ஆபத்தில் இருக்கும் குழந்தையை மீட்கும் பணி வெற்றி பெற வேண்டும்.. கலங்கும் கமல்ஹாசன்!
சென்னை: ஆழ்துளை கிணற்றில் சிக்கியுள்ள குழந்தையை மீட்கும் பணி வெற்றி பெற வேண்டும் என நடிகர் கமல்ஹாசன் தெரிவித்துள்ளார்.
திருச்சி மாவட்டம் மணப்பாறையை அடுத்த நடுக்காட்டுப்பட்டியை சேர்ந்த பிரிட்டோ, கலாமேரி தம்பதியின் 2 வயதான இரண்டாவது மகன் சுஜித் வில்சன். நேற்று முன்தினம் மாலை வீட்டின் அருகே உள்ள ஆழ்துளை கிணற்றில் விழுந்தான்.
குழந்தையை மீட்கும் பணி மூன்றாவது நாளாக இன்றும் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. ரிக் எந்திரத்தின் உதவியுடன் குழந்தை சிக்கியிருக்கும் ஆழ்துளை கிணற்றின் அருகே குழி தோண்டும் பணி நடைபெற்று வருகிறது.

ஆக்ஸிஜன்
பக்கத்தில் தோண்டப்படும் குழிக்குள் இறங்கி குழந்தையை மீட்டு வெளியே கொண்டு வர மூன்று தீயணைப்பு வீரர்கள் தயார் நிலையில் உள்ளனர். 100 அடிக்கும் கீழே சென்றுள்ள குழந்தைக்கு தொடர்ந்து ஆக்ஸிஜன் கொடுக்கப்பட்டு வருகிறது.

சிறப்பு தொழுகைகள்
மூன்றாவது நாளாக முழு அரசு எந்திரமும் முழுமூச்சுடன் நடுக்காட்டுப்பட்டியில் முகாமிட்டு மீட்பு பணியை துரிதப்படுத்தி வருகிறது. சிறுவன் சுஜித் நல்லபடியாக மீட்கப்பட வேண்டும் என தமிழகம் முழுவதும் இரண்டாவது நாளாக, கோவில்கள், தேவாலயங்கள் மற்றும் பள்ளி வாசல்களில் சிறப்பு தொழுகைகள் நடைபெற்று வருகின்றன.
தொடர் அவலம்
இந்நிலையில் குழந்தையை மீட்கும் பணி வெற்றி பெற வேண்டும் என நடிகர் கமல்ஹாசன் டிவிட்டியிருக்கிறார். இதுதொடர்பாக அவர் பதிவிட்டுள்ள டிவிட்டில், ஆழ்துளைக் கிணற்றில் சிறு குழந்தைகள் விழுவது தமிழகத்தில் ஒரு தொடர் அவலமாக உள்ளது.

அபாரதம் விதிக்கவேண்டும்
ஆபத்தில் இருக்கும் குழந்தையை மீட்கும் பணி வெற்றி பெற வேண்டும். ஆழ்துளைக் கிணறுகளை மூடாமல் விடுவதை குற்றமாக அறிவிக்க வேண்டும். அதற்கு பெருந்தொகையை அபராதமாக அரசு விதிக்க வேண்டும். இவ்வாறு நடிகர் கமல்ஹாசன் தெரிவித்துள்ளார்.


Click it and Unblock the Notifications











