கோபி, சுதாகரை மட்டுமில்லை ரஜினிக்கும் மிரட்டல்.. அது தப்பாம்.. ஆணவத்தில் பேசிய தயாரிப்பாளர்
சென்னை: பரிதாபங்கள் கோபியும் & சுதாகர் டீம் சில நாட்களுக்கு முன்பு சொசைட்டி பாவங்கள் என்ற வீடியோவை வெளியிட்டது. அந்த வீடியோ பலரிடமும் பெரிய வரவேற்பை பெற்றது. அதேசமயம் சாதி ஆணவத்தில் இருப்பவர்கள் இந்த வீடியோவுக்கு எதிர்ப்பும் தெரிவித்தார்கள். அந்தவகையில் தயாரிப்பாளர் சௌத்ரி என்பவர் நேற்று ஒரு வீடியோவை வெளியிட்டு கோபிக்கும், சுதாகருக்கும் மறைமுக மிரட்டல் விடுத்தார்.
கவின் என்ற பட்டியலினத்தை சேர்ந்த இளைஞர் தனது சகோதரியை காதலித்ததால்; சாதி ஆணவ திமிரில் சுர்ஜித் என்பவர் வெட்டி படுகொலை செய்தார். இந்த விவகாரம் தமிழ்நாடு முழுவதும் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியது. பலரும் இதற்கு கண்டனங்கள் தெரிவித்தாலும் முற்போக்கு சிந்தனையாளர்கள், திரைத்துறை நட்சத்திரங்கள் என அனைவருமே அமைதியாகத்தான் இருந்தார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
சொசைட்டி பாவங்கள்: ஆனால் பரிதாபங்கள் யூடியூப் சேனலை நடத்திவரும் கோபியும் சுதாகரும் தனது டீமோடு சேர்ந்து சொசைட்டி பாவங்கள் என்ற வீடியோவை வெளியிட்டார்கள். அந்த வீடியோவில் ஆதிக்க சாதியினரின் அட்டூழியங்களை தோலுரித்து காட்டினார்கள். மேலும் கடுமையாக கிண்டலும் செய்திருந்தார்கள். இந்த வீடியோவுக்கு தமிழ்நாட்டில் பெரும்பான்மையானோர் தங்களது ஆதரவை கொடுத்தார்கள்.

மிரட்டிய தயாரிப்பாளர்: ஆனால் தயாரிப்பாளர் சௌத்ரி என்பவர் நேற்று வெளியிட்ட ஒரு வீடியோவில், "யூடியூப் கோமாளிகள் கோபி, சுதாகர் நீங்கள் காமெடி வீடியோக்கள் போடுங்கள், பல விஷயங்களை கிண்டல் செய்யுங்கள் அது எங்களுக்கு தேவையில்லை. சமீபத்தில் நீங்கள் வெளியிட்ட ஒரு வீடியோ எங்கள் சமுதாயத்தை குற்றவாளிகளாக காண்பிக்கிறது. அரசியல் தலைவர்கள் இப்படி பேசினார்கள். அவர்களை அரசியல் ரீதியாக நாங்கள் கண்டிக்கிறோம்.உங்களை போன்ற கோமாளிகளுக்கு என்ன வேலை. யூடியூப் நல்ல தளம். அதில் ஏராளமானோர் நல்ல விஷயங்களை சொல்கிறார்கள். ஆனால் உங்களை மாதிரி கோமாளிகள் இன்னொரு சமுதாயத்தை பற்றி தவறாக பேச யார் உங்களுக்கு எலும்பு துண்டுகள் போட்டது.
குரு பூஜையை பற்றி பேசுகிறீர்கள். அதுபற்றி பேசுவதற்கு உங்களுக்கு என்ன தகுதி இருக்கிறது. நீங்கள் வீடியோ போட வேண்டுமென்றால் வேறு வீடியோ போடுங்க. சமூக பதற்றத்தை உருவாக்கி வைத்திருக்கிறீர்கள். சுர்ஜித் வாழ்க்கை இப்படி போய்விட்டதே என்பதை நினைத்துதான் எங்கள் சமூகம் வருத்தப்படுகிறது. சர்ச்சையாக போய்க்கொண்டிருக்கும் விஷயத்தை இப்படி அவர்கள் எடுத்து செய்வதை எப்படி காவல் துறை பார்த்துக்கொண்டிருக்கிறது" என கேள்வி எழுப்பி மறைமுகமாக மிரட்டியிருந்தார்.
ரஜினியையும் விடாத சௌத்ரி: அவரது இந்த வீடியோவுக்கு அனைவருமே தங்களது கண்டனத்தை தெரிவித்தார்கள். சூழல் இப்படி இருக்க கபாலி பட ரிலீஸின்போதும் சௌத்ரி சர்ச்சையாக பேசிய வீடியோவை ப்ளூ சட்டை மாறன் தனது வீடியோவில் பகிர்ந்திருக்கிறார். அந்த வீடியோவில் பேசிய சௌத்ரி, "கபாலி படத்தில் கால் மேல் கால் போட்டு உட்காருவேன் என்ற வசனம் எங்கள் சமுதாயத்துக்கு எதிரானது. ரஜினியை வைத்து எங்கள் சமுதாயத்துக்கு எதிராக இரஞ்சித் பேச வைத்திருக்கிறார். பா.இரஞ்சித் மன்னிப்பும், ரஜினி வருத்தமும் தெரிவிக்க வேண்டும். அப்படி தெரிவிக்காவிட்டால் போராட்டம் செய்வேன்" என பேசியிருக்கிறார். இந்த வீடியோவையும் எடுத்து போட்டு ட்ரோல் செய்ய ஆரம்பித்திருக்கிறார்கள் நெட்டிசன்கள்.


Click it and Unblock the Notifications











