Raja Saab: திரையரங்கில் தீ.. பாதியில் நிறுத்தப்பட்ட தி ராஜா சாப் படம்.. ஓவர் ஆட்டம் போட்ட பிரபாஸ் ரசிகர்கள்
ஒடிசா: பிரபாஸ் நடிப்பில் உருவாகியுள்ள ஃபேண்டஸி ஹாரர் காமெடி திரைப்படமான 'தி ராஜாசாப்' ஒடிசாவில் உள்ள ஒரு திரையரங்கில் திரையிடப்பட்டபோது தீ விபத்து ஏற்பட்டது. இச்சம்பவம் காரணமாக காட்சி தற்காலிகமாக நிறுத்தப்பட்டதுடன், அங்கிருந்த ரசிகர்கள் மத்தியில் சிறிது நேரம் பரபரப்பும் ஏற்பட்டது.
ஒடிசா மாநிலத்தின் ராயகடா மாவட்டத்தில் உள்ள அசோக் டாக்கீஸ் திரையரங்கில் கடந்த வெள்ளிக்கிழமை அதாவது ஜனவரி 9ஆம் தேதி ஒரு காட்சி திரையிட்டபோது இச்சம்பவம் நிகழ்ந்துள்ளது. திரைப்படத்தில் பிரபாஸின் அறிமுகக் காட்சி வந்தபோது, தியேட்டருக்குள் ஒருசில ரசிகர்கள் ஆரத்தி எடுக்கவும், பட்டாசுகளை வெடிக்கவும் முயன்றதாகக் கூறப்படுகிறது. திரைக்கு அருகிலேயே தீ ஏற்பட்டதால், உள்ளே அமர்ந்திருந்த ரசிகர்கள் மத்தியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
பிரபாஸின் திரைத் தோற்றத்தின்போது ரசிகர்கள் கோலாகலமாக கொண்டாடிய நேரத்தில் இச்சம்பவம் நடந்ததாக தகவல்கள் வெளியானது. சமூக வலைத்தள வீடியோக்கள் மற்றும் நேரில் கண்டவர்களின் வாக்குமூலங்கள், திரைக்கு அருகே பட்டாசுகள் வெடிக்கப்பட்டது மற்றும் கொண்டாட்டப் பொருட்கள் வீசப்பட்டதே தீ விபத்துக்குக் காரணம் என்று தெரிவித்துள்ளனர். இந்த சம்பவத்தால் எந்தவித உயிரிழப்பும் ஏற்படவில்லை என்றும், திரையரங்கில் பெரிய அளவில் கட்டட பாதிப்பு இல்லை என்றும் என்டிடிவி அறிக்கை உறுதிப்படுத்தியுள்ளது. மேலும் ஆபத்தை தவிர்க்கும் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக காட்சி உடனடியாக நிறுத்தப்பட்டது.

தி ராஜா சாப்: பிரபாஸ் நடிப்பில் 'தி ராஜாசாப்' திரைப்படம் ஜனவரி 9, 2026 அன்று சங்கராந்தி பண்டிகையை முன்னிட்டு உலகெங்கும் திரையரங்குகளில் வெளியானது. இத்திரைப்படம் பல மாநிலங்களில் ரசிகர்களை ஈர்த்து வருகிறது. மாருதி இயக்கியுள்ள இந்தப் படத்தை பீப்பிள் மீடியா ஃபேக்டரி மற்றும் ஐவி என்டர்டெயின்மென்ட் நிறுவனங்கள் இணைந்து தயாரித்துள்ளன.
படக்குழு:பிரபாஸுடன் சஞ்சய் தத், மாளவிகா மோகனன், நிதி அகர்வால், ரித்தி குமார், ஜரீனா வஹாப், மற்றும் போமன் இரானி உள்ளிட்ட பல நட்சத்திரங்கள் இதில் நடித்துள்ளனர். எஸ். தமன் இசையமைக்க, கார்த்திக் பழனி ஒளிப்பதிவையும், கோட்டகிரி வெங்கடேஸ்வர ராவ் படத்தொகுப்பையும் மேற்கொண்டுள்ளனர்.
புது வெர்ஷன்: இப்படம் ஃபேண்டஸி, திகில் மற்றும் நகைச்சுவை அம்சங்களின் கலவையாகும். தனது பாட்டி கங்கம்மாவுடன் வாழ்ந்து வரும் 'ராஜாசாப்', குடும்பத்தின் கடந்த காலத்துடன் தொடர்புடைய ஒரு தேடலில் சிக்குகிறார். இது அவரை அதிர்ச்சியூட்டும் ரகசியங்கள் நிறைந்த பழைய மாளிகைக்கு அழைத்துசெல்கிறது. தெலுங்கு மொழியில் வெளியான இந்தத் திரைப்படம், இந்தி, தமிழ், கன்னடம் மற்றும் மலையாளம் ஆகிய மொழிகளிலும் டப் செய்யப்பட்டு வெளியிடப்பட்டுள்ளது. இந்த படத்தின் புது வெர்ஷனை படக்குழு இன்று மாலை முதல் அதாவது ஜனவரி 11ஆம் தேதி முதல் திரையிட்டு வருகிறது.


Click it and Unblock the Notifications











