நாயகன் பார்த்துவிட்டு ரஜினி செய்த செயல்.. இயக்குநர் பகிர்ந்த ரகசியம்
சென்னை: நாயகன் படத்தை பார்த்துவிட்டு ரஜினிகாந்த் செய்த செயல் குறித்து இயக்குநர் பி.வாசு மனம் திறந்து பேசிய வீடியோ ட்ரெண்டாகியுள்ளது.
இந்திய சினிமாவின் சிறந்த நடிகர்கள் என்று வரிசைப்படுத்தினால் அதில் கமல் ஹாசன் முதல் மூன்று இடங்களுக்குள் இருப்பார். அந்த அளவுக்கு அவர் தான் ஏற்றிருக்கும் கதாபாத்திரத்திற்காக மெனக்கெடுவார். மிகப்பெரிய வியாபாரம் உடைய ரஜினியே எனது கலையுலக அண்ணா கமல் ஹாசன் என்றுதான் அழைப்பார் என்பது குறிப்பிடத்தக்கது.

கமல் என்றாலே வித்தியாசம்தான்
கமல் ஹாசனை பொறுத்தவரை ஒவ்வொரு சினிமாவுக்கும் தன்னால் முடிந்த வித்தியாசத்தை செய்யக்கூடியவர். அவர் இயக்கும் படங்கள் மட்டுமின்றி அவர் நடிக்கும் படங்களே அப்படித்தான் இருக்கும். தான் தேர்ந்தெடுக்கும் ஒவ்வொரு கதையிலும் புதிதாக ஏதேனும் இருக்கிறதா என்று ஆராய்ச்சி செய்பவர் கமல் ஹாசன். அப்படி அவர் நடித்த பல படங்கள் மாஸ்டர் பீஸாக இருக்கின்றன. அதனால்தான் அவர் உலக நாயகன் என்று அழைக்கப்படுகிறார்.

நாயகன் கமல் ஹாசன் செய்த சம்பவம்
கமல் ஹாசன் நடித்தவைகளில் மிக மிக முக்கியமான படம் நாயகன். மணிரத்னம் இயக்கத்தில் இளையராஜா இசையில் பிசி ஸ்ரீராம் ஒளிப்பதிவில் கடந்த 1987ஆம் ஆண்டு வெளியான படம்தான் நாயகன். இந்தப் படம் வெளியாகி இன்றுவரை மிகச்சிறந்த படங்களில் ஒன்றாக இருக்கிறது. மணிரத்னம் எவ்வளவு பெரிய இயக்குநர் என்பதை ஒட்டுமொத்த இந்தியாவுக்கும் உணர்த்திய படம் நாயகன்.

உண்மை கதையிலிருந்து பிறந்த நாயகன்
நாயகன் படம் முழுக்க முழுக்க மணிரத்னத்தின் கற்பனையிலிருந்து உருவானது அல்ல. அது, வரதராஜ முதலியார் என்ற தமிழர் மும்பைக்கு சென்று தாதாவாக இருந்த உண்மை சம்பவத்தை அடிப்படையாக வைத்து உருவானது. படத்தில் வேலுநாயக்கர் என்ற கதாபாத்திரத்தில் கமல் ஹாசன் நடித்திருப்பார். இன்றுவரை மும்பையை மையப்படுத்தி டான் படங்கள் வந்துகொண்டுதான் இருக்கின்றன. ஆனால் அதில் எதுவும் நாயகன் அருகில்கூட வரமுடியாது அல்லது அவைகளில் நாயகனின் தாக்கம் கொஞ்சமேனும் நிச்சயம் இருக்கும் என பலர் கூறுவதுண்டு.

நாயகன் பார்த்துவிட்டு ரஜினிகாந்த் செய்த செயல்
இந்நிலையில் பிரபல இயக்குநர் பி.வாசு அளித்த பேட்டி ஒன்றில் நாயகன் படம் பார்த்துவிட்டு ரஜினிகாந்த் செய்த செயல் குறித்து பேசியிருக்கிறார். அதில், "நாயகன் படம் மாதிரி நீங்க ஒரு படம்கூட பண்ணல சார்" என்று ரஜினியிடம் சொன்னேன். அதற்கு அவர், 'வாசு உங்களுக்கு ஒன்னு தெரியுமா?.. நாயகன் படத்தை பார்த்துவிட்டு வீட்டுக்கு வந்தேன். வந்ததும் சில பெக்குகளை போட்டேன். ஆனால் எனக்கு எதுவுமே ஏறவில்லை.
உடனே கமலுக்கு ஃபோன் செய்து, 'கமல் மூன்று பெக்குகள் போட்டும் எனக்கு போதை ஏறவில்லை. இந்த போதையைவிட வேலுநாயக்கரின் போதை அதிகம் இருக்கிறது' என்று கூறியதாக சொன்னார்' என வாசு தெரிவித்திருக்கிறார். இந்த வீடியோ தற்போது இணையத்தில் ட்ரெண்டாகியுள்ளது. மேலும், தனது சக போட்டியாளரின் படத்தை பார்த்துவிட்டு அவருக்கே ஃபோன் செய்து பாராட்டும் குணமெல்லாம் ரஜினி போன்ற அரிதான சிலருக்குத்தான் வரும் என ரசிகர்கள் சமூக வலைதளங்களில் கூறிவருகின்றனர்.


Click it and Unblock the Notifications











