பொன்ராம்-சசிகுமார் கூட்டணியில் எம்.ஜி.ஆர் மகன் படபூஜை - டப்மாஷ் மிருணாளினி ஜோடி
Recommended Video
சென்னை: சசிகுமார் நடிப்பில் பொன்ராம் இயக்கத்தில் உருவாகும் எம்.ஜி.ஆர் மகன் என்ற திரைப்படத்தின் பூஜை நேற்று சென்னையில் நடைபெற்றது. இதில் கதாநாயகியாக டப்மாஷ் புகழ் மிருணாளினி ரவி நடிக்கிறார். வரும் நவம்பரில் படப்பிடிப்பு தொடங்கி அடுத்த ஆண்டு மார்ச் மாதத்தில் படப்பிடிப்பு முடிவடையும் என்று படக்குழுவினர் தெரிவித்துள்ளனர்.
வருத்தப்படாத வாலிபர் சங்கம், ரஜினி முருகன், சீமராஜா ஆகிய முழுக்க முழுக்க கிராமம் சார்ந்து கமர்ஷியல் படங்கள் கொடுத்து வெற்றிப் பெற்றவர் இயக்குநர் பொன்ராம். அவரோடு இப்போது சசிகுமார் கைகோர்த்துள்ளார்.

சசிகுமார் நடிக்க வந்த புதிதில் தொடர்ந்து வெற்றிப்படங்களையே கொடுத்து வந்தார். இறுதியாக இவர் நடித்த குட்டி புலி திரைப்படம் தான் ஓரளவு வெற்றிப்படமாக அமைந்தது. அதற்கடுத்ததாக சசிகுமார் நாயகனாக நடித்து வெளியான பிரம்மா, வெற்றிவேல். பலே வெள்ளையத் தேவா, அசுரவதம், கென்னடி கிளப் என அனைத்துமே தோல்விப் படங்களாகவே அமைந்தன. இவர் நடித்த நாடோடிகள் 2 திரைப்படம் தற்போது படப்பிடிப்பு முடிவடைந்து ரிலீசிற்கு தயாராக உள்ளது.
இந்நிலையில், அடுத்ததாக தான் நடிக்கும் படத்தை நிச்சயம் வெற்றிப்படமாக கொடுக்க வேண்டும் என்ற முனைப்பில் உள்ளார். இதனை அடுத்தே தற்போது இயக்குநர் பொன்ராம் உடன் கூட்டணி சேர்ந்து கிராமத்து கதையம்சம் உள்ள படத்தை உருவாக்கும் முயற்சியில் இறங்கியுள்ளார்.

இருவரின் கூட்டணியில் உருவாகும் படத்திற்கு எம்.ஜி.ஆர் மகன் என்று பெயரிடப்பட்டுள்ளது. இப்படத்தில் நாயகியாக டப்மாஷ் புகழ் மிருணாளினி ரவி நடிக்கின்றார். மேலும், இப்படத்தில் சத்யராஜ், சரண்யா பொன்வண்ணன், சமுத்திரக்கனி, சிங்கம் புலி ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர்.
இப்படத்தின் பூஜை நேற்று சென்னையில் நடைபெற்றது. அதில் நாயகன் சசிகுமார், நாயகி மிருணாளின் ரவி உள்ளிட்ட முக்கிய திரையுலக பிரமுகர்கள் கலந்து கொண்டனர். இதனை பொன்.ராம் தன்னுடைய ட்விட்டர் பக்கத்திலும் வெளியிட்டுள்ளார்.
கதை, திரைக்கதை, வசனம் மற்றும் இயக்கம் ஆகிய பணிகளைக் கவனிக்கிறார் இயக்குநர் பொன்ராம். இந்தப் படத்துக்கு வினோத் ரத்தினசாமி ஒளிப்பதிவு செய்ய, அந்தோனிதாசன் இசையமைக்கிறார். விவேக் ஹர்ஷன் எடிட்டிங் பணிகளையும், துரைராஜ் கலை இயக்குநராகவும் பணிபுரியவுள்ளனர்.
சரவணன் தயாரிப்பு நிர்வாகியாகவும், சித்தார்த், செந்தில்குமார் ஆகியோர் நிர்வாகத் தயாரிப்பாளர்களாக பணிபுரியும் இந்தப் படத்தை ஸ்கிரீன் சீன் மீடியா எண்டர்டெயின்மெண்ட் பிரைவேட் லிமிடெட் நிறுவனம் பெரும் பொருட்செலவில் தயாரிக்கிறது.


Click it and Unblock the Notifications