மெல்ல மெல்ல மூச்சுவிடும் மலையாள சினிமா.. மம்மூட்டியின் ‘தி ப்ரீஸ்ட்’ பட வேலைகள் ஆரம்பமாகிறது!
பாலக்காடு: கேரளாவில் கொரோனா வைரஸ் பாதிப்புகள் பெருமளவு கட்டுக்குள் கொண்டு வரப்பட்டுள்ள நிலையில், மலையாள திரையுலகம் போஸ்ட் புரொடக்ஷன் பணிகளை துவங்க ஆரம்பித்து இருக்கிறது.
கொரோனா பாதிப்பு உலகம் முழுவதும் பல நாடுகளை வாட்டி வதைத்து வருகிறது.
சினிமா உள்ளிட்ட பல துறைகள் கொரோனாவால் சிக்கி சின்னாபின்னமாகி வருகின்றன.

கேரளாவில் கொரோனா
இந்தியாவில் ஆரம்பத்தில் அதிக கோவிட் 19 பாசிட்டிவ் கேஸ்கள் கேரளாவில் தான் கண்டறியப்பட்டன. கேரளா தான் இந்தியாவிலேயே கொரோனா ஹாட்ஸ்பாட் என்றும் பேசப்பட்டது. கட கடவென பரவிய அங்கு பரவிய அந்த நோயை, அம்மாநில அரசு சரியான திட்டமிடலுடன் கையாண்டு விரைவிலேயே கட்டுப்படுத்தி பலரது பாராட்டுக்களையும் பெற்று வருகிறது.

49 படங்கள்
2020ம் ஆண்டு ரிலீஸ் செய்ய இதுவரை தயார் நிலையில் 49 படங்கள் இருக்கின்றன. சமீபத்தில் இதுகுறித்து பேசிய கேரளா தயாரிப்பாளர் சங்க தலைவர் ஆண்டோ ஜோசப், ஆகஸ்ட் மாதத்தில் ஆவது தியேட்டர்கள் திறக்கப்பட்டதால் தான் அத்தனை படங்களையும் ரிலீஸ் செய்ய முடியும் என்றும் இல்லை என்றால் மிகப்பெரிய சிக்கல் ஏற்படும் என்றும் கூறியுள்ளார்.

ஷூட்டிங் முடிந்து
மேலும், ஷூட்டிங் முடிந்து போஸ்ட் புரொடக்ஷன் பணிகளை மட்டும் முடிக்காமல் நூற்றுக்கணக்கான படங்கள் இருப்பதாகவும், அந்த படங்களுக்கு டப்பிங், சவுண்ட் மிக்ஸிங் மற்றும் எடிட்டிங் செய்யவாவது அனுமதி கொடுக்க வேண்டும் என அண்மையில் திரையுலகத்தினர் முதல்வருக்கு வைத்த வேண்டுகோள் பரிசீலனை செய்யப்பட்டது.

தி ப்ரீஸ்ட்
இந்நிலையில், ஜோஃபின் டி சக்கோ இயக்கத்தில் மம்மூட்டி, மஞ்சு வாரியர், நிகிலா விமல் உள்ளிட்டோர் நடிப்பில் உருவாகி வரும் தி ப்ரீஸ்ட் படத்தின் எடிட்டிங் மற்றும் சவுண்ட் மிக்ஸிங் பணிகள் இந்த வாரத்தில் தொடங்க இருப்பதாக தகவல்கள் வெளியாகி இருக்கின்றன. இதனால், கேரள சினிமா மீண்டும் மெல்ல மெல்ல தனது பணிகளை துவங்க ஆரம்பித்து இருக்கிறது.

ஆலோசனையில் இயக்குநர்
இதுகுறித்து பேசிய இயக்குநர் ஜோஃபின் டி சக்கோ, தான் தற்போது பாலக்காட்டில் இருப்பதாகவும், இரு தினங்களுக்குள் எர்ணாக்குளம் சென்று படத்தின் எடிட்டிங் பணிகளை ஆரம்பித்து, முழு படத்தையும் பார்த்தால் மட்டுமே அடுத்து என்ன செய்ய வேண்டும், அரசு அனுமதித்த விதிகளின் படி எப்படி போஸ்ட் புரொடக்ஷன் பணிகளை மேற்கொள்வது என்பது குறித்து ஆலோசிக்க முடியும் எனக் கூறியுள்ளார்.

இன்னும் இருக்கு
லைவ் ரெக்கார்டிங் படம் என்பதால், இந்த படத்திற்கு டப்பிங் வேலை ஏதும் இல்லை என்றும், ஆனால், இரண்டு வாரத்திற்கான ஷூட்டிங் பணிகள் இன்னமும் பாக்கி இருப்பதாகவும், மஞ்சு வாரியர் உள்ளிட்ட சிலரது போர்ஷன்கள் எடுக்கப்பட வேண்டும், லாக்டவுன் முழுவதுமாக தளர்த்தப்பட்டால், தி ப்ரீஸ்ட் படம் முழுமை பெறும் என்கிறார் பெருமூச்சுடன்.


Click it and Unblock the Notifications











