தமிழகத்தில் 900 அரங்குகளில் கோச்சடையான்... ஆனால்?
சென்னை: சூப்பர் ஸ்டார் ரஜினி - தீபிகா படுகோன் நடித்த கோச்சடையான் படத்தை கிட்டத்தட்ட தமிழகத்தின் அனைத்து திரையரங்குகளிலும் வெளியிட தயாராக இருப்பதாக திரையரங்க உரிமையாளர்களும் விநியோகஸ்தர்களும் தெரிவித்துள்ளனர்.
ஆனால் வேறு எந்தப் படமும் வெளியாகாத ஒரு தேதியில் கோச்சடையானை வெளியிடுமாறு தயாரிப்பாளர்களுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.

இதனால் கோச்சடையான பொங்கலுக்கு வருவதில் சந்தேகம் நிலவ ஆரம்பித்துள்ளது.
இந்திய நாட்டில் முதன்முறையாக 3டி தொழில்நுட்பத்தில் உருவாகி உள்ள படம் கோச்சடையான். இதில் வரும் பாத்திரங்கள் நிஜ உருவத்துக்கு இணையான மோஷன் கேப்சரிங் முறையில் உருவாக்கப்பட்டுள்ளன. அதே நேரம் பாதி காட்சிகளில் நிஜ பாத்திரங்களும் தோன்றுவதாக அமைக்கப்பட்டுள்ளது.
இத்திரைப்படம் அடுத்த வருடம் பொங்கலுக்கு சில தினங்களுக்கு முன்னதாக ஜனவரி 10ல் வெளியாகும் என கூறப்பட்டது. அதே நாளில் நடிகர் அஜீத் மற்றும் நடிகர் விஜய் ஆகியோரது படங்களும் வருவதாக அறிவிக்கப்பட்டுள்ளன.
எனவே, பாக்ஸ் ஆபீஸ் வசூலில் 3 படங்களின் போட்டியும் அமோகமாக இருக்கும். தமிழ் ரசிகர்களுக்கு இந்த பொங்கல் மிக தித்திப்பானதாகவும் இருக்கும். எனினும், தமிழகத்தில் 3 பெரிய நடிகர்களின் படங்களை வெளியிட போதுமான தியேட்டர்கள் இல்லாத நிலை உள்ளது. தியேட்டர் அதிபர்கள் மற்ற கதாநாயகர்களின் படங்களை விட நடிகர் ரஜினிகாந்தின் கோச்சடையான் படத்திற்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கும் வகையில், 750 திரையரங்குகளை ஒதுக்க முடிவு செய்துள்ளதாக அறிவித்துள்ளனர்.
விஜய் நடிப்பில் ஜில்லா மற்றும் அஜீத் நடிப்பில் வீரம் ஆகிய படங்கள் பொங்கல் வெளியீடாக வரும் என்றும் இதில் எந்தவித மாற்றமும் இருக்காது என்றும் கூறப்படுகிறது.
எனவே கோச்சடையான் பட தயாரிப்பாளர்களிடம் 3 படங்களும் ஒரே நாளில் வெளியானால் அது வசூலில் பாதிப்பை ஏற்படுத்தும் என்று தெரிவித்த திரைப்பட வர்த்தகர்கள், வேறு படங்கள் வெளிவராத நாளில் கோச்சடையான் வெளியானால் 900 அரங்குகள் வெளியிடலாம் என யோசனை தெரிவித்துள்ளனர். இந்த யோசனையைப் பரிசீலித்து முடிவு சொல்வதாக கோச்சடையான் தரப்பு தெரிவித்துள்ளது.
எனினும், வருகிற டிசம்பர் 12ந் தேதி இசை வெளியீடு நிச்சயம் என்றும், அன்றைய தினம் ரிலீஸ் தேதியும் உறுதியாக அறிவிக்கப்படும் என்றும் கோச்சடையான் தயாரிப்பாளர் தெரிவித்துள்ளார்.


Click it and Unblock the Notifications











