வீழ்த்த சரியான தருணத்தை எதிர்பார்த்து காத்துக்கொண்டிருக்கிறது. அது யார், எதற்காக என்பதெல்லாம் அடுத்தடுத்த எபிசோட்களில் தெரியவரும்.

தரமான படைப்பு
கலையரசன், கிஷோர், வேல ராமமூர்த்தி ஆகியோரின் பாத்திரங்களும் கதையின் நகர்வும் உறுதியாகிவிட்டது. அதேநேரம் இன்னும் ஷீலாவின் கேரக்டர் அறிமுகமாகவில்லை. மேலும், கிஷோரின் வாய்ஸ் ஓவரில் இருந்து தொடங்கும் இந்த கதையில், முதல் காட்சியில் பண்ணையாருக்கு என்ன ஆனது என்பது பற்றியும் தெரியவில்லை. ஜல்லிக்கட்டுப் போட்டிகளை திரைப்படங்களின் வழியே வெறும் வீர விளையாட்டாக மட்டுமே புரிந்துகொண்டுள்ள ரசிகர்களுக்கு, அதன் மறுபக்கத்தை பேட்டைக்காளி வெப் சீரிஸ் காட்டும் என எதிர்பார்க்கலாம். சந்தோஷ் நாரயணனின் இசை, வேல்ராஜின் ஒளிப்பதிவு என டெக்னிக்கலாகவும் மிரட்டுகிறது பேட்டைக்காளி. இனி அடுத்த வாரம் வெளியாகும் இரண்டாவது எபிசோட் எப்படி இருக்கும் என பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.


Click it and Unblock the Notifications