பத்திரிக்கைகளின் பணி மகத்தானது-ஒத்த செருப்பு சைஸ் 7 ஒளிப்பதிவாளர் ராம்ஜி
Recommended Video
சென்னை: ஒத்த செருப்பு - சைஸ் 7 திரைப்படத்திற்கு கிடைத்திருக்கும் வரவேற்பு எனக்கு ஒரு மிகப்பெரிய உத்வேகத்தையும், மன நிறைவையும், மகிழ்ச்சியையும் தந்திருக்கிறது. இத்தகைய ஒரு அருமையான படைப்பை மக்களிடத்தில் கொண்டு சேர்த்த தங்களது பெரும் பணி மிகவும் போற்றுதலுக்குரியது என்று இப்படத்தின் ஒளிப்பதிவாளர் ராம்ஜி கூறியுள்ளார்.
தமிழ் சினிமா மட்டுமின்றி இந்திய சினிமா உலகமே மிகவும் ஆவலுடன் எதிர்பார்த்து காத்திருந்த பார்த்திபன் ஆல் இன் ஆளாக இருந்து வார்த்தெடுத்த ஒத்த செருப்பு சைஸ் 7 திரைப்படம் வெளியான நாளிலிருந்து இன்று வரை தொடர்ந்து அனைத்து திரையரங்குகளிலும் வெற்றிகரமாக ஓடி நல்ல வசூலை தந்து வருகிறது.

இப்படத்தை பார்த்த அனைத்து திரையுலக ஜாம்பவன்களும் படத்தை பாராட்டி தள்ளிவிட்டனர். அனைத்திற்கும் மேலாக இயக்குநர் சிகரம் பாராதிராஜாவோ, பார்த்திபன் இங்கிருக்கவேண்டிய ஆளே இல்லை. அவரை இந்திய திரையுலகம் சரியாக பயன்படுத்திக்கொள்ளவில்லை என்று வேதனைப்பட்டார்.
இந்நிலையில் ஒத்த செருப்பு சைஸ் 7 திரைப்படத்தின் ஒளிப்பதிவாளர் ராம்ஜி, இத்திரைப்படத்திற்கு எதிர்பார்ப்பிற்கும் மேலாக ஒத்துழைப்பு நல்கிய அனைத்து ஊடகங்களுக்கும் நன்றி தெரிவித்து மடல் எழுதியுள்ளார். அதில் கூறியிருப்பதாவது.
அனைத்து பத்திரிக்கை, தொலைக்காட்சி, ஊடக நண்பர்களுக்கும்
அன்பான வணக்கங்கள்.
ஒத்த செருப்பு - சைஸ் 7 திரைப்படத்திற்கு கிடைத்திருக்கும் வரவேற்பு எனக்கு ஒரு மிகப்பெரிய உத்வேகத்தையும், மன நிறைவையும், மகிழ்ச்சியையும் தந்திருக்கிறது. இத்தகைய ஒரு அருமையான படைப்பை மக்களிடத்தில் கொண்டு சேர்த்த தங்களது பெரும் பணி மிகவும் போற்றுதலுக்குரியது. அதிலும் குறிப்பாக, ஒவ்வொரு தருணத்திலும், எனது உழைப்பையும் நீங்கள் அங்கீகரித்திருப்பது இன்னும் கூடுதல் மகிழ்ச்சி.
மிகச்சிறந்த ஒளிப்பதிவாளரான பி.சி.ஸ்ரீராமிடம் உதவியாளராக எனது திரைத்துறை பயணத்தை துவங்கி, 1996ஆம் ஆண்டில் வள்ளல் என்ற திரைப்படத்தின் மூலம் ஒளிப்பதிவாளராக தமிழ் திரையுலகிற்கு அறிமுகமானேன்.
அதனைத் தொடர்ந்து, மலையாளம், இந்தி உள்ளிட்ட பிற மொழிகளிலும் வணிக ரீதியிலான திரைப்படங்கள், சிறப்பு திரைப்படங்கள் என அனைத்து தளங்களிலும் அயராது இயங்கி வருகிறேன்.
எனது ஒளிப்பதிவில் தமிழில் டும் டும் டும், மவுனம் பேசியதே, ராம், பருத்தி வீரன், ஆயிரத்தில் ஒருவன், மயக்கம் என்ன, தனி ஒருவன், வேலைக்காரன் உள்ளிட்ட படங்களும், ஹிந்தியில் கியா கூல் ஹே ஹம், அப்னா சப்னா மணி மணி உள்ளிட்ட படங்களும், மலையாளத்தில் ஒரு யாத்ரா, மாணிக்கம், டான் பாஸ்கோ உள்ளிட்ட படங்களும் வெளியாகி மிகச் சிறந்த வரவேற்பையும், பாராட்டுதல்களையும் பெற்றிருக்கிறது.
இவையனைத்தும், உங்களது முறையான, ஆத்மார்த்தமான சீரிய பங்களிப்பில்லாமல் சாத்தியமே இல்லை. ஆகையால், இந்த அருமையான, மகிழ்ச்சியான தருணத்தில் உங்கள் அனைவருக்கும் எனது மனமார்ந்த நன்றியினை தெரிவித்து மகிழ்கிறேன்.
என்றும் உங்கள் அன்பை வேண்டும், ஆதரவை போற்றும்,
ராம்ஜி
ஒளிப்பதிவாளர்.


Click it and Unblock the Notifications











