இஷ்டப்படிதான் விற்போம்... ஒத்துழைக்க மாட்டோம்! - தியேட்டர் உரிமையாளர்கள் அடம்
Recommended Video

சென்னை: தமிழ் படங்களை டிஜிட்டல் தொழில் நுட்பத்தில் தயாரிப்பாளர்கள் வெளியிட்டு வருகின்றனர். இதற்கு முன்பு படச்சுருள் மூலம் ரிலீஸ் செய்து வந்தனர். ஒரு திரையரங்கில் புதிய படத்தை திரையிட குறைந்த பட்சம் 60000 முதல் ஒரு லட்சம் வரை செலவானது.
இதனால் அன்றைக்கு புதிய படங்களை 85 முதல் 120 தியேட்டடர்களில் மட்டும் தயாரிப்பாளர்கள் வெளியிட முடிந்தது. டிஜிட்டல் முறையில் குறிப்பிட்ட நேரத்தில் போக்குவரத்து அலைச்சல், சிரமம் இன்றி தமிழகம் முழுவதும் A, B, C என அனைத்து சென்டர்களிலும் படங்களைத் திரையிட முடிந்தது.

முன்னணி நடிகர்கள் நடித்த படங்கள் 300 முதல் 500 தியேட்டர்களில் திரையிட்டதன் மூலம் குறைவான நாட்களில் படத்தின் வசூல் அதிகமாகக் கிடைத்தது.
தியேட்டர் ஒன்றுக்கு 20000ம் செலவில் படம் திரையிட தயாரிப்பாளர்களால் முடிந்தது.
டிஜிட்டல் நிறுவனங்கள் படங்களைத் திரையிட வசூலிக்கும் கட்டணத்தை அதிகரித்திருப்பதால் அதனைக் குறைக்க வேண்டும் என்று தயாரிப்பாளர்கள் நீண்ட காலமாகக் கூறி வந்தனர்.
இதற்கு எந்தவொரு சாதகமான பதில் சம்பந்தபட்ட நிறுவனங்கள் கூறவில்லை. ஆந்திரா, தெலுங்கானா, கேரளா, கர்நாடகா ஆகிய தென்னிந்திய திரைப்பட துறையினர் மார்ச் 1 முதல் புதிய திரைப்படங்களை ரிலீஸ் செய்வதில்லை என அறிவித்தனர்.
இவர்களுடன் தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கம் தன்னை இணைத்துக் கொள்கிறது என்று தயாரிப்பாளர்கள் சங்கத் தலைவர் விஷால் அறிவித்தார்.
இந்த அறிவிப்புக்குப் பின் டிஜிட்டல் நிறுவனங்கள் தயாரிப்பாளர் சங்க நிர்வாகிகளுடன் கடந்த 16ம் தேதி பேச்சுவார்த்தை நடத்தியதில் சுமுகமான முடிவு எட்டப்படாததால் மார்ச் 1 முதல் புதிய படங்கள் திரையிடுவதில்லை என்பதில் தயாரிப்பாளர்கள் சங்கம் உறுதியாக உள்ளது.
இந்த நிலையில் பிப்ரவரி 17 அன்று திருச்சியில் நடைபெற்ற திரையரங்கு உரிமையாளர்கள் சங்க கூட்டத்தில் பேசிய பொதுக்குழு உறுப்பினர்கள் பலரும், "விஷால் படம் நடிப்பது, தயாரிப்பதில் கவனம் செலுத்தட்டும். கோடிக்கணக்கில் முதலீடு செய்துள்ள நாங்கள் தியேட்டரில் என்ன (கேன்டின்) விற்க வேண்டும் என்பதைக் கூற வேண்டாம்.
எங்கள் முதலீட்டுக்கு குறைந்தபட்ச வட்டி விகிதத்தில் கூட வருமானமில்லாமல், பெருமைக்கு தியேட்டரை நடத்தி வருகிறோம். ரஜினி, விஜய், அஜித் போன்ற நடிகர்கள் படங்கள் திரையிடுகிற போதுதான் கூட்டம் வருகிறது. அப்போது கிடைக்கும் வருவாயைக் கொண்டு வருடம் முழுவதும் தியேட்டரைப் பராமரிக்க வேண்டிய கட்டாயத்தில் உள்ளோம்.
இந்த லட்சணத்தில் எந்த முன் தயாரிப்பும் இன்றி தியேட்டரை மார்ச் 1 முதல் மூடச் சொல்வது அராஜகமானது," என்றனர்.
சேலம் மாவட்ட தலைவர் ராஜா மற்றும் கோவை மாவட்ட தலைவர் திருப்பூர் சுப்பிரமணி இருவரும் நம்மிடம் கலந்து பேசாமல் வேலை நிறுத்தத்தை அறிவித்த விஷால் முடிவுக்கு ஆதரவு தரக்கூடாது என்றனர்.
இதனால் தயாரிப்பாளர்கள் சங்கம் அறிவித்துள்ள வேலை நிறுத்தத்திற்கு ஆதரவு கிடையாது. என அறிவித்துள்ளது திரையரங்க உரிமையாளர்கள் சங்கம்.
"தியேட்டர்களில் நியாயமாக டிக்கெட் விற்க மாட்டோம், நியாய விலைக்கு கேன்டீன்களில் தின்பண்டம் விற்க மாட்டோம், பார்க்கிங் கட்டணத்தை அரசு நிர்ணயித்தபடி வசூலிக்க மாட்டோம்... எங்கள் இஷ்டப்படிதான் வசூலிப்போம், விற்போம் என்பது தியேட்டர்கள் தரப்பு வாதம். பெருமைக்கு ஏன் தியேட்டர் நடத்த வேண்டும்... லாபம் இல்லை என்றால் மூடிவிட்டுப் போகலாமே... புதியவர்கள் தியேட்டர் கட்டி நடத்தும் நிலை வரட்டும். ஏன் தியேட்டர்களில் மட்டுமே படம் பார்க்க வேண்டுமா என்ன... டிஜிட்டல் ப்ளாட்பாரத்தில் படம் பார்க்கும் முடிவுக்கு பெரும்பாலானவர்கள் வந்த பிறகு, தியேட்டர்காரர்கள் அடம் சினிமாவுக்கு எந்த விதத்தில் நன்மை செய்துவிடும்?", இதுதான் தயாரிப்புத் தரப்பின் இப்போதைய வாதம்.
எது சரி என்பதை படம் பார்க்கும் மக்கள் தீர்மானிக்கும் நாள் நெருங்குகிறது.
-நமது நிருபர்


Click it and Unblock the Notifications











