அன்பு கொழிக்கும் வார்த்தைகளால் நம் நெஞ்சை அள்ளி கவிஞர நா.முத்துக்குமார்
சென்னை: நேசமான எழுத்தாளர், பாசமான அப்பா நயமான கவிஞர் என தமிழ் இலக்கிய உலகிலும் திரைத் துறையிலும் தனக்கெனத் தனி முத்திரை பதித்தவர் நா. முத்துக்குமார். இன்று நம்மிடையே இல்லாவிட்டாலும் அவரது பாடல்கள் மூலம் மக்கள் மனதில் என்றும் நிலைத்து நிற்கிறார்.
காஞ்சிபுரம் மாவட்டம் கன்னிகாபுரத்தை சேர்ந்த நா. முத்துக்குமாருக்கு தமிழின் மீது கொண்ட அதீத காதல். அதுவே பச்சையப்பன் கல்லுரியில் எம்.ஏ தமிழ் இலக்கியம் படிக்க வைத்தது.

இயக்குனராகும் ஆசையால் பாலுமகேந்திராவிடம் உதவியாளராக சேர்ந்தார். என்றாலும் கவிதை எழுதும் ஆசை விரல் வழியே வழிந்தோடியது. கிரீடம், வாரணம் ஆயிரம் போன்ற சில படங்களில் வசனகர்த்தாவாகவும் பணியாற்றிய இவர் 1500க்கும் மேற்பட்ட பாடல்கள் எழுதி தமிழ் திரையுலகத்தின் முன்னணி பாடலாசிரியராக வலம் வந்தார்.
வெயில், கஜினி, சிவாஜி, அயன், சிவா மனசுல சக்தி போன்ற படங்களுக்காக சிறந்த படலாசிரியர்க்கான விருது பெற்றார். அவர் பாடல்வரிகள் எழுதிய பாடல்களை தொலைக்காட்சியிலோ அல்லது வானொலியிலோ கேட்காத நாளில்லை எனலாம். அந்த அளவிற்கு அவரின் பாடல்கள் பிரபலம்.
அனைவரின் நெஞ்சங்களையும் அள்ளும் பாடல் இவை, இவை எல்லாம் பிடித்தவை என கணக்கில் அடங்கா அளவிற்கு இனிமையான சிறந்த பாடல்களை நமக்காக தந்துள்ளார். அவரது வளர்ச்சியை தமிழ்த் திரையுலகமே அண்ணாந்து பார்த்தது. மனம் பாரம், சந்தோஷம், துக்கம், கவலை, கண்ணீர், ஆனந்தம், அன்பு, பாசம், இழப்பு, சோகம், காதல், தாய்மை, நட்பு, தோல்வி, வெற்றி என எல்லா உணர்விற்கும் இதம் அளிக்கும் நமது நா. முத்துக்குமாரின் பாடல்கள். நான்கு வயதிலேயே தனது தாயை இழந்த இந்த கவிஞருக்கு தந்தையே அனைத்துமாகி வளர்த்தார்.
அதனால் தான் தந்தையின் அன்பையும், தியாகத்தையும், போற்றும் வகையில் கேடி பில்லா கில்லாடி ரங்கா படத்தில், 'தெய்வங்கள் எல்லாம் தோற்றே போகும் தந்தை அன்பின் முன்னே'என்ற பாடலை எழுதியுள்ளார். இந்தப் பாடலைக் கேட்டு கண்ணீர் வடிக்காதவர்கள் இல்லை. இந்தப் பாடல் இன்றைய இளைஞர் சமுதாயத்திற்கு ஒரு பாடம். அதன் ஒவ்வொரு எழுத்திலும் நம் கவிஞர் முத்துக்குமார் வாழ்ந்து கொண்டே இருப்பார்.
அவரின் பாடல் வரிகளுக்காக சைவம், தங்க மீன்கள் பாடல்களுக்கு தேசிய விருது பெற்றார். 12 ஆண்டுகளாக தமிழ் திரையுலகில் முன்னணி பாடலாசிரியாக இருந்த நா. முத்துகுமார் ஒவ்வொரு ஆண்டும் சராசரியாக 100 பாடல்களை நம் காதுகளுக்கு விருந்தாக படைத்தார்.
தனது 41 வது வயதில் காலனிடம் இருந்து கவிதை பாட அழைப்பு வர இப்புவியை விட்டு மறைந்தார். திரைத்துறையில் தனக்கென ஒரு தனி முத்திரையை பதித்த நா. முத்துக்குமார் அவரது பாடல்கள் மூலம் நம் மனதில் என்றும் நிலைத்து நிற்கிறார் என்றால் மிகையாகாது.


Click it and Unblock the Notifications











