ஜோதிடர்களுக்கு எதிராக பேசியதால்தான் இறந்தாரா மாரிமுத்து?.. இடுப்புக்கு மேல் பிரச்னை என சொன்னாரே..
சென்னை: Marimuthu (மாரிமுத்து) ஜோதிடர்களுக்கு எதிராக பேசியதால்தான் இயக்குநரும் நடிகருமான மாரிமுத்து உயிரிழந்தார் என்ற பதிவுகள் சமூக வலைதளங்களில் தென்படுகின்றன.
கண்ணும் கண்ணும், புலிவால் ஆகிய படங்களை இயக்கியவர் மாரிமுத்து. அவர் இயக்கிய இரண்டு படங்களுமே சுமாரான வரவேற்பையே பெற்றன.அதனையடுத்து மிஷ்கின் இயக்கிய யுத்தம் செய் படத்தில் நடிகராக அறிமுகமானார்.முதல் படத்திலேயே தனது எதார்த்தமான நடிப்பை வெளிப்படுத்திய மாரிமுத்துவுக்கு தொடர்ந்து பட வாய்ப்புகள் குவிந்தன. அதன்படி முன்னணி குணச்சித்திர நடிகராக வலம் வந்துகொண்டிருந்தார்.

எதிர்நீச்சல்: அதேபோல் சின்னத்திரையிலும் ஒரு கலக்கு கலக்கினார் மாரிமுத்து. சன் டிவியில் ஒளிபரப்பாகும் சீரியலில் ஆதி குணசேகரன் என்ற கேரக்டரை ஏற்றிருக்கிறார். ஆணாதிக்க சிந்தனையுடனும், எப்போதும் திமிராகவும் இருக்கும்படி வடிவமைக்கப்பட்டிருந்த அந்த கேரக்டரை மாரிமுத்து தனது நடிப்பின் மூலம் உச்சக்கட்டத்துக்கு எடுத்து சென்றுவிட்டார். அந்தக் கதாபாத்திரத்திற்கு என்று பலர் ரசிகர்களாக இருக்கின்றனர்.
மாரடைப்பால் உயிரிழப்பு: சூழல் இப்படி இருக்க இன்று காலை சீரியலுக்கு டப்பிங் கொடுத்துக்கொண்டிருந்த மாரிமுத்து ஏதோ அசௌகரியமாக உணர அவரே வண்டியில் சென்று சூர்யா மருத்துவமனையில் அட்மிட் ஆனார். ஆனால் சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்தார். அவரது உயிரிழப்பு ரசிகர்களையும், திரைத்துறையினரையும் சோகத்தில் ஆழ்த்தியிருக்கிறது.
மாரிமுத்து Vs ஜோதிடர்கள்: இதற்கிடையே அவர் உயிருடன் இருந்தபோது நிகழ்ச்சி ஒன்றில் பேசிய மாரிமுத்து, "இந்தியாவை பின்னோக்கி இழுப்பதே இந்த ஜோதிடக்காரர்கள்தான். தமிழ்நாட்டின் தற்போதைய முதலமைச்சர் முதல்வராக முடியாது என இந்தியாவில் உள்ள ஜோசியக்காரனும் சொன்னான். ஆனால் அவர் முதலமைச்சராகிவிட்டார். இப்போது முகத்தை தூக்கி எங்கே வைத்துக்கொள்வீர்கள்" என கேட்டிருந்தார்.
இதுதான் காரணமா?: இந்தச் சூழலில் மாரிமுத்து திடீரென உயிரிழந்ததற்கு அவர் ஜோதிடர்களுக்கு எதிரான பேசியதுதான் காரணம் என சிலர் சமூக வலைதளங்களில் பதிவிட ஆரம்பித்திருக்கின்றனர். அதுமட்டுமின்றி அந்த நிகழ்ச்சியில் பேசிய ஜோதிடர் ஒருவர் மாரிமுத்துவிடம் உங்கள் இடுப்புக்கு மேல் பிரச்னை இருக்கிறது என்றார்.
ஆனால் மாரிமுத்துவோ அதெல்லாம் இல்லை இடுப்புக்கு மேலே இதயம் துடித்துக்கொண்டிருக்கிறது அவ்வளவுதான் என சொல்லியிருந்தார். இதையும் நோட் செய்து சிலர் அந்த ஜோதிடர் சரியாகத்தான் சொல்லியிருக்கிறார். அவர் சொன்னது போலவே மாரிமுத்துவுக்கு மாரடைப்பு வந்திருக்கிறதோ என சொல்லிவருகின்றனர். ஆனால் இதெல்லாம் பொய்தான் அப்படி பார்த்தால் ஜோதிடத்தை காத்திரமாக எதிர்த்து வந்த பெரியார் 94 வயதுவரை வாழ்ந்தாரே என எதிர்கேள்வி கேட்டு ஒரு தரப்பினர் பதிலடி கொடுத்துவருகின்றனர்.


Click it and Unblock the Notifications











