கௌரி கிஷன் விவகாரம்.. பத்திரிக்கையாளர் போர்வையில் வக்கிர நபர்கள்.. வன்மையாக கண்டித்த நடிகர் சங்கம்!
சென்னை: நடிகை கௌரி கிஷன், புதுமுக நடிகர் ஆதித்யா மாதவன் நடிப்பில் அபின் ஹரிஹரன் இயக்கத்தில் 'அதர்ஸ்' (others) என்ற திரைப்படம் இன்று வெளியாகி உள்ளது. இந்த திரைப்படத்தின் செய்தியாளர் சந்திப்பில், செய்தியாளர் கேட்ட கேள்வி பெரும் விவாதமாகி இருக்கும் நிலையில், தென்னிந்திய நடிகர் சங்கம் இதை கடுமையாக கண்டித்து அறிக்கை வெளியிட்டுள்ளது.
விஜய் சேதுபதி த்ரிஷா நடித்த 96 திரைப்படத்தில் குட்டி ஜானுவாக நடித்து பிரபலமானவர் தான் நடிகை கௌரி கிஷன். இவர் கதாநாயகியாக நடித்துள்ள அதர்ஸ் திரைப்படத்தின் செய்தியாளர் சந்திப்பு கடந்த வாரம் நடந்தது, இப்போது செய்தியாளர் கார்த்திக் ஹீரோவிடம் படத்தில் கதாநாயகியை தூக்கி சுத்துவதுபோல காட்சி இருந்தது, அது உங்களுக்கு கஷ்டமாக இல்லையா என கேட்டார். இந்த கேள்வியால் வேதனை அடைந்த கௌரி கிஷன் நேற்று நடந்த செய்தியாளர் சந்திப்பின்போது பத்திரிகையாளர் கார்த்திக்கிடம் "நீங்கள் தானே எனது எடை என்ன என்று கேட்டது?" என்றார்.
நடிகை கௌரி கிஷன்: அதற்கு முதல் வரிசையில் இருந்த அந்த பத்திரிகையாளர் கார்த்திக், "ஆமாம். நான் கேட்டதில் என்ன தவறு" என்று பதிலளித்தார். "என்ன தவறா? நீங்கள் என் எடையை கேட்டுள்ளீர்கள், உங்கள் எடை என்ன? கூறுகிறீர்களா?" என்று கௌரி கிஷன் கேள்வி எழுப்பினார் இதற்கு மீண்டும் பதிலளித்த அந்த பத்திரிக்கையாளர் தான் கேட்ட கேள்வியில் தவறு இல்லை என்று கூறி குரலை உயர்த்திக் கோபமாகப் பேசினார். அப்போது கௌரி கிஷன், கதாநாயகியின் எடை என்ன என்று கேட்பது மரியாதைக் குறைவான கேள்வி.

வாக்குவாதம்: இந்தக் கேள்விக்கும் இந்த படத்திற்கும் என்ன சம்பந்தம் உள்ளது? எனது கதாபாத்திரத்தைப் பற்றியோ, அதற்காக நான் என்ன செய்தேன் என்பதைப் பற்றியோ ஒரு கேள்வியும் கேட்கப்படவில்லை. எனது எடை என்னவென்று தெரிந்துகொண்டு என்ன செய்யப் போகிறீர்கள்? இதே கேள்வியை ஒரு கதாநாயகனிடம் கேட்பீர்களா?" என்று காட்டமாகப் பேசினார் கௌரி கிஷன். இதனால், கௌரி கிஷன் மற்றும் பத்திரிகையாளருக்கு இடையிலான வாக்குவாதம் வெடித்தது.
