தியேட்டர்களை திறக்க அனுமதிக்கணும், கேளிக்கை வரியை ரத்து செய்யணும்.. தியேட்டர் அதிபர்கள் கோரிக்கை
சென்னை: திரையரங்குகளை உடனே திறக்க அனுமதி வழங்க வேண்டும் என்று திரையரங்க உரிமையாளர்கள் சங்கம் கோரிக்கை வைத்துள்ளது.
Recommended Video
இது தொடர்பாக தமிழ்நாடு தியேட்டர்கள் மற்றும் மல்ட்டிபிளக்ஸ் உரிமையாளர்கள் ஒரு அறிக்கை விடுத்துள்ளனர். அதில் கூறியிருப்பதாவது:
திரையரங்க தொழில் மூலம் சுமார் 50 ஆயிரம் தொழிலாளர்களுக்கு நேரடியாகவும், மறைமுகமாகவும் வேலை கிடைத்து வந்தது.

வாழ்வாதாரம்
திரையரங்குகள் மூடப்பட்டபின், அவர்களின் வாழ்வாதாரம் கேள்விக்குறியாகி உள்ளது. பிற தொழில்களுக்கு விதிமுறைகளுடன் அனுமதி வழங்கியது போல் திரையரங்க தொழிலை மீண்டும் தொடங்க மத்திய, மாநில அரசுகள் அனுமதி வழங்க வேண்டும். திரையரங்கு உரிமையாளர்கள் கடைப்பிடிக்க வேண்டிய நடைமுறைகளை மத்திய, மாநில அரசுகள் உடனடியாக வெளியிட வேண்டுகிறோம்.

கால அவகாசம்
அரசு வெளியிடும் விதிமுறைகளை நடைமுறைப்படுத்த 2 வார கால அவகாசம் தேவைப்படுவதால், அரசு உடனடியாக விதிமுறைகளை வெளியிட்டு திரையரங்க உரிமையாளர்கள் முன்தயாரிப்பு பணிகளை முடிக்க ஆவன செய்ய வேண்டுகிறோம். தமிழ்நாட்டில் தற்போது 1000 திரையரங்குகள் இயங்கி வருகிறது. இவற்றில் தனி திரையரங்குகள் 700 உள்ளன. 2 மற்றும் அதற்கு அதிகமான திரைகளை கொண்ட ‘மால் மல்டிபிளக்ஸ்‘ 300 உள்ளது.

ஜி.எஸ்.டி. வரி
தற்போது நடைமுறையில் உள்ள உள்ளாட்சி அமைப்புகளுக்கான 8 சதவீத கேளிக்கை வரியை முழுவதுமாக ரத்து செய்ய வேண்டும். இதன் மூலம் டிக்கெட் கட்டணம் குறையும். அதிக எண்ணிக்கையில் மக்கள் படம் பார்க்கும் வாய்ப்பு கிடைக்கும். தனி திரையரங்குகளுக்கான ஜி.எஸ்.டி. வரியை 5 சதவீதம் குறைத்து நிர்ணயம் செய்ய மத்திய அரசு ஆவன செய்ய வேண்டும்.

திருப்பூர் சுப்பிரமணியன்
தற்போது கொரோனா காரணமாக திரையரங்குகள் மூடியுள்ள நிலையில், திரையரங்குகளின் மின் கட்டணத்தில் 50 சதவீத சலுகை தர வேண்டுகிறோம். சொத்து வரியையும் முழுவதுமாக ரத்து செய்ய வேண்டுகிறோம். தமிழகத்தில் காலங்காலமாக இயங்கிவரும் தனித்திரையரங்கு களை காத்திட மத்திய மாநில அரசுகள் எங்கள் கோரிக்கைகளை நிறைவேற்றி தர வேண்டுகிறோம். இவ்வாறு கூறப்பட்டுள்ளது. இதை இந்த சங்கத்தின் தலைவர், திருப்பூர் சுப்பிரமணியன் பொதுச்செயலாளர் பன்னீர் செல்வம், பொருளாளர் இளங்கோவன் ஆகியோர் வெளியிட்டுள்ளனர்.


Click it and Unblock the Notifications











