லாக்டவுனால் 4 மாதம் மூடல்.. தியேட்டர் அதிபர்களுக்கு ரூ.1500 கோடி இழப்பு.. விரைவில் திறக்க கோரிக்கை!
சென்னை: சினிமா தியேட்டர்கள் 4 மாதங்களாக மூடிக்கிடப்பதால், ரூ.1,500 கோடி இழப்பு ஏற்பட்டு உள்ளதாக திரையரங்கு உரிமையாளர் சங்க செயலாளர் பன்னீர்செல்வம் கூறினார்.
Recommended Video
கொரோனா வைரஸ் உலகெங்கும் பரவி வருகிறது. பொதுமக்கள் அதிகம் கூடும் இடங்களில் இந்த நோய் தொற்று எளிதில் பரவும் என்பதால் லாக்டவுன் பிறப்பிக்கப்பட்டுள்ளது.
இந்த வைரஸை கட்டுப்படுத்த அரசு தீவிரமான நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. இருந்தும் இதன் தீவிரம் குறையவில்லை.

படப்பிடிப்புக்கு அனுமதி
இதனால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. உயிரிழப்பவர்களின் எண்ணிக்கையும் உயர்ந்துகொண்டே வருகிறது. இதனால் மக்கள் மத்தியில் பீதி ஏற்பட்டுள்ளது. இருந்தாலும் லாக்டவுனில் இருந்து சில தளர்வுகள் பிறப்பிக்கப்பட்டு, நிறுவனங்கள் இயங்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. சின்னத்திரை படப்பிடிப்புகளுக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.

நான்கு மாதங்களாக
சினிமா ஷூட்டிங்கிற்கு அனுமதி அளிக்கவில்லை. தியேட்டர்களை திறக்கவும் அனுமதிக்கப் படவில்லை. இதற்கிடையே, நான்கு மாதங்களாக தியேட்டர்கள் மூடிக்கிடப்பதால், ரூ.1,500 கோடி இழப்பு ஏற்பட்டு உள்ளதாக திரையரங்கு உரிமையாளர் சங்க செயலாளர் பன்னீர்செல்வம் கூறியுள்ளார். அவர் கூறியதாவது: கொரோனா லாக்டவுன் பிறப்பிக்கப்பட்டு 140 நாட்கள் ஆகிவிட்டன.

படத் தயாரிப்புகள்
திரையரங்கு உரிமையாளர்கள் என்ன செய்வது என்று தெரியாமல், வாழ்வாதாரத்தை இழந்துள்ளனர். இந்த லாக்டவுனால் ரூ.1,500 கோடி இழப்பு ஏற்பட்டு இருக்கிறது. ஒவ்வொரு தியேட்டருக்கும் ரூ.25 லட்சம் இழப்பு ஏற்பட்டுள்ளது. இந்த காலக்கட்டத்தில் படத்தயாரிப்புகள் இல்லாமல் சினிமா சார்பான இழப்பு ரூ.3 ஆயிரம் கோடி இருக்கும் என்று கூறுகிறார்கள்.

விரைவில் திறக்க வேண்டும்
திரையரங்குகளை திறக்க எப்போது அனுமதி வழங்குவார்கள் என்று எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறோம். இப்போது விமானங்கள் இயங்க ஆரம்பித்துவிட்டன. விமானத்தில் நெருக்கமாக அமர்ந்து தான் பயணம் செய்கிறார்கள். அதில் வராத கொரோனா தொற்று, திரையரங்குகளில் எப்படி வரும்?. விரைவில் திரையரங்குகளை திறக்க தமிழக அரசு வழிவகை செய்ய வேண்டும்' என்றார்.


Click it and Unblock the Notifications











