நடிகர் விஜய் ஒரு விஷ வலையில் சிக்கியிருக்கிறார்.. அவருக்கு ஆபத்து நேரிடலாம்.. பகீர் கிளப்பும் எஸ்ஏசி
சென்னை: நடிகர் விஜயை சுற்றி கிரிமினல்கள் இருக்கிறார்கள், இதனால் அவருக்கு ஆபத்து நேரிடலாம் என பகீர் கிளப்பியுள்ளார் எஸ்ஏ சந்திரசேகர்.
இயக்குநரும் நடிகர் விஜயின் தந்தையுமான எஸ்ஏ சந்திரசேகர் நேற்று முன்தினம் அரசியல் கட்சி தொடங்கினார்.
தான் அரசியல் கட்சி தொடங்கியது உண்மைதான் ஆனால் தனது மகனுக்கும் கட்சிக்கும் எந்த சம்பந்தமும் இல்லை என்றார் எஸ் ஏ சந்திரசேகர்.

தொடர்பு இல்லை
அடுத்த சில நிமிடங்களிலேயே இதுதொடர்பாக அறிக்கை வெளியிட்ட விஜய், என் தந்தை எஸ்.ஏ.சந்திரசேகா் அவா்கள் ஒரு அரசியல் கட்சியை ஆரம்பித்துள்ளார் என்பதை ஊடகங்களின் மூலம் அறிந்தேன். அவா் கட்சிக்கும் எனக்கும் நேரடியாகவோ மறைமுகமாகவோ எந்த தொடா்பும் இல்லை.

பணியாற்ற வேண்டாம்
இதன் மூலம் அவா் அரசியல் தொடா்பாக எதிர்காலத்தில் மேற்கொள்ளும் எந்த நடவடிக்கைகளும் என்னை கட்டுப்படுத்தாது என்பதை தெரியப்படுத்திக்கொள்கிறேன். மேலும் எனது ரசிகா்கள், எனது தந்தை கட்சி ஆரம்பித்துள்ளார் என்பதற்காக தங்களை அக்கட்சியில் இணைத்துக்கொள்ளவோ கட்சி பணியாற்றவோ வேண்டாம் என கேட்டுக்கொள்கிறேன் என்றார்.

கட்சியில் இருந்து விலகல்
விஜயின் இந்த அறிக்கை பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. அதனை தொடர்ந்து அந்த கட்சியில் இருந்து எஸ்ஏ சந்திரசேகரின் மனைவியும் விஜயின் தாயாருமான ஷோபா கட்சியில் இருந்து விலகியுள்ளார்.

விஜய்தான் எனக்கு கடவுள்
இந்நிலையில் இயக்குநர் எஸ்ஏ சந்திரசேகர் யூடியூப் சேனல் ஒன்றுக்கு பேட்டியளித்துள்ளார். அதில் எல்லா அப்பா மகனைப் போல எனக்கும் விஜய்க்கும் அவ்வப்போது சண்டை வரும் பேசாமல் இருப்பது சாதாரணமானதுதான். விஜய் தான் எனக்கு கடவுள்.

விஷ வளையத்தில் விஜய்
அதை அவர் விரைவில் புரிந்து கொள்வார். விஜய் என்னை விட புத்திசாலி. அவருக்கு தெரியாத ரகசியம் ஒன்று நடந்து கொண்டிருக்கிறது. அது விரைவில் உடையும். விஜய் ஒரு சிறிய விஷ வளையத்தில் சிக்கியுள்ளார். அவரை சுற்றி கிரிமினல்கள் உள்ளார்கள்.

விஜய்க்கு ஆபத்து நேரிடலாம்
அவர்களால் விஜய்க்கு ஆபத்து ஏற்படலாம். அவரை சுற்றி ஆபத்தான விஷயம் நடந்து கொண்டிருக்கிறது. அதிலிருந்து வெளியே வர வேண்டும். என் பிள்ளையை காப்பாற்ற வேண்டும். அவரை காப்பாற்றவே நான் முயற்சி செய்கிறேன் என கூறியுள்ளார்.

பகீர் கிளப்பிய எஸ்ஏசி
மேலும் விஜய் வெளியிட்ட அறிக்கை, அவர் வெளியிட்ட அறிக்கை இல்லை என்றும் எஸ்ஏ சந்திரசேகர் தெரிவித்துள்ளார். விஜயை சுற்றி ஆபத்து இருப்பதாக அவரது அப்பாவான எஸ்ஏ சந்திரசேகர் கூறியிருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


Click it and Unblock the Notifications











