கோமாளிக்கு சிக்கல்... திருச்சியில் ரிலீஸ் ஆகுமா - தயாரிப்பாளர் விநியோகஸ்தர்கள் மோதல்
சென்னை: திரைப்படத் தயாரிப்பாளர்களுக்கும் விநியோகஸ்தர்களுக்கும் இடையில் ஏற்பட்டுள்ள மனஸ்தாபத்தினால் ஜெயம் ரவி நடித்துள்ள கோமாளி படம் திருச்சியில் ரிலீஸ் ஆவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.
பொதுவாக ஒரு பொருளை வாங்குபவர் இருந்தால் தான் அந்தப் பொருளை தயாரிப்பதில் அர்த்தம் உண்டு. அந்தப் பொருளை விற்பனை செய்து லாபமும் பார்க்க முடியும். இது திரைப்படத் துறைக்கும் மிகச் சரியாக பொருந்தும்.

திரைப்பட தயரிப்பாளர்களுக்கும், பட விநியோகஸ்தர்களுக்கும் இடையில் நல்லுறவு இருக்கும் பட்சத்தில் படங்களை வெளியிடுவதில் எந்த ஒரு தடங்கலும் இருக்காது. அவர்களுக்குள் சில விஷயங்களில் பரஸ்பர புரிதல் (Mutual Understanding) இருக்கவே செய்யும்.
சக்தி ஃபிலிம் ஃபேக்டரி எனும் நிறுவனம் பல திரைப்படங்களை தயரிப்பாளர்களிடம் இருந்து வாங்கி, அதை சென்னை, திருச்சி, கோவை என தமிழகம் முழுவதும் அனைத்து இடங்களிலும் விநியோகஸ்தர்கள் மூலம் விற்பனை செய்பவர்கள்.
அண்மையில் வேல்ஸ் இன்டர்நேஷனல் தயாரிப்பில் வெளியான L.K.G திரைப்படத்தை வெளியீடு செய்ததும் இந்த நிறுவனமே. இதன் உரிமையாளரான சக்தி, தயாரிப்பாளர் கே.இ. ஞானவேல் ராஜா உடன் இணைந்து வெளியிட்ட சிவ கார்த்திகேயன் நடித்த மிஸ்டர்.லோக்கல் படம் சரியாக ஓடாத காரணத்தால் விநியோகர்கள் கடும் நஷ்டம் அடைந்துள்ளார்.
இதில் சக்திக்கும் விநியோகஸ்தர்களுக்கும் இடையில் மனஸ்தாபம் ஏற்பட்டு இனி எதிர்காலத்தில் சக்தி ஃபிலிம் ஃபேக்டரி மூலம் வெளியிடப்படும் எந்த ஒரு திரைப்படத்தையும் திருச்சி திரையரங்குகளில் வெளியிட போவதில்லை என்று விநியோகஸ்தர்களும், திரையரங்கு உரிமையாளர்கள் சங்கமும் கண்டனம் தெரிவித்துள்ளனர்.
இதற்கிடையில் பிரதீப் ரங்கநாதன் இயக்கத்தில் ஜெயம் ரவி மற்றும் காஜல் அகர்வால் நடித்து விரைவில் வெளிவர இருக்கும் படம் கோமாளி.. திரையரங்கு உரிமையாளர்கள் பிரச்சனைகளால் இப்படம் திருச்சியில் வெளியிடுவதில் தடங்கல் ஏற்பட்டுள்ளது. இதற்கு முழு காரணமும் சக்தி தான் என்று ஆணித்தரமாக தெரிவித்துள்ளனர். பொதுவாகவே திருச்சியில் ஒரு படம் நன்றாக ஓடிவிட்டால் அது நிச்சயம் மற்ற இடங்களிலும் வெற்றியடையும் என்பது தமிழ் திரையுலகில் உள்ள நம்பிக்கை.
இந்த பிரச்சனைகளால் பாதிப்புக்குள்ளான தயாரிப்பாளர்கள் அனைவரும் தயாரிப்பாளர்கள் சங்கத்தை நாடியுள்ளனர். அதிர்ச்சியடைந்த தயாரிப்பாளர்கள் சங்க நிர்வாகிகள் இதற்கு கண்டனம் தெரிவித்துள்ளனர். இது போன்ற பிரச்சனைகளால் தமிழ் சினிமா எந்த ஒரு வளர்ச்சியையும் காணாது என்று கவலை தெரிவித்துள்ளனர்.
இதற்கிடையில் ஜி.வி.பிரகாஷ் நடிப்பில் வெளியாகவுள்ள 100% காதல் திரைப்படத்தின் ட்ரைலர் வெளியீட்டு விழாவில் பேசிய ஜெ.எஸ்.கே.சதீஷ் திருச்சி திரையரங்கு உரிமையாளர்கள் மற்றும் விநியோகஸ்தர்களுக்கும் சில விஷயங்கள் தெளிவுபடுத்தினர். மேலும் தயாரிப்பாளர்கள் சங்கம் இதில் தலையிட்டு ஒரு நல்ல தீர்வு கொண்டு வரும் என்று வக்காளித்துள்ளார்.
சக்திக்கும், திருச்சியின் திரையரங்கு உரிமையாளர்களுக்கும், விநியோகஸ்தர்களுக்கும் இடையில் நல்லுறவு ஏற்படுமா, திரைப்படங்கள் தடங்கல் இன்றி திருச்சியில் வெளிவருமா, என்பது பெரும் கேள்விக்குறியாகவே உள்ளது. இதற்கு நிச்சயம் சக்தி சில விஷயங்களை விட்டு கொடுத்து, சில கோரிக்கைகளை நிறைவேற்ற வேண்டும்.
மேலும், திருச்சியின் திரையரங்கு உரிமையாளர்களும், விநியோகஸ்தர்களும் பரஸ்பரம் விட்டு கொடுத்து கொள்ள வேண்டும் என்று தயாரிப்பாளர்கள் சங்கம் சார்பில் கேட்டு கொண்டார். மொத்தத்தில் இந்தப் பிரச்சனைக்கு ஒரு நல்ல தீர்வு கிடைத்து தமிழ் சினிமாவை வளர்ச்சி பாதையில் எடுத்து செல்ல வேண்டும் என்று கேட்டு கொண்டார் ஜெ.எஸ்.கே.சதீஷ்.


Click it and Unblock the Notifications