நடிகர் சங்கம் கண்டனம்: இது இணையத்தில் பேசுபொருளாகி இருக்கும் நிலையில், தென்னிந்தியாக நடிகர் சங்கம் பத்திரிக்கையாளரை வன்மையாக கண்டித்து அறிக்கை வெளியிட்டுள்ளது. அதில், திரை துறையையும், பத்திரிக்கை துறையையும் பிரிக்கவே முடியாத சகோதரர்கள். நல்ல திரைப்படங்களையும், திறமையான கலைஞர்களையும். உச்சி முகர்ந்து கடைகோடி மக்களிடமும் கொண்டு சேர்க்கும் நீங்கள். நாங்கள் தவறு செய்யும் போதும் சரியான விமர்சனங்களை மிகவும் நாகரீகமாக வெளிப்படுத்தி சரி செய்தும் வருகிறீர்கள். நேற்று நிகழ்ந்த இந்த நிகழ்வு மிகவும் விரும்பத்தகாதது.
வக்கிர நபர்கள்: தமிழ் திரையுலகம் எப்போதுமே பெண்களுக்கு அதிக முக்கியத்துவம் தரும் துறையாகவே விளங்கி வருகிறது. 75 ஆண்டுகளுக்கு முன்பே தமிழ் திரை உலகில் பெண்கள் நடிகைகளாக மட்டுமல்லாமல் இயக்குனராகவும், தயாரிப்பாளராகவும், ஒளிப்பதிவாளர்களாவும் பிரகாசித்துள்ளனர். ஆனால், திரைத்துறையில் ஒரு பெண் நுழைந்து சாதிப்பது என்பது இன்னமும் பெரும் சவாலான ஒன்றுதான். அப்படி பெரும் சவாலை ஏற்று யாராவது சாதித்து விட வேண்டும் என்ற நோக்கத்தில் தான் பெண்கள் திரை துறைக்கு அடி எடுத்து வைக்கின்றனர். அப்படி திரைத்துறைக்கு வரும் பெண்களுக்கு அவர்களுக்கான பாதுகாப்பையும், அவர்கள் தன்மானத்தையும், சுய கௌரவத்தையும் பாதுகாப்பது என்பது நம் எல்லோரது கடமையும் கூட
மோசமான எண்ணம்: ஆனால் பத்திரிக்கையாளர் சந்திப்பில் ஒரு சில வக்கிரமான நபர்கள் பத்திரிக்கையாளர்கள் போர்வையில் நடிகைகளை பார்ப்பது ஏளனமாக கேள்வி கேட்பதும், அவமானப்படுத்துவதும் கவலை அளிக்கிறது. நேற்று எங்கள் சகோதரி ஒருவருக்கு நிகழ்த்த நிகழ்வு, அதே நபரால் சுமார் பத்து ஆண்டுகளுக்கு முன்பு இன்னொரு சகோதரிக்கும் நிகழ்ந்துள்ளது. இன்றைய சூழலில் செல்போன் இருந்தால் ஒரு youtube சேனலை ஆரம்பித்து பத்திரிக்கையாளர்கள் ஆகிவிடலாம், திரை துறையினர் பற்றி அவதூறுகளை ஆபாசமாக பரப்பி பார்வையாளர்களை பெற்றுவிடலாம் என்ற மோசமான நிலை நிலவுகிறது.
இந்த சூழலில் எங்களுக்கு பாதுகாப்பாக இருக்க வேண்டிய பத்திரிக்கை துறையில் இது போன்ற களைகள் முளைத்து உள்ளது. நாம் அனைவரும் ஒன்று கூடி பேசி சரியான முடிவு எடுக்க வேண்டிய கட்டாயத்தை ஏற்படுத்தி உள்ளது. நேற்று எங்கள் சகோதரிக்கு நடந்த சம்பவத்தை நாங்கள் வன்மையாக கண்டிக்கிறோம். இனி எதிர்காலங்களில் இது போன்ற சம்பவங்கள் நடக்காதவாறு கலந்து ஆலோசிக்க தேவையான முன்னேற்பாடுகளை தொடங்குவோம் என தென்னிந்திய நடிகர் சங்கம் அறிக்கை வெளியிட்டுள்ளது.


Click it and Unblock the Notifications











