ஓடாத படத்துக்கு எதுக்கு கேட்குறீங்க 75 சதவீதம் பங்கு?.. கொந்தளிக்கத் தொடங்கிய தியேட்டர் ஓனர்கள்!
சென்னை: புதிய படங்கள் வெளியாகும் போது விநியோகஸ்தர்கள் அதிக பங்குத் தொகை கேட்டால் இனிமேல் கொடுக்கப் போவதில்லை என்கிற முடிவுக்கு தியேட்டர் ஓனர்கள் வந்து இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.
நடிகர் விஜய் நடிப்பில் இந்த வாரம் வெளியான லியோ படத்துக்கு 80 சதவீதம் வரை ஷேர் கேட்கப்பட்டதாகவும் அதனால் தான் கடைசி வரை ஏஜிஎஸ், ரோகிணி, காசி உள்ளிட்ட பல முன்னணி திரையரங்குகள் படத்தை ரிலீஸ் செய்யவே கையெழுத்திடவில்லை எனக் கூறப்பட்டது.

75 சதவீதம் ரொம்ப ஓவர்: புதிய படங்களுக்கு முதல் வார வசூலில் அதிகபட்சமாக 60 சதவீத ஷேர் விநியோகஸ்தர்களுக்கும் 40 சதவீத ஷேர் தியேட்டர் ஓனருக்கும் செல்ல வேண்டும் என்கிற நிலைப்பாட்டில் தியேட்டர் ஓனர்கள் உள்ளனர். அதிகபட்சமாக 75 சதவீதம் ஷேர் கொடுத்தால் தியேட்டர்கள் கரன்ட் பில், மெயின்டெனன்ஸ் மற்றும் பல பணிகளுக்கு நஷ்டத்தை சந்திக்க நேரிடும் என்கின்றனர்.
60 சதவீதம் தான் ஃபைனல்: லியோ படத்தின் ரிலீஸ் சமயத்திலும் இந்த சிக்கல் நிலவியது. 80 சதவீதம் வரை ஷேர் தொகை கேட்கப்பட்டதாக கூறப்பட்டது. கடைசியில் 75 சதவீதம் பங்கீட்டுத் தொகை என சமரசம் செய்துக் கொண்டு தான் படத்தை வெளியிட்டதாக கூறுகின்றனர். இந்நிலையில், இனிமேல் வெளியாகும் புதிய படங்களுக்கு 60 சதவீதம் பங்கீட்டுத் தொகை தான் கொடுக்க முடியும் என்கிற முடிவுக்கு தனி திரையரங்க உரிமையாளர்களும், மல்டி பிளக்ஸ் தியேட்டர்களும் ஒரு உடன்பாட்டுக்கு வர உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

8 வாரங்கள் கழித்து ஓடிடி: மேலும், 4 வாரத்தில் புதிய படங்களை ஓடிடிக்கு விடுவது பெரும் பாதிப்பை ஏற்படுத்தி வருவதாகவும் 8 வாரத்திற்கு பிறகு தான் படம் ஓடிடியில் வெளியிட வேண்டும் என்றும் 4 வாரத்தில் ஓடிடியில் வெளியாகும் படங்களுக்கு வெறும் 50 சதவீதம் ஷேர் தான் கொடுக்கப்படும் என்கிற பல கட்டுப்பாடுகளை விதிக்க தியேட்டர் ஓனர்கள் முடிவு செய்திருப்பதாக கூறப்படுகிறது. இவர்களின் முடிவுக்கு தயாரிப்பாளர்களும், வினியோகஸ்தர்களும் சம்மதிப்பார்களா? என்கிற கேள்வியும் எழத்தான் செய்கிறது.


Click it and Unblock the Notifications











