களைகட்ட தொடங்கியிருக்கும் CCL.. படையெடுக்கும் திரை நட்சத்திரங்கள்
சென்னை: திரை நட்சத்திரங்கள் பங்கேற்கும் CCL எனப்படும் செலிபிரிட்டி கிரிக்கெட் லீக்கின் 10ஆவது சீசன் பிப்ரவரி 18ஆம் தேதி தொடங்குகிறது.
இந்தியாவில் இருக்கும் திரை நட்சத்திரங்களை ஒன்றிணைக்கும் போட்டியாக செலிபிரிட்டி கிரிக்கெட் லீக் இருக்கிறது. பல மாநிலங்களை சேர்ந்த திரை நட்சத்திரங்கள் தங்களது கிரிக்கெட் திறனை இந்தத் தொடரில் வெளிப்படுத்துவர். இந்தத் தொடரையும் ரசிகர்கள் ஆவலோடு கண்டுகளிப்பது உண்டு.

செலிபிரிட்டி கிரிக்கெட் லீக் (CCL)
செலிபிரிட்டி கிரிக்கெட் லீக் கடந்த 2011ஆம் ஆண்டு முதல் நடந்துவருகிறது. வருடா வருடம் நடைபெறும் இந்தத் தொடரானது கொரோனாவால் மூன்று வருடங்கள் நடக்காமல் இருந்தது. இந்தச் சூழலில் இதன் 10ஆவது சீசன் பிப்ரவரி 18ஆம் தேதி தொடங்குகிறது. இறுதிப்போட்டி மார்ச் 19ஆம் தேதி ஹைதராபாத்தில் நடக்கிறது.
இதில் சென்னை ரைனோஸ், கேரளா ஸ்டிரைக்கர்ஸ், கர்நாடகா புல்டோசர்ஸ், தெலுங்கு வாரியர்ஸ், மும்பை ஹீரோஸ், பெங்கால் டைகர்ஸ், போஜ்புரி தபாங்ஸ், பஞ்சாப் டி ஷெர் என மொத்தம் 8 அணிகள் பங்கேற்கின்றன.

செலிபிரிட்டி கிரிக்கெட் லீக்கின் நடைமுறை
புள்ளிப்பட்டியலில் முதல் மற்றும் 4ஆவது இருக்கும் அணிகள் முதல் அரையிறுதி போட்டியிலும், 2 மற்றும் 3ஆவது இடத்தில் இருக்கும் அணிகள் 2ஆவது அரையிறுதிப் போட்டியிலும் மோதும். இந்த இரண்டு போட்டிகளுமே இறுதிப்போட்டி நடக்கும் ஹைதராபாத்திலேயே மார்ச் 18ஆம் தேதி நடக்கின்றன.

சென்னை அணியின் விவரம்:
கோலிவுட் சார்பாக சென்னை ரைனோஸ் அணி பங்கேற்கிறது. இந்த அணியில் ஆர்யா, விஷ்ணு விஷால், விக்ராந்த், விஜய் யேசுதாஸ், பரத், ஜீவா, சாந்தனு, சையது உள்ளிட்டோர் இடம்பெற்றிருக்கின்றனர்.
ஆர்யா அணியின் கேப்டனாக நியமனம் செய்யப்பட்டுள்ளார். விஷ்ணுவிஷாலும், விக்ராந்த்தும் அடிப்படையில் கிரிக்கெட் சிறப்பாக விளையாடக்கூடியவர்கள் என்பதால் அவர்கள் மீது ரசிகர்களின் கவனம் திரும்பியுள்ளது.
முன்னதாக 2017ஆம் ஆண்டுக்கு பிறகுச் என்னை ரைனோஸ் அணியிலிருந்து விஷ்ணு விஷாலும், விக்ராந்த்தும் விலகியதும், தற்போது மீண்டும் அணிக்கு திரும்பியிருப்பதும் குறிப்பிடத்தக்கது.

சென்னை கோப்பை வென்ற வரலாறு:
இதற்கு முன் சிசிஎல் ஆரம்பிக்கப்பட்ட வருடமான 2011லும்,, அதற்கு அடுத்த வருடமான 2012லும் தொடர்ந்து இரண்டு முறை சென்னை ரைனோஸ் அணி கோப்பையை வென்று அசத்தியது. ஆனால் அதற்கு அடுத்து நடந்த சீசன்களில் சென்னை அணியால் கோப்பையை வெல்ல முடியவில்லை.
மூன்று ஆண்டுகளுக்கு பின் சிசிஎல் நடப்பதாலும், விஷ்ணு விஷால், விக்ராந்த் ஆகியோர் அணிக்கு திரும்பியிருப்பதாலும் இந்த முறை கோப்பையை வென்று கம்பேக் கொடுக்க வேண்டுமென அணி வீரர்கள் உறுதியாகவும் உற்சாகமாகவும் இருக்கின்றனர். இதற்கிடையே நேற்று சிசிஎல் கோப்பையை அறிமுகப்படுத்தும் விழா நடந்தது. இதில் 8 அணிகளின் கேப்டன்களும் கலந்துகொண்டு கோப்பையை அறிமுகப்பட்டுத்தினர்.


Click it and Unblock the Notifications











